Wednesday 9 April 2014

பெருந்திணை: பிரிவு ஆற்றாமை


சித்திரை மாத இரவு. தலைக்கு மேல்  நட்சத்திரங்கள் செறிந்து தெளிவாக இருந்தது வானம்.குஞ்சு ரொம்பவே குழப்பமாகத்தான் இருந்தான், எந்த துக்கமோ சந்தோஷமோ அதை அனுபவிப்பதை விட அதை நோண்டி ஆராய்ந்து புதிர் அல்லாததை புதிராக நினைத்து பதில் தேடுகிறேன் என்று தன்னையே குழப்பிக்கறது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது இது நாள்வரை.  செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். சாதாரன நாட்களாக இருந்தால் வானில் அகன்ட வெளியை நோக்கி அவற்றின் புதிர்களுக்கு விடைக்காண முயற்சிக்கலாம். இது அதுவும்  இல்லை. ஆனால் என்னவோ மல்லாக்க படுக்கப் போட்டு பெரியதொரு பாறையை நெஞ்சின் மீது ஏற்றி வைத்தது போல பாரம் கனத்தது. விலக்கும் தோறும் கனக்கும் போல. பாறையாகவே ஆகிவிட்டாலன்றி வேறு மார்க்கம் இல்லை என்று தோன்றியது.

காரணம்  'தனு' தான்.  காதலிக்கத் தொடங்கி அது நிறைவு பெறுவதற்குள் அடுத்த காதல் ஆரம்பித்து விடுவதாலயே காதலால் ஏற்படுகிற காயம் அந்த நிலையெல்லாம் தான் எப்போதோ கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் தனு அப்படி முடிவாக சொன்னதின் பொருளை அவள்தான் சொன்னாளென்று நம்பவே கொஞ்ச நேரம் பிடித்தது, "இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை, நிஜமாவே வலிக்குது" என்று நினைத்துக் கொண்டான்.

ஒரே நிமிடம்தான் அவள் பேசியது.

"வீட்டுக்கு தெரிஞ்சிப் போச்சி,அப்பா எங்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது, அம்மா அழறாங்க, இது இனிமே சரி வராது, வீட்ல ஒத்துக்க மாட்டாங்க, அவங்கள எதிர்த்துலாம் நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல நானும் அத பண்ணமாட்டேன், இதுல யோசிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல எங்க வீட்ல பிடிக்கல அவ்ளோதான், இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத" பதிலுக்கு காத்திராதவளாக பேசி முடித்துவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

பெரிய கவித்துவமான வாக்கியம் மாதிரியோ,உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்து கிடப்பது போலவோ இல்லை, ரொம்ப நாள் யோசித்து சொன்னது மாதிரியும் தெரியல ஆனா இதை வேறு எப்படியும் சொல்ல அவசியம் இல்லைதான். அந்த மாதிரி சொல்லவும் சிரத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூட தெரியவில்லை, காயப்படுத்துற எண்ணம் கூட இருக்கறதா தெரியல. ஆனால் அப்படி எந்தவித  எண்ணமும் இல்லைன்னாலும் காயப்படவேதான் செய்தது.

பொதுவாக பெண்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இவ்வாறு ஒரு முடிவெடுப்பது தெரிந்ததுதான் என்றாலும் காதல்னு வந்தபிறகு அதில் திளைத்து அதே சமயம் இந்த புற உலக பிரக்ஞையோடும் இருப்பது கடினம்தான், மாசத்துக்கு ஒரு தடவ நிதானமா லைட்டா சரக்கு அடிக்கறவன குடிகாரன்னு சொல்லமாட்டோம் இல்லையா அதே மாதிரிதான் பிரக்ஞை அற்றுப்போன மொடாக் குடிகாரனோட நிலைமையத்தான் காதல்னு சொல்லுறோம். அப்படித்தான் காதலித்திருந்தான் குஞ்சுவும். பிரக்ஞை அற்றுப்போய். தனு ஒரு வருடமாகத்தான் பழக்கம், செல்போனில் ஆரம்பித்து அப்படியே காதலாக வளர்ந்துவிட்டிருந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் ஒவ்வொரு அசைவிலும் அவளின் தாக்கம் இருந்தது அல்லது அவனுடைய அசைவின் காரணமே அவளாக இருந்தான்னுதான் சொல்லனும் அவளுக்கும் அப்படித்தான்னும் அல்லது அப்படி இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.பின் அவ்வபோது நேரில் சந்தித்து காதல் கானம் பாடி ஓடி தழுவியும் நழுவியும், பிறந்த நாள் காதலர் தினங்களுக்கு அன்புப் பரிசு பறிமாறுதலுமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் தனு ஆரம்பம் முதலே புலம்பல்தான்,

"அப்பாவுக்கு தெரிஞ்சுதுனா அவ்ளோதான், நா உங்கிட்ட பேசுற மாதிரி யாருகிட்டயும் பேசுனது கிடையாது, இதெல்லாம் கேட்டாங்கனா நானா இப்டினு நினைப்பாங்க நம்பவே மாட்டாங்க, என்ன நல்ல பொன்னா நினைச்சிட்டு இருக்காங்க, இனிமே அடிக்கடிலாம் பேசமாட்டேன், எப்பயாவது தான் "

"இது ஒன்னும் பெரிய தப்பில்லையே நீ வேணா பாரு இன்னும் பத்து வருஷத்துக்கு அப்றம் இந்த கல்யாணம்ன்ற நிகழ்வே அரிதாகிடும், நாம செய்யறது தப்பா சரியானு நமக்கு பிந்தி வர்றவங்கதான் சொல்லனும்"

"நா அம்பது வருஷமானாலும் சரி வீட்ல ஒத்துகிட்டாதான், அவங்க நம்பிக்கையலாம் என்னால கெடுக்க முடியாது, நூறு வருஷம் ஆனாலும் என்ன பொறுத்த வரைல அது வீட்டுக்கு செய்யுற துரோகம்தான்"

இப்படி நிச்சயமில்லாமல் பேச்சு இருந்தாலும் நாளைக்கு பத்து தடவ அழைப்பு, அதற்கு இடையில் குறுஞ்செய்திகளும் வருவது தவறாது.

"நம்ம கல்யாணம் நடக்குமானுலாம் தெரியாது, என்னால ஓடிலாம் வர முடியாது, அப்டி ஏதும் நினைப்புலாம் வச்சிக்காத, வேற பொன்ன கல்யாணம் பண்ணிக்கோ"

ஆனாலும் மொபைல் எடுக்கலனா செமயா கோபம் வரும், "என்ன கழட்டி விட பாக்குறியா, கொண்ணுடுவேன், சரி இதுக்கு பதில் சொல்லு, என்ன புடிச்சிதான் லவ் பண்றியா" இந்த மாதிரி டார்ச்சர்லாம் ஒரு ஆம்பளை தன் வாழ்நாள்ல அனுபவிக்கலனா ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல. அவளின் இந்த புலம்பல்கள் காதலில் இருந்த அந்த ஒரு வருட காலமும் நீடித்து இருந்தது என்பது ஆச்சர்யபடும் விஷயமில்லைதான்.

