Wednesday 25 July 2012

ஒரே ஒரு பல்சரும் சில நிகழ்வுகளும்


காலை வெயில் சுள்ளென்று அடிக்க வாய்ப்பில்லாத அறையாதலால் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் என்ணமில்லை ஒன்பது மணி வரை சனிக்கிழமை ,இனி எழுந்தாலும் காய்ந்த பூரிதான்.சாப்பிட்டு வந்து படுத்ததுமே அனந்த சயனம் பின் மதியம் சற்று புரண்டு படுப்பது, மதிய உணவை தவிர்த்துவிடலாம், என் கவலையெல்லாம் இரவு விடுதி சாப்பாட்டை நினைத்துதான்,அந்த சொக்கநாதனின் கருணைக் கரம் என்னை அரவணைத்தாலன்றி..

சொக்கா.... உன்ன ஒன்னும் கேக்கல,இந்த ரெண்டு நாள் மட்டும் நைட்டுக்கு  எப்டியாவது  ஒரு ப்ளேட் காளானுக்கு மட்டும் ஏற்பாடு பன்னிடு,வாரம் நடக்கும் வழக்கமான பிரார்த்தனைதான்.

மற்ற நாளாக இருந்தால் சுந்தரம் பல்சரில் எவனையாவது தள்ளிக்கொண்டு போய் மொய் வைக்கலாம்.மிண்ணியல் பிரிவில் பல்சர் வைத்திருக்கும் ஒரே ஆள்,மோட்டார் சுந்தரம்.சனி,ஞாயிறுகளில் பல்சர் விடுதி நண்பர்களுக்கு சிறந்த வாகனமாகவும் பயன்படும்,மூடு சரியிருந்தால் அவனேதான் செலவு,இல்லையென்றால்,

பல்சரை சுந்தர் ஓட்ட,பின்னால் நானும்,நடுவில் பயணியுமாக
"சிக்குனான்டா ஒரு அடிமை"
                                               
கொஞ்ச நாளாக முகம் வாட்டமாகத்தான் இருந்தது அவனுக்கும்,வேறென்ன டாவுதான்.பெண் ப்ளஸ் டூ,கொஞ்சம் ராயல்தான், இவனுக்கு எப்டியும் மசியாது, சிலசம்யம் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு அவள் வீடு வரை செல்வதுண்டு,

"எப்ட்றா மச்சி,உன்னத்தான்டா பாக்குறா அவொ"

"ரொம்ப நாளாவே இப்டித்தான் மச்சி போயிட்டிருக்கு, சீக்கிரமே பேசனும்டா"

"ம்ம்க்கும் அந்த நெனப்பு வேற இருக்கா"

ஏத்திவிட்டு  பார்ப்பதே ஒரு அலாதி சுகம்தான், அடடா.. ஆஹா...

ஆனாலும் இவன் படுத்துகிற இம்சைக்கு அளவு கிடையாது,

"இன்னக்கி நானும் ரெட்டு,அவளும் ரெட்டு"

"அப்டியா... "

"காலைல பார்த்ததுமே வெட்க்கப்பட்டு கீழ குனிஞ்சிக்கிட்டாடா"

" கண்ணு கூசத்தான் செய்யும்"
------------------
"மச்சி இன்னிக்கி எம்மேல கோவமா இருக்கா போல,பார்க்கவே இல்லடா"

"ப்ளஸ் டூ ரிசல்ட் பெயில் ஆயிருப்பா,உனக்குத்தான் அரியர் பத்தோட பதினொன்னு"

"என்னோட நெனப்பிலே படிக்காம போயிட்டாளோ"

"கர்த்தரே"

இலக்கியத்திற்கும் குறைவில்லை,

"மழை விட்ட அந்திப்பொழுது, குளிர்காற்றுடன் சன்னமாக தூறல், பல்சரின் மழைத்துளி நனைத்த கண்ணாடி வழியே சிதறிய பெண் பிம்பம்,மெதுவாக துலங்க மின்னல் கீற்று வெட்டி சென்றதுபோல் மனதில் ஓர் அதிர்வு, அவதான்டா ஏன்டா காதுல ஏதோ சிவப்பா ஒழுகுது"

"ஒன்னுமில்ல நீ கன்டினியூ"

அவ்வபோது கவிதைகளும் உண்டு

"நீ காற்று நான் கீற்று,நீ மரம் நான் உரம்"

"அவ்வ்வ்வ்வ்வ்வ்,முட்டுச்சந்துடா,வழியில்லடா"

இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள காரணம் அவன் என் நண்பன் என்றாலும் கூடவே பல்சரின் பின் உட்க்கார்ந்து நான்கு கிலோமீட்டர் தொலைவு பயனித்து அடையும் அந்த காளான் மஞ்சூரிக்காகவும்தான்.