எப்படியோ ஒரு நாள் மொட்டை மாடியில் செல்ஃபோனில் காதல் ரசம் சமைக்கும்போது ஒரு துளி அவங்க வீட்டுக்குள் தெறித்து பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. வீட்ல மாட்டிக்கிட்டா, குட்டு வெளிப்பட்ட அடுத்த இரண்டு நாட்கள் அவளிடமிருந்து எந்த அரவமும் இல்லை, எத்தனையோ தவிர்க்கப்பட்ட அழைப்புகளும் குறுஞ்செய்திகளுக்கும் பின்னுமாக ஒரே ஒரு பதில் வந்தது, இப்படியாக பிரிந்துவிடலாம் என்று. எதிர்பார்த்துதான். ஆனால் தன்னை சமாதானப் படுத்தும் எண்ணம் துளிக் கூட இல்லாமல் அவள் பேசியதுதான் நிறையவே காயப்படுத்தியது குஞ்சுவுக்கு.

"இதை எப்டி சொன்னா சமாதானம் அடைவேன்னு கொஞ்சமாவது நினைத்து பார்த்திருக்கனும், ஆனா அது மாதிரிலாம் ஒன்னும் தெரியல, சுத்த சுயநலம், எங்கிட்ட எடுத்து சொல்லிருந்தா நானே விலகிப் போயிருப்பேன், அப்போ என்னோட நிலைமை ஒரு பொருட்டே இல்ல அவளுக்கு, ஒரே ஒரு மெசேஜ் மட்டும் போதுமா இருந்திருக்கு, எல்லாத்தையும் மறந்துடுனு எவ்ளோ சுலபமா சொல்லிட்டா அதுவும் ஒரு மெசேஜ்ல, ஃபோன் பண்ணி சொல்லக்கூட பிடிக்கலயோ, அவ சொன்னதை பார்த்தா ஒரு முடிவோடதான் இருக்குற மாதிரி தெரியுது" உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான். ஆத்திரம் பொங்க சுவற்றில் ஓங்கி அறைந்தான், 'விண்'னென்று தெறித்தது வலி. பொறுக்கமுடியாமல் கெட்டவார்தையில் கத்தினான், "த்தா..நாரக்**..தே***..பு***"

அந்த நேரம் பின் வீட்டு மாடியில் ஏதோ அரவம் தெரியவே அமைதியானான். அந்தப் பெண்தான், இது வேற கதை. ஒரு வருடத்திற்கு முன் கண்களால் பேசி அந்த நிலையிலேயே கைவிட்டாயிற்று. இப்போது இந்த நிலைமையில், கொஞ்ச நேரம் சைட் அடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இறுக்கமாக இருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறியது. தென்னைக் கீற்றுகள் சற்று அசையத்தொடங்கியது, வியர்த்திருந்த உடலில்  லேசான குளிர்ந்த காற்று தழுவிச் சென்றது.இதமாகத்தான் இருந்தது, அமைதியானான். அந்தப் பெண் சென்றதுமே மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவ்வளவு எளிதில்  இந்த முடிவை அவளால் எடுக்க முடிகிறதென்றால் அதற்கான சமாதானங்களை அவள் நிச்சயமாக அந்நேரம் உருவாக்கி கொண்டிருக்க வேண்டும். என்னவாக இருக்கும் என்ற புதிரை அவிழ்க்க தொடங்கினான். தனுவுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் என்னையும் பிடிக்கும்தான் ஆனால் இருவரில் யாரென்று வந்தால் சந்தேகமே வேணாம், அந்த நிலைமை இப்போ அவளுக்கு வந்திருக்கலாம், காதலித்த சமயத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட அந்த இனிமையான உரையாடல்கள் அந்த நினைவுகள் கொஞ்சமும் அசைக்கலயா அவளை, அசைத்திருக்கும், அவளின் குடும்பத்தில் இந்த புதிதான பிரச்சணை அவளிடம் ஏற்படுத்திய மாற்றத்தை  அதை தடுக்கும் அளவுக்கு அந்த காதல் நினைவுகள் இல்லை என்பதுதான் உண்மை, காதலிக்கும்போது  பேசினது எல்லாமே உண்மையாக இதயத்திலிருந்துதான் வந்திருக்கனும் என்பதில் சந்தேகமில்லைதான் அதே சமயம் கண்ணு முன்னு தெரியாம காதலிக்கற அளவுக்கு அவள் பேதையும் இல்லை.

மேலும் அவள் வளர்ந்த சூழ்நில வேறு, கட்டுப்பாடான ஒன்று, கலாச்சார விதிமுறைகளை அடிப்படை அறமாக நினைத்து போதிதுக் கொண்டிருக்கும் பெரும்பாலான குடும்பம் போல்தான், அதன் காரணமாக அவளிடமிருந்து அவ்வபோது எழுந்த பயம் கலந்த புலம்பல்களை  நம்பிக்கையான வார்த்தைகளை கூறி சமாதானப் படுத்த முனைந்ததில்லை அது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். சொக்க வைத்து மயக்கி இருக்க வேண்டுமோ? அப்படியே இருந்தாலும் அந்த பேச்சுக்கெல்லாம் மசிபவளும் இல்லை.

"உன்ன பார்க்காம இருக்கவே முடியல, இன்னிக்கு பூரா உன்னதான் நினைச்சிட்டு இருந்தேன், உனக்காக உயிரையே கொடுப்பேன்" இந்தமாதிரி சினிமா வசனங்களுக்கெல்லாம்  "சரி சரி அளக்காத" என்று எரிச்சலான ஒரு பதில் வரும். அப்படிசொன்னது நிஜமாகவே பொய்தான் என்பது வேறு என்றாலும் அவ்வாறு மயக்கும் வார்த்தைகளை எப்படி கூறுவது என்பது கூட தெரியாத அசடனாக குஞ்சு இருந்தான் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.இந்த தியாகத்தின் மூலம் வீட்டில் அவளுடைய பிரச்சணைகள் திர்ந்துவிடும் மாறாக யோசித்து இருந்தால்  பிரச்சணையை எதிர்நோக்கியபடியே வாழ்க்கையை கடக்க வேண்டிவரும்  என்ற எண்ணமே போதுமானது நிராகரிப்பதற்கு, இனி தனுவிடம்  பேசி ஒன்றும் ஆவதிற்க்கில்லை. இதிலிருந்து எந்த பலத்த காயமுமின்றி தப்பிக்க வழி தேடியாக வேண்டும். இவ்வாறு ஒரு நிலைக்கு வந்துவிட்டபோதே அந்த வழியையும் கூடவே கண்டடைந்திருந்தான். காதலில் காயம் ஏற்படாதவாறு விலகுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை அறிந்திருந்தாலும் வேறு சில வழிகள் இருக்கத்தான் செய்கிறது.