தினமும் மாலை  சுந்தருடன் பல்சரில் ஆரியபவன் செல்வதே ஒரு இனிய பிரயாணம்தான. எங்களுக்குள் இழையொடும் அந்த கால வெளியை கடந்த நட்பையும் ஓத்துக்கொள்ளத்தான் வேண்டும்.இன்று அந்த பெண்ணிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கப்போவதாக சொல்லியிருந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் ட்ரீட். இன்று தப்பித்து விடலாம்.மதுரை சொக்கநாதன் துணை..
------------------
இனியும் எழாமலிருந்தால் காய்ந்த பூரியும் சந்தேகம்தான்..
சொக்கா....முன்னயே சொல்லிட்டேன், எல்லாம் உன் பொறுப்பு..

மெஸ்சில்  பூரியை கிழங்குடன் பிசைந்து இறக்கிவிட்டு பாதியில் விட்டுப்போன தூக்கத்தை தொடர்ந்து மிண்டும் ஒரு மணிக்கு எழுந்து அன்று மதிய உணவான சாம்பாரையும் தயிரையும் பிணைந்து பீட்ரூட் சேர்த்து மல்லுக்கட்டிவிட்டு உண்டான அயர்வினால் மறுபடியும் விட்டுப்போன தூக்கத்தை தொடர்ந்து முடித்துவிட்டு,

ஒரு வேலை முடிஞ்சுது,இனி ராத்திரிதான்..இன்னிக்கி எவன் சிக்குறானோ...மாப்ள மூஞ்சி வேற கொஞ்ச நாளா பாக்க சகிக்கல, அந்த பொன்னுக்கிட்ட சொல்லப்போறானாம், இன்னிக்கி மெஸ் இட்லிதான். எனக்கில்ல... எனக்கில்ல... சொக்கா.. தருமி கணக்கா புலம்ப வச்சிட்டானுகளே...

"பக்தா"

"அட போய்யா"

"மாப்ள நீயா,வேற நெனப்புல இருந்தேன்டா,சரியா தூக்கமில்ல ராத்த்ரிக்கி"

"அப்டி ஒன்னும் தெரியலையே,மொகரை வீங்கியிருக்கு" 
--------------
வழக்கம்போல பல்சர் சிக்ரி ஆஞ்சனேயர் கோவில் முன் உள்ள குட்டிச்சுவர் அருகே நின்றது.

"வாடா மாப்ள இன்னிக்கி உள்ள போவலாம்" -சுந்தர்

"கோயில் உள்ளையா,டேய் அபச்சாரம், அபச்சாரம், என்ன பேசுற, வாய கழுவு மொதல்ல"

"இல்லடா இன்னிக்கி அந்த பொன்னுக்கிட்ட சொல்லனும்னு சொல்லேன்ல"

"ஐய்யோ முடிவே பண்ணிட்டியா" (எப்டியும் நெகட்டிவ் ரிசல்ட்தான், இட்லியும் சட்னியும்தானா,சொக்கா...)

"சொக்கா நல்லாருக்காடா,புதுசா பார்த்து வாங்குனதுடா"

"ம்ம்ம் என்னது.. நல்லாருக்குடா, கண்டிப்பா அவ உனக்குதான்டா, உனக்காகவே பொறந்தவ அவடா,பத்தரமா பாத்துக்க மச்சி அவள"

"டேய் எங்கிட்டேவா"

"நெசமாத்தான் மாப்ள,அவ ஒன்ன பார்க்கும்போதே அவ மைன்ட் வாய்ஸ நா கேட்ச் பண்ண முடியுதுடா"

"சரி சரி அடங்கு,பார்க்கலாம்"

கடவுளே என்னவெல்லாம் சொல்ல வேன்டியிருக்கு, நரகத்துல எனக்கு சீட் கன்ஃபர்ம்.சற்று நேரம் பேசிவிட்டு மணி ஆறுக்கெல்லாம் பல்சர் ஆர்ய பவனைத் தாண்டி செக்காலை ரோட்டில் மணிக்கு  எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து முத்து மாரியம்மன் கோயிலுக்கு முன் நின்றது.

"வெயிட் பண்றா மாப்ள,கோயில் உள்ள் போயிருப்பா கொஞ்ச நேரத்துல வருவா"

"எப்புட்றா,ஏற்கனவே பேசிட்டியா,அப்டினா இன்னிக்கி ட்ரீட்தான்னு சொல்லு,ராயல் ஹோட்டல் போவலாம்டா"

"இர்றா,நீயே கெளப்பிவிடுவ போல, எல்லாம் டெய்லி மறைஞ்சிருந்து பாக்குறதுதான்,செருப்பு வெளிய கிடக்கு"

"ம்ம்க்கும் வெலங்கும்"
-------------------

சற்று நேரத்திற்க்கெல்லாம் சொன்னது போலவே,கூட தோழியுடன் வந்தாள்,

"மாப்ள வராடா"
  