குஞ்சு மீதான அவளின் காதலை சந்தேகப்படக்கூடிய அளவுக்கு எதுவும் இந்த ஓராண்டு நடந்தும் விடவில்லை அதனால் அதை நினைத்து சமாதானம் அடையவும் வாய்ப்பில்லை. பழிக்கு பழி வேண்டுமானால் உதவலாம். அதற்கு வன்மத்தை வளர்த்தாக வேண்டும், நயவஞ்சகமாக பழகி, பேசி துரோகம் இழைத்துவிட்டதாகவும் அல்லது தன்னைப்போலவே பல ஆண்களை அவள் ஏமாற்றியிருக்கக்கூடுமென்றும், இது அவளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே கூட இருக்கலாம் என்றும் எதாவது கற்பனை செய்து பார்க்கலாம் ஆனால் தனுவை அப்படி நினைக்கக் கூட மனம் துணியவில்லை. அப்படி நினைக்க முடியாவிட்டாலும் பழி வாங்குவது கொஞ்சம் ஆறுதலாக அமையலாம்.

எப்படி பழிவாங்குவதென்பது இங்கு பெரிய கேள்விதான்.

இந்த இழப்பு அவளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு அவள் வந்திருந்ததனால், கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துவிடும் என்று அவள் சமாதானமாகி இருக்கலாம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னை இழந்ததை பெரிய இழப்பாக நினைத்து வருந்தினாள் என்றால் அதுவே பழிதீர்த்த மாதிரிதான். அப்படி அவளும் நினைக்க வேண்டுமே அவ பேசினத பார்த்தா ஃபீல் பண்ற மாதிரியே தெரியல, இரண்டு நாட்களுக்கு முன் இதே நேரம் எப்படிலாம் பேசிட்டு இருந்தோம்,  இந்நேரம் நினைக்காம இருக்கவே முடியாது, அப்டி எந்த சலனமும் இல்லாமல் இருந்தாளென்றால் அவகிட்ட பார்த்தது எல்லாமே பொய்யாக இருந்திருக்கனும், நிச்சயமா சொல்லலாம், அவளுடைய குணாதிசயங்களுக்கு அவ்வாறு அது இல்லையென்றால் அதிசயம்தான். அவளுக்கு வேற ஒருவனுடன் திருமணமும் நடக்கும், அதற்கு அவள் சம்மதித்தே ஆவாள். நினைக்கவே பயமாகத்தான் இருந்தது, இல்லற வாழக்கையில் விரக்தி ஏமாற்றம் எப்போதாவது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அந்த தருணங்களில் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அதுதான் அவளுக்கு தண்டனையாக இருக்கக்கூடும். ஆம் அதுதான் தனக்கும் ஆறுதலாக அமையும் என்று நினைத்தான் குஞ்சு."அவசரப்பட்டு அவள திட்டி விட்டுட்டாளோ இல்ல டார்ச்சர் பண்ணாளோ அதுவே  விலக்குறதுக்கு ஒரு வலுவான காரணத்தை உண்டு பண்ணிடும், அதுக்கு வாய்ப்பளிக்க கூடாது இந்த இரண்டு நாளைக்கு முன்னாடி எப்டி காதலித்தாலோ அப்படியே பிரியனும், அதுதான் சரியாக இருக்கும்" மார்கத்தை கண்டடைந்தவனாக திருப்தியுற்றான்.

இது பெண்களுக்கு பொதுவாக உள்ள மனநிலை என்றுதான் நினைக்கிறேன் தான் காதலித்து கைவிட்ட ஆண்களும் மறக்காமல் தாடி வளர்த்து திரிய வேண்டும் என்ற ஆசை,உண்மையாகவே உள்ளம் உருகி காதலித்து இருந்தாலும்கூட. அவ்வாறு இல்லாமல் மறுநாளே சகஜ நிலைக்கு திரும்பும் ஆண்கள் பெண்கள் மனதில் நிலைக்காமல் போகிறார்கள். ஏமாத்துறவன்னு கூட நினைக்க வாய்ப்பிருக்கு.ஆனால் தனு அப்படியில்லை, தாடியுடன் அவளை நினைத்து மருகினானென்றால் "இந்த முட்டாளையா லவ் பண்ணோம்" என்று நினைத்து உதறித் தள்ளிவிடுவாள். மிகுதியாக உணர்ச்சிவசப்படவும் கூடாது, அதை சுத்தமாக வெளிப்படுத்தாமலும் இருக்கக்கூடாது. அதே சமயம் காதல் கைகூடாததற்க்கு முழு பொறுப்பை அவள் மீது ஏற்றிவைத்தாகிவிட்டால் பின்னாளில் அவள் நினைத்து வருந்த  ஏதுவாக இருக்கலாம்.

தனு இப்போ எந்த மனநிலையில் இருப்பாள் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். இத்தனை நேரம் அவளிடம் பேசலாமா வேண்டாமா என்று குழப்பதுடனேயே மாடிக்கு வந்தவன் சற்றும் யோசிக்காமல் மொபைலை எடுத்து நம்பரை அழுத்தினான். மறுபக்கம் அழைப்பு ஒலி அடித்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தான்,அவளிடம் முதன்முதலில் பேசியபோதும் இப்படித்தான் இருந்தது,

"ஹலோ" மறுமுனையில் தனு.

".............."

பதட்டமாகத்தான் இருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் ஹலோ சொல்லக் கூட தடுமாறினான். பதற்றத்தில் சற்று முன் சிந்தித்த யாவும் மறந்தே போனது. இப்பவுமே கூட பிரக்ஞை இழந்துதான் போனான், இந்த இரண்டு நாட்கள் வேதனையை அனுபவித்திருந்தாலும் தன்னை இப்படி அலட்சியப்படுத்திப் பேசியதால் இனி அவளிடம் பேசவே போவதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான். ஆனாலும் இப்போது தனுவின் குரலை கேட்டப்பிறகு எதுவுமே எடுபடாமல்தான் போனது, நடக்கப் பழகி தடுக்கி விழுந்த குழந்தை வலி பொறுக்க முடியாமல் தன் அம்மாவிடம் முறையிடுவது போலவே அவனும்,

"என்னால முடியல,மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு,என்னென்னமோ யோசிக்க தோனுது"

"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ"

"இல்ல என்னால மறக்க முடியும்னு தோணல"

"செல்லக்குட்டி... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ, வீடே அமைதியா இருக்கு இங்க யாரும் என் கூட பேச மாட்றாங்க,பழைய மாதிரி அவங்க என் கூட பேசனும் சகஜமாகனும் நீ சரியானாத்தான் நடக்கும் இதெல்லாம்,என்ன மன்னிச்சிடு ப்ளீஸ்"

"என்ன ஏமாத்திட்டல்ல, ஃபோன வையி பேசாத"

"சரி என்ன வேணா சாபம் விட்டுக்கோ,விட்ல நா எப்டிலாம் சண்டை போட்டேன் தெரியுமா,இதுவரை எங்க அப்பாகிட்ட சண்டை போட்டதே இல்ல,ஆனாலும் அவங்க கொஞ்ச கூட அசையல"

"அப்டிலாம் ஒன்னும் சாபம் விடமாட்டேன்"

"சரி எல்லாம் சரியாகிடும்,எனக்கு கொடுத்து வைக்கல அவ்வளவுதான்,இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு"

"சரி வச்சிடு"

இதுதான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை என்பதை நினைக்கவே வேதனையாகத்தான் இருந்தது. தன் பழிக்கு பழி வாங்கும் நினைப்பு இப்போது தகர்ந்தே போனது.நினைத்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இப்போது தோன்றியது. "எப்படிலாம் உருகி காதலித்தோம்,எப்படி என்னால் அவளை அப்படி நினைக்க முடிஞ்சது,ச்சே எவ்வளவு கொடூரமா யோசிச்சிருக்கேன்".

இருந்தாலுமே இது முடிந்துபோனதுதான் ஒருபோதும் அவள் திரும்பி வரப்போவதில்லை அதிசயமாக ஏதும் நிகழ்ந்தாலன்றி. மறக்க கற்றுக்கொண்டாக வேண்டும், முழுவதுமாக. கடினமான காரியம்தான். எதையாவது நினைத்து தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. யோசித்துப் பார்த்தால் அப்படி ஒன்றும்கூட  இருக்கத்தான் செய்தது குஞ்சுவுக்கு.

உண்மைதான் தனு இப்படி போனது எங்கோ ஒரு மூலையில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியிருந்தது என்றால் நம்ப முடியாதுதான். திகைப்பாக இருக்கலாம் ஆனால் அது அப்படித்தான். பொதுவில், ஏமாற்றப் பட்டுவிட்டதாக தெரிந்தாலும் அதை அவ்வாறு எடுத்துக்கொள்ளாமல் வேறுவிதமாக அதாவது தனிமைப் படுத்தப்பட்டதாகவோ நிராகரிக்கப் படுவதாகவோ இல்லை கைவிடப்படுவதாகவோ எழும் எண்ணம் நம்மை முன்னெப்போதும் இல்லாத அளவு சுதந்திரமாக உணரச்செய்கிறது, புத்துணர்ச்சியாகவும்தான்.  அப்படி அதுவரை ஏற்கனவே பழகியும் விட்டிருந்தான்.அப்படியான சமயத்தில் தான் விரும்பியதை செய்ய எது தடையாக இருந்ததோ அந்த கட்டு  உடைந்திருக்கும். இது ஆபத்தான நிலைதான்.அதுநாள் வரை கட்டுப்பாடற்ற சிந்தனையோட்டத்தால் உருவாகியிருந்த தன்னுடைய அகம் பாதிக்கப்படும் என்ற தவறான புரிதலாலேயே இந்த மாதிரியான உறவுகளை தவிர்த்தும் வந்திருந்தான் குஞ்சு. அப்படியொரு நிலையில் இருந்த போதுதான் தனுவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனாலும் மாற்றிக் கொள்ளவுமே தயாரகத்தான் இருந்தான்.  நிலைமை  அப்படி இருக்கையில் யாருக்காக இத்தனை நாள்  தன்னையே நகலெடுத்துக் காட்டிக் கொண்டிருந்தோமோ அவளால் நிராகரிக்கப் படும்போது இந்த விடுதலையுணர்வு எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

ஆனாலும் தனிமையை விரும்பும் ஒருவன் இருக்கமுடியுமா என்ன.சில சமயங்களில் அதை விரும்பலாம்.முழுவதுமாகவே ஒருவன் தன்னை தனிமையில் தள்ளிக்கொள்ள விரும்பமாட்டான் என்றுதான் தோன்றுகிறது.ஆனால் அதற்கு பழகியவன் தான் குஞ்சு.குடிகாரனுக்கு சரக்கு அடிச்சதுக்கு பின்னாடி வரும் புது உற்சாகம் மாதிரி. குடி பழகிவிட்டதாலேயே பழகிப்போன உடல் ஒரு கட்டிங் உள்ளே சென்றால்தான் சகஜ நிலைக்கு திரும்பும். சாதாரணமாகவே தனிமை பழகிவிட்டவனுக்கு அனுதினம் அவ்வாறு அதை திரும்பத் திரும்ப உணர்த்தக்கூடிய மெய்ப்பிக்கக்கூடிய சம்பவங்கள் அவனை உற்சாகமூட்டத்தான் செய்கிறது. நிச்சயமாக இது  ஒரு அபாண்டமான பொய்  போலத்தான் தெரிகிறது, இதை  நமக்கு நாமே திருப்தியடைவதற்காக வேண்டுமானால்  சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் அப்படித்தான் சமாதானமடைந்தான் குஞ்சு.

இப்போது மீண்டும் பின்வீட்டு மாடியில் ஏதோ அரவம் கேட்டது. மறுபடியும் அவளேதான். ஏனோ இப்போது திடீர் கிளர்ச்ச்சி அடைந்தவனாக காணபட்டான். உண்மையில் இத்தனை நாள் இதை கட்டுப்படுத்திதான் இருந்தான் தனுவுக்காக.அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லையென்பதால் அந்த கிளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம், ஆக முடிவில் உண்மை இப்படித்தான் இருக்கிறது, அதாவது,

கொளுத்துகிற வெயில்லயும்  ஜீன்ஸ் பேன்டை அணிந்துகொண்டு தொடை இடுக்கில் ஏற்படுகிற அரிப்பையும் பொருட்படுத்தாமல் வெளியுலக மனிதர்களிடையே சிரித்துப் பேசி வீட்டுற்க்கு வந்ததும் பேன்டை கழட்டி காலை நீட்டி விரிச்சி போட்டு விட்டத்தை பார்த்து காத்து வாங்குகிற சுதந்திரத்தைதான் இப்போது தனு தன்னை கழட்டிவிட்டதன் மூலம் அடைந்திருந்தான் என்பது ஆச்சர்யமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் தான் இருக்கிறது.

Wednesday 26 February 2014

நொந்தகுமாரன் கலம்பகம்

'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த மரியாத கூட இல்ல உனக்கு, அத எப்பவோ நீ கெடுத்துக்கிட்ட, தள்ளிப் போ அங்க'

கோபத்தை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக கதவை ஓங்கி அறைந்துவிட்டு செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பினான் குமர். பின்பனி இரவு,கிட்டத்தட்ட தெரு அடங்கும் நேரம். நடக்கையில்  கோபத்தில் கொதித்துப் போயிருந்த இரத்தம் குளிருக்கு அடங்குவதாய் இல்லை. 

'இன்னும் கேட்டிருக்கனும் அவன,மூஞ்சி தொங்கி போச்சில்ல இப்ப உனக்கு, சாவுடா' உதிரியாக மனதுக்குள் திட்டிக்கொண்டே நடந்தான்.நெடு நாட்கள் அடக்கி வைத்திருந்தது,நிம்மதியாகவும் இருந்தது.வீழ்த்திவிட்ட நிம்மதி.

ஓரளவுக்கு சுள்ளுனு உறைக்கிற மாதிரியும் தெளிவாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் அனிச்சையாக இப்போது வெளிவந்தது மனநிறைவாகத்தான் இருந்தது. ஆச்சர்யமாகவும்தான், இல்லையென்றால் உணர்ச்சிவசப்பட வேண்டியதாய் இருந்திருக்கும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால்.பெருமூச்சொன்று விட்டுக்கொண்டான்.