"ம்ம்ம்  பாத்தேன் "

நண்பனின் காதலி என்றாலும் ஃபிகர்தானே, கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டேன், நெஞ்ச நிமித்தி,புருவத்த தூக்கி வாயை ஒரு மாதிரி கோணலா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மாதிரி செய்ய வேன்டியிருந்தது."என்னலாம் பண்ண வேன்டியிருக்கு"

அவள் இவனை கண்டு கொள்ளவே இல்லையென்றாலும் ஆருயிர் நண்பனை உற்ச்சாக படுத்தும்விதமாக வழக்கம்போலவே

"நம்ம கிட்டதான் பேச வராடா,தைரியமா பேசு,ஆல் திபெஸ்ட்,அவ உனக்குதான்" இது கொஞ்சம் ஓவர் டோஸ்தான்.

சம்பவங்கள்,நகர்ந்து கொண்டிருக்கவே,

திடீரென்று எங்கிருந்தோ புதர் மறைவிலிருந்து வெளிபடும் மிருகம் போல ஒருவன் தென்பட்டு அந்த பெண்ணிடம் சேர்ந்துகொண்டு நடக்க, தோழி விலக,

"இது புதுசால்ல இருக்க,எங்கிட்டிருந்துடா வர்றான்"

"........."

கையில் இருந்த ரோஜாவை அவன் அவளிடம் கொடுக்க,அதை வாங்கி தலையில் அவள் சொருக,உரக்க சிரித்து பேசி நடந்தார்கள் இருவரும்,பேசிய தொணி சுந்தருக்கு சாதகமாக இல்லைதான்.

"இத நீ சொல்லவே இல்லையே"

"கொஞ்ச நாளாத்தான் நானும் அவன இவ கூட பாக்குறேன்"
வெறித்து பார்த்துக்கொண்டிருக்கவே, இருவரும் எங்களை ஒரு கதாப்பாத்திரமாகவே எண்ணாமல் கடந்து சென்றார்கள்.

தெளிவான நீலவானில் கருமேகங்கள் சூழும்போது ஏற்படும் கருமை நிறம்போல முகம் மெல்ல இருண்டது சுந்தருக்கு,

"என்ன மாப்ள இது" 

"எனக்கும் கொஞ்ச நாளா சந்தேகந்தான்,இன்னிக்கி முடிவு தெரிஞ்சிக்கலாம்னுதான்,உனக்கு எதாவது என்னபத்தி உவமை தோணிருக்குமே "

"இல்லடா கொஞ்சம் பொறு,எதுக்கும் சொல்லிப்பாரேன்"

"எதுக்கு நீ கதை எழுதவா?"

தத்தளிப்புடனே நகர்ந்தன சில நொடிகள்.

"ப்ரென்டா இருப்பான்டா,நீ எதுக்கும் போய் சொல்லுடா"
சொல்லிக் கொண்டிருக்கும்போதே,அவள் மட்டும் திரும்பி வந்து,

"அங்கிள் கொஞ்சம் தள்ளுங்க,செருப்பு எடுக்கனும்"

கிழிஞ்சிது புதினா சட்னிதான்,சொக்கா..கவுத்திட்டியே
எங்களை கடந்துபோகும்போது அவள் சுந்தரை ஒரு மாதிரி சிரிப்புடன் ஜாடையாக பார்த்த பார்வை புரியத்தானில்லை.
மேலும் அவன் ரணகள படாமல் இருக்க அந்த இடத்தை விட்டு விலகி  நடத்தி கூட்டிக்கொண்டு சென்றேன்.
           
"மாப்ள... அங்கிள்னு சொல்லிட்டு பாக்குறா பார்த்தியா, படைச்சவனையே ஏமாத்திபுடுவாளுக பாத்துக்க"

"நீ ஒன்னும் சொல்லான்டாம் ,வா இன்னைக்கி ஒரு ஃபுல் அடிச்சாதான் தூக்கம் வரும்"

"என்னடா சொல்ற"

"மறக்கனும்.. வலிக்குது.. அழுதுறுவேன்." என்று கைப்புள்ளை கணக்காக புலம்பியவனை தோளோடு அணைத்துக் கொண்டேன்.

"எல்லாம் அந்த சொக்கன் திருவிளையாடல்"

"என்னது?"

இல்ல மச்சி ஒரு ஃபுல்ல சிக்கன் சைட் டிஷ் சேர்த்து ராவா எறக்கினா சரியாகிடும்னு சொன்னேன்"
------------------------
சற்று நேரத்திற்க்கெல்லாம், சரவண பவனில் இரண்டு ரவுண்ட் முடிந்து அந்த கலிவெறி மிக்க பெருஒலி கேட்டது,

"சர்வர்ர்ர் ஓரு லெக் பீஸ்,ரெண்டு மசால் தோசே பார்சல்ல்ல்"