தெரு அமைதியாகத்தான் இருந்தது,நாயொன்று வள்ளென்று குரைத்தது.கீழே கிடந்ததிலேயே கொஞ்சம் பெரிய கல்லை எடுத்து முழு பலத்தையும் பிரயோகித்து எறிந்தான்,அது எங்கோ விலகிச் சென்று சுவற்றில் அடித்து இரண்டாக உடைந்தது, இன்றில்லை என்னைக்குமே குறி சரியாக இருந்ததில்லை அது தெரிந்திருக்குமோ என்னவோ எந்த சலனமும் இன்றி நின்றிருந்தது அந்த நாய். 'சனியனே ஓடிடு' என்று ஆற்றாமையில் கத்திவிட்டு நடந்தான். எப்படினாலும் வீட்டுக்கு திரும்பி போகத்தான் வேண்டும் இது ஒன்றும் புதிதில்லை. இதற்க்குமுன் கூட இப்படி நடந்திருக்கிறது, ஆனால் அப்போதெல்லாம் கோபம் அதிகமாகி பேச்சே வராது, ஒரு முற்றிய சமயத்தில் 'வாய மூட்றா, பேசாத' சத்தமாக கத்திவிட்டு கிளம்பிவிடுவான், 'சே சரியா திட்டாம வந்துட்டோமே' என்று நினைத்து வருந்தியதுண்டு.

பெரும்பாலும் அப்பாதான்  முதலில்  சண்டையை ஆரம்பித்து வைப்பதால் அவர் நிலையாகத்தான் இருப்பார், இவனுக்கு ஆரம்பத்திலேயே உடல் சூடேறிவிடும். அவரின் புண்படுத்தும் வார்த்தைக்கான சரியான பதிலை சொல்லத் தெரியாமல் அழுத்தம் அதிகமாகி வாய் குழறி இயலாமையினால் ஒன்று எதையாவது போட்டு உடைப்பான் அல்லது ஒருமையில் பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.ஆனால் இந்த முறை நிதானமாக இருந்தான்.

நெடு நாட்கள் மனதுக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டான். தக்க தருணம் அமையும் வரை காத்திருப்பது. எதிராளி இங்கு தந்தையாதலால் வீழ்த்துவதென்பது எளிதான வழிதான். நிராகரித்தல், மகன் என்ற அந்த அடிப்படை நம்பிக்கையில் அவர் எடுத்துக்கொண்ட அக்கறையோ அத்துமீறலோ அல்லது எல்லா அப்பாக்களுக்கும் மகன்களை காட்டிலும் மகள்கள் மீது காட்டப்படும் அதீத பாசத்தின் உளவியலால் இயற்கையாகவே உள்ள அந்த புரிந்துகொள்ளமுடியாத பகையோ அது எதுவோ கன்றாவியோ அந்த அடிப்படையை நிராகரித்தல். இதை அவன் சிந்திக்காவிட்டாலும் நிராகரிப்பு என்பது இங்கு எளியதான ஒரு போர் தந்திரம் என்பதை இயல்பாகவே அறிந்திருந்தான்.

'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இன்னிக்கி சொல்லியாச்சு,எல்லா அப்பனுங்களும் இப்படித்தான் இருப்பனுங்களா,இல்லையே ஒவ்வொருத்தனும் அவனோட பையனுக்கு எப்டிலாம் சப்போர்ட் பண்றான்.இவனும் இருக்கானே எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே, அந்த மாதிரி சொல்லியே அது என்னோட குறை இல்லைனாலும் அப்படியே ஆக்கிட்டான்,ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு,சின்னப் பையனா இருக்கும்போதேதான் ஆரம்பிச்சிட்டான்,கூட படிக்கிறவன சொல்லிக் காட்டி திட்றது, அவனப் பார்த்து திருந்தேன்டா, அவன் மூத்திரத்தக் குடிடான்னு, அப்பவே அப்பிருக்கனும் இவன. ஒவ்வொரு விஷயத்துக்கும் இதுமாதிரியே சொல்லி என்னோட தன்னம்பிக்கை, சுயமதிப்பீடு எல்லாத்தையும் தகர்த்துட்டான். இன்னிக்கி சின்னதா எதாவது ஒன்னு செய்யனும்னா கூட எவ்வளவு சந்தேகம்,பயம்,அவநம்பிக்கை, வாழ்க்கையே கெடுத்துட்டான் ஒத்தா நல்லா வாயில வருது' வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

ஏதோ படித்து,ஏதோ வளர்ந்து,ஏதோ ஒரு பட்டம் பெற்று ஏதோ வேலைக்கு செல்லும் சில சராசரிகளின் நிலைமையைவிட மோசம் என்று சொல்ல முடியாது ஆனாலும் அப்படித்தான் இருந்தது குமாரின் நிலைமை.தான் இவ்வாறு இருப்பதற்க்கு முழு காரணம் தன் தந்தைதான் என்று திடமாக நம்பினான்.சிறு வயதிலிருந்தே தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை செய்யவிடாமல் அவருடைய கனவுகளை தன்மீது  திணித்து, அதையும் செய்யமுடியாமல் அடைந்த தோல்விக்கும் தன்னையே பொறுப்பாக்கி, தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலும் சகமனிதர்களிடத்தில் ஏற்படும் அவமானமுமாக சேர்ந்து மனதின் எங்கோ ஆழத்திலிருந்து எப்படியோ எப்போதாவது மட்டும் வெளிப்படும் அச்சம் அச்சமயம் முதல் அதுவே அவனாக ஆனதும், பின் அதுவே பழகிப்போய் எந்த ஒரு சின்ன செயலுமே செய்வதற்க்கு பயந்து தயங்கி அந்த பலவீனத்தை மறைக்க தன்னை ஒரு சோம்பேறியாக வெளிக்காட்டிக் கொண்டு கோழை என்பதைவிட சோம்பேறி என்று சொல்வது பரவாயில்லை என்ற மனநிறைவோடு இருக்க உதவிய பெருமையும் தன் தந்தையையே சேரும் என்று முழுமையாக நம்பினான்.

பின்னாட்களில் சில அடிப்படை தவறுகள் தெரிந்தே செய்வதற்க்கும் தனக்கு நியாமான காரணங்கள் இருப்பதாக நினைத்து சமாதானமடைய வேண்டியிருந்தது. தவறென்று தெரிந்தபின்பும் அதில் மனம் ஒன்றிப்போக இதுமாதிரி கற்பிதம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.முதன்முதலில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அப்படித்தான் ஏற்பட்டது.எப்படியோ புகையை இழுத்து அதனுடைய போதையை அனுபவித்த பிறகு இது கேடு என்றும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் ஏற்பட்ட தோல்விகளும் அவமானங்களும் அதற்க்கு முழுபொறுப்பாளராக நினைத்த தந்தையையும் நினைக்கையில் உலகத்தில் தான் மட்டும் எல்லா சமயங்களிலும் எல்லாராலும் கைவிடப்பட்டுவிட்டதாக ஏற்பட்ட எண்ணம் தீராத தனிமை உலகம் ஒன்றில் தள்ளியது.தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதால் இந்த சின்ன சிகரெட் போதையை அனுபவிக்க தனக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நினைக்க வைத்தது அது.

இது எவ்வளவு அபாண்டமானதொரு பொய் என்றும் பின் அறிய நேர்ந்தது என்றாலும் வயது முதிர்ச்சிக்கேற்ப அதை தத்துவார்த்தமாக பரிசீலித்து எதிர்கொண்டு சமாதானமடைய கற்றுக்கொண்டான்.

இதையெல்லாம்விட அவன் தந்தைமேல் தீராத வன்மம் கொள்ள வைத்தது, தன்னுடைய காதல் விஷயத்தில் ஏற்பட்ட கசப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவரே காரணம் என்றும் நினைத்ததுதான்.காதலைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கல்லூரியில் சைட் அடித்து சுற்றித் திரியும்போது எப்படி நடந்தது என்று தெரியாமலேயே இருவருமே காதல் வயப்பட்டு உலகத்தையும் கூடவே தன்னையுமே மறந்த நாட்கள், தன் பலவீனத்தை மறக்கடிக்க செய்த நாட்கள், ஆனாலும் ஒரே பெண்ணை அளவில்லாமல் காதலிக்க  முடியாது என்பதாலோ இல்லை அப்படியும் காதலித்தால்  காதலை தவிர்த்து மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க நேரிடும் என்பதாலோ அவனுள் இருந்த அந்த பல்வீனமானவன் இப்போதும் எதிரிமறையாக சிந்தித்ததின் விளைவு அந்த காதலும் முடிவு பெறாமல் போனது.காதல் முறிந்த சில நாட்கள் அதன் வலியும் பின்னே 'அட கிடைச்ச சமயத்துல அவள அனுபவிக்க தவறிட்டோமே' என்று வாய்ப்பை தவறவிட்ட ஏமாற்றமும் தான் மிச்சமானது. பயங்கரம் என்னவென்றால் அதற்க்கும் தன் தந்தைதான் காரணம் என்று நம்பினான். அவனுள் இருந்த பலவீனமானவன் காதல் விஷயத்திலும் தலைத்தூக்கியதுதான் காதல் முறிவுக்கும் காரணமாக இருந்தது.அந்த பலவீனமானவனை உருவாக்கியது தன் தந்தைதானே என்று நம்பினான்.

எப்படியோ ஒருவாறு பட்டம் பெற்றாகிவிட்டாலும் வேலை தேடும் பயங்கரம் பயமுறுத்தியது. தோல்வியை ஒப்புக்கொண்டு மேற்படிப்புக்கு செல்வதென்றாகி கொஞ்ச நாள் தப்பித்து அந்த காலக்கெடுவும் முடிந்து இப்போது இப்படி இவ்வாறு இருக்கும் நிலைமைக்கு வந்திருந்தான். ஒன்று அந்த பலவீனமானவனை ஒழிக்க வேண்டும் இல்லை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கான போராட்டத்தில் சில நேரம் தோல்வியடைய நேரும்போது அவன் தந்தை இப்படியாக அவனுள் மிதித்து நசுக்கப் படுவார்.

'இவன்லாம் எதுக்குயா கல்யாணம் பண்ணி கொழந்த பெத்துக்குறான்,இப்டி சமூகத்துல ஒன்னுமில்லாம ஆக்கவா, இவனுக்குலாம் கல்யாணம் செஞ்சி வச்சான் பாரு அவன சொல்லனும், ஓத்தா வளர்க்க தெரியலனா எங்கயாவது தெருலயாவது விட்டிருக்கலாம்,சாதாரன மனுஷனுக்கு கிடைக்கிற சந்தோசத்தையாவது அனுபவிச்சிட்டு போயிருப்பேன்' ஆனால் அதுவொன்ன்றும் அவ்வளவு எளிதில்லை என்றும் உள்ளூர அறிந்திருந்தான்.

அப்படியொன்றும் மோசம் இல்லை. குமாரின் அடிப்படைத் தேவைகளை என்றுமே நிறைவேற்றித்தான் வந்திருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமலில்லை. அப்பாக்கள் என்றுமே மகன்களை புரிந்துகொள்வதில்லை. மாறாக எல்லா மகன்களும் அப்பாக்களை புரிந்துகொள்ளும் தருணம் ஒன்று நிச்சயமாக ஏற்படுகிறது.

அருகில் இருந்த கடையொன்றில் சிகரெட் வாங்கி பற்றவைத்து இழுத்தான். எப்போதாவதுதான், இது மாதிரி நியாமான காரணங்கள் அமையும்போது.புகைப்பிடித்து விட்டு மிஞ்சிய துண்டை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.இதுவும் கொஞ்ச நாளாகத்தான் மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும்போது மற்ற உருப்புகள் தங்களது அன்றாட கடமையை தானாகவே செய்ததின் விளைவு இது.பின் தொடைச் சதையில் சூட்டை உணர்ந்து அதை வெளியே எடுத்துப் போட்டான்.

இதெல்லாமே தான் நினைத்திருந்தால் மாற்றியிருந்திருக்கலாம் என்றும் சில சமயங்களில் தோண்றும்,ஆனால் தன் இயலாமையை மறைக்க எதன்மீதாவது முழுபழியையும் ஏற்றி வைப்பது அடைந்ததும் அடையப்போவதுமான தோல்விகளுக்கும் முன்கூட்டியே ஆறுதலாக அமையும் என்பதால் இது சாலச் சிறந்த வழியாக நினைத்தான். அதற்க்கான வேலைகளில் மனமும் மூளையும் விரைவாக இயங்கும்.நடந்து முடிந்த சம்பவங்களை அடுக்கடுக்காக நினைத்துப் பார்த்து காரண கர்த்தாவான தன் தந்தையையும் நினைத்து தவறு நம்முடையதல்ல என்று மனம் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும்.

புலம்புவதும் பிடித்துதான் போயிருந்தது ,மனதை பாதித்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து புதிப்பித்துக் கொள்வது தற்போதுள்ள வலிக்கு ஆறுதலாக இருந்தது.அப்படி ஒன்றும் நினைத்து மந்தஹாசம் புரியும் சம்பவங்களில்லைதான், தான் இவ்வாறு இப்படி இருப்பதற்க்கு அவை விளக்கம் அளிப்பதால் அடைந்த பொய்யான ஆறுதல்.

நடந்த களைப்பில் பசி அதிகமானது.

வீட்டுக்கு போனால் அவருடைய முகத்தை பார்க்க வேண்டியிருக்கும், நிச்சயமாக காயப்படுத்தும் என்ற எண்ணத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை உள்வாங்கி அதிர்ச்சியாகி தளர்ந்த அப்பாவின் முகம் ஞாபகம் வந்தது. தமிழ் சினிமா ஒன்றில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.நாயகனின் இதே மாதிரி புண்படுத்தும் வார்த்தையால் தந்தை கதாபாத்திரம் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்க்காரும்.பின் ஒரு நாள் தந்தையை நினைத்து கட்டிலில் போய் படுத்து கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு அழுகிற காட்சி.சினிமாவின் தாக்கம் இவ்வளவு தூரம் இருக்கும் என்று நினைக்கத்தான் இல்லை.அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான்,அது மாதிரி அழுதால் நன்றாகத்தானிருக்கும்.எதற்க்கு?எதற்க்கோ.

வீட்டுக்கு திரும்பி நடந்தான்.

அம்மாதான் கதவை திறந்தது. 'ஏம்பா அப்டி சொன்ன,சாப்ட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்குனு படுக்கப் போய்ட்டாரு' இப்படி ஒரு வசனத்தை அம்மாவிடம் எதிர்பார்த்தான்.இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக்த்தான் இருந்தது.காட்டிக்கொள்ளவில்லை.

'ஏன்டா சீக்கிரம் வந்து திண்ணுட்டு ஆள விட வேண்டியதுதான ஏன் இப்டி தூக்கத்த கெடுக்குற' அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

எதையும் பேசாமல் உள்ளே நுழைந்து அப்பா தூங்கிவிட்டிருந்த அறையை தாண்டிப் போய் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து எட்டிப்பார்த்தான்.அப்பாவின் குறட்டை ஒலி அதிர்ந்தது,தொப்பை வெகுவாக ஏறி ஏறி இறங்கியது.நன்றாக தூங்கிவிட்டிருந்தார்.மனதை தேற்றிக்கொண்டு பெருமூச்சொன்று விட்டான்.

சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான். இன்றைக்கு எப்படியாவது அழ வேண்டும். சுலபமான காரியம் போல் தெரியவில்லை.

அந்த சினிமா காட்சியை நினைவுப் படுத்திக் கொண்டான்.அப்பாவின் தளர்ந்த முகம் மீண்டும் வந்து  நெஞ்சை கணக்குமாறு செய்ய வேண்டியிருந்தது. அப்பானு இத்தனை நாள் நினைக்கலனா எப்படி எந்த உரிமையில் அவரோட காசுல வாழ்ந்துகிட்டு இருக்கோம், இதெல்லாம் எல்லா அப்பாக்களும் செய்ய வேண்டிய கடமைதானே என்று உள்ளூர இருந்த அசைக்கமுடியாத எண்ணம்தானே. கைவிடப்பட்டு தனிமையாகிவிட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் கயிற்றின் அறாத பிரிபோல சிறு நம்பிக்கைத் தழல் உள்ளே கனன்று கொண்டிருப்பது அவர் இருக்கிறார் என்ற உள்ளுணர்வுதானே. பின்னே யார் செய்த பிழை இது.வில்லன் நானேதானோ.எளிதில் ஒப்புக்கொள்ள முடியாதுதான், இன்று அழுதாக வேண்டுமாதலால் இதுவும் உதவலாம் ஆனால் இது மட்டும் போதாது.

அப்பாவிடம் தான் கூறிய வார்த்தைகளின் கடுமையை நினைத்தான். அதனாலா இல்லை எங்கோ மனதின் அடி ஆழத்திலிருந்து எல்லாம் தன்னுடைய தவறாகுமோ என்று எழுந்த குற்ற உணர்வாலா இல்லை தன்னிரக்கத்தாலா இல்லை சினிமாவில் அந்த நாயகன் அழும் காட்சியை நினைத்துப் பார்த்ததாலா எதுவென்று தெரியாமல் வாயை கையால் பொத்திக்கொண்டு உடைந்து அழத் தொடங்கினான்.

Tuesday 4 February 2014

சராசரிகளும் ஒரு உரையாடலும்

உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய ஆரம்பித்து விட்டது, இனி இது தணிய எத்தனை நாள் ஆகுமோ? அது எப்டி இவனுக்கு, அதுவும் MBBS படிச்ச பொன்னு,காலக் கொடுமைடா, எவ்வளவு சாதாரணமா சொல்றான், அட இவன் அந்த பொன்னுக்கு தகுதியான ஆளா இருந்தாக் கூட பரவாயில்லயே, மனசு அமைதியாகிடும்,இவனுக்கு எப்டி, அதுவும் ஆறு வருஷ காதலாமே, இப்படியெல்லாமா கூட நடக்கும்.உள்ளுக்குள் இவ்வளவு புகைச்சலை கிளப்பிவிட்டு எந்த சலனமுமின்றி வாங்கிக் கொடுத்த சரக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் குமார்.சின்ன வயசு  நண்பன். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம்.அதற்க்குப் பின் கூட சிறிது காலம் தொடர்பில் இருந்தோம்.

அன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைன்றதால நமக்கும் வேறு வேலை இல்லை இதற்க்கு முன் கூட இருந்ததில்லைதான்,நண்பனும் அவவாறேனு பார்க்கும் போதே தெரிந்தது அப்பவே மிதமான மப்புல இருந்தாப்டி.

எப்டி சொல்றதுனு தெரியல அப்போ என் கூட பள்ளி முடித்து கடைசி வரை சென்று வேலையில் உள்ளது சிலர்தான்.மற்ற அனைவருக்குமே பிடி இல்லை. அவர்களுக்கான ஏதோ ஒரு தருணத்தில் வழி தவறி போயிட்டாங்கனு தான் சொல்லனும்.அதுவும் குமார் நிறையவும் கெட்டுப் போயிருந்தான்.

கொஞ்ச நேரம் பழசுகளை சிலாகிச்சி பேசிட்டிருந்தோம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்த்து அது தொடர்புடையவர்களோடு  பகிர்ந்து கொள்வது நன்றாகத்தானிருக்கும், ஆனா சந்தோஷம்ன்றது அரிதாகிப் போன நாட்களில்,நனவில் நிறைவேறாத சில ஆசைகள் எப்பயாவது அபூர்வமாக கனவில் நடப்பது போலக் காண நேர்ந்து பின் திடீர்னு விழிப்பு வந்து அடையும் ஏமாற்றம் மாதிரி நெஞ்சடைக்கும் இதுவும்,முடிந்து போன விஷயம் என்ற பிரக்க்ஞை திரும்பும்போது.

அன்னைக்குதான் அந்த ஜீரணிக்கவே முடியாத விஷயத்தை சொன்னான்.

'ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம்,ட்ரீட் உண்டா மச்சி'-குமார்

இல்லைனும் சொல்ல முடியாது, பேன்ட் பாக்கெட்ல பர்ஸ் பொடப்பா இருக்கறத பார்த்திருப்பான்.ஒரு காலத்துல ரொம்ப க்ளோஸ்,அந்த் நினைப்பு இப்பவும்கூட இருவருக்குமே மங்காமல் இருந்ததால்,பக்கத்து டாஸ்மாக்கில வாங்கி வாட்டர் மிக்ஸ் செய்து அங்கேயே ஊத்திக்கிட்டான்.இடையில் மொபைலில் யாரோ அழைக்க சற்று தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தான்.

திரும்பி வந்து 'நம்ம லவ்வர்  மச்சி' நான் கேட்க்காமலே அவனே சொல்ல ஆரம்பித்து,MBBS முடிச்சிருக்கறதாகவும்,+2 முதலே லவ்வுனும் சற்று சுருக்கமாக ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டி முடித்தான்.

ஆள் பார்க்கறதுக்கு குடியும் சிகரெட்டுமாக இருந்தாலும் பொதுவாக காதலிக்கிற ஆண்களின் பாவனைகள் குமாரிடமும் இருந்தாலும் கூட 'இவனுக்குலாம் எப்டி செட்டாகும்' என்ற தவறான தீர்க்க தரிசனம் இருந்து வந்ததும் மேலும் அப்டி ஒன்னும் பய பெர்ஸ்னாலிட்டிலாம் இல்லை என்பதாலும் ஒரு சமயத்தில் அதையும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை,

'எப்டி மச்சி இந்த விபரீதம் நடந்தது,நீ வேற சும்மா வெட்டியா இருக்க,அப்டியே இருந்தாலும் அந்த பொன்னு வீட்ல ஒத்துப்பாங்களா?'

'அதுலாம் ஒன்னும் மேட்டர் இல்ல,ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சு'ஆர்வத்துடன் அவனோட மொபைல் கேமராவில் ஜோடியாக எடுத்த அந்த பொன்னோட புகைப்படத்தைக் காட்டி'இவதான்டா மச்சி, உங்கிட்ட காட்டாம யாருகிட்ட காட்டப்போறேன்'.கேட்ட கேள்வி சுருக்குனு பட்டிருக்கும் போல 'எப்டி பொன்னு,மடக்கிட்டேன் பாத்தியா' என்பது போல தோரணை இருந்தது.

'ம்ம் வாழ்த்துகள் மச்சி'

கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமானு குழம்பி ஒரு வழியா சரி பாருங்கனு வீட்ல ஒப்புதல் கொடுத்து பெண் பார்க்கும் படலம் தொடங்கி காட்டும் அத்தனைப் பெண்களின் புகைப்படங்களை விட பன்மடங்கு நன்றாகத் தானிருந்தது. 'காலக் கொடும, இவனுக்கா இப்டி'.

புகைச்சல் என்றும் சொல்ல முடியாது ஆனால் அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியாது.சில கசப்பான உண்மைகள் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சி.இவனோட காதல் எவ்வளவுதூரம் போகும்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பெண் வீட்டுக்கு தெரியாம ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறதும்,அந்த அளவு இவனை நம்பறதும்,அப்படி இவன்கிட்ட என்ன இருந்தது,என்ன கண்டுகிட்டா இவங்கிட்ட.

ஒரு பெண்ணால காதலிக்கப் படுறது எல்லா ஆமபளைக்குமே அது அவன் பிறந்ததுக்கான முதலான அர்த்தம்ன்ற உண்மையோ பொய்யோ,அதுவரை பெற்று வந்த அகஉலக அறிவு அதுமாதிரி தெளிவில்லாமல் உணர்த்தி இருந்ததாலும் நண்பனுக்கு அது இயல்பாக ஈடேறிவிட்டதாலும் அதனால் உண்டான கருகல் என் புற உலக அறிவின்மையைத்தான் தெள்ளத் தெளிவாக காட்டியது.

உண்மையில் இதை எப்படி புரிந்து கொள்ளனும்னு தெரியல.இல்ல இதுல புரியமுடியாத அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.ஆனா ஒன்னுமே இல்லைனு கண்டிப்பாக போக முடியாது என்றுதான் தோன்றுகிறது.

அதுவும் மருத்துவச்சி,தாங்கிக் கொள்ள முடியாதுதான். வெட்டிப்பய,குடி, சிகரெட்,ஹான்ஸ் எல்லாம் பழக்கமும் இருக்கு அவனுக்கு எப்டி இந்த பொன்னு?சிரிப்பாகவும் இருந்தது.அடப்பாவி அவன் உன்னோட நண்பன்டா, இப்டியா வயிறி எரிஞ்சி புலம்புவ.அதுதான் பிரச்சணை அவனும் என்னப் போலத்தான நா சுமார் மூஞ்சினா அவன் ரொம்ப சுமார் மூஞ்சி,மயக்குற அளவுக்கு ஆணழகன் கூட இல்லையே.இந்த சூட்சமம்லாம் புரிஞ்சிருந்தா நாமளும் பல ரவுன்ட் வந்திருக்கலாமோ அல்லது அது மாதிரி சூட்சமம்லாம் எதுவுமே அதில் இல்லையோ என்னவோ?

நமக்கும் தானே நடந்தது அது,கலைவாணி கூட நம்மகிட்ட நெருங்கிதானே வர முயற்சி செஞ்சா.நாமதான் அது ஏதோ பெரிய தப்புனு விலகி போயிட்டோம்.அப்போ இருந்த புரிதல அப்படி.ஆனாலும் ஆசை விடலயே நானும்தானே சைட் அடிச்சேன்.என்ன செய்யறது.ரெண்டு வருஷம் அப்டியே பார்த்துகிட்டே இருந்தோம்,அவளும் என்னென்னமோ செஞ்சா,நமக்கு தான் அது என்னனு புரியவே இல்ல,மக்கு,கடைசில 'போடா பொட்டை'னு சொல்லிட்டு போயிட்டா.எதுக்கு அப்படி சொன்னா நாம என்ன செய்யாம இருந்தோம்,பார்த்து சிரிச்சேன்,சிரிச்சேன்,வெறிக்க வெறிக்க பார்த்தேன், எங்க்கிட்ட முன்னாடி வந்து வேணும்னே குனியும்போது வச்ச கண் விலகாமலே பார்த்தேன் வேற என்ன செய்யனும்.

அவ என்ன நினைக்கிறானு எனக்கு எப்படி தெரியும்.சொன்னாத்தானே தெரியும்.ஆமா நானாவது சொல்லிருக்கலாம்.நான் எப்டி சொல்லுவேன் நான்தான் அது சரியா தவறானு புரிஞ்சிக்க முயற்சி செய்தே காலம் போயிடுச்சி.அட அவளாவது சொல்லிருக்கலாம் 'உன் கூட ஒரு நாள் படுக்கனும்'னு, சொல்லிருந்தா எப்படியாவது முடிச்சிருப்பேன்.ஆனா அந்த பொன்னு என்ன நினைச்சிருக்குமோ ஒரு வேளை என்னிடம் வேற எதாவது பரிவு,கணிவு இல்லை நவரச பாவணைகள் எதாவது எதிர்பார்த்திருக்குமோ என்னவோ? எப்டியோ அதை புரிந்து கொள்வதற்க்குள் கைமீறிப் போயிடுச்சி.

காதல்னு வேறு சொல்லுறான்.எப்படி காதல் வந்தது அந்த பொன்னுக்கு இவன பார்த்து.ஐய்யோ மண்டையே வெடிக்கிற போல இருக்கு.நானும் தான் காதலிச்சேன்.ஆனா எப்டி அந்த ஈர்ப்பு வந்தது.சொல்லவே அசிங்கமாத்தான் இருக்கு.அப்பவே எப்படி நாட்டுக்கட்டை மாதிரி இருந்தா அவ.அதை பார்த்துதான சொக்கிட்டேன்.எப்படியோ காதல் வந்து தொலைஞ்சிடுச்சி. அதைக் கூட க்ரிமினல் கேஸ் ஒன்னுல போஸ்ட் மார்டம் ரிப்போர்டுக்காக மாட்டிகிற பொனத்த அறுக்குற மாதிரி அந்தக் காதலை அறுத்துக் குழப்பி, புதைத்துப் பின் எழுப்பி ஒருவழியா அது காதல்தான்னு தெளியுற சமயத்துல எல்லாம் போச்சு.

வேற!!!!நினைத்து பார்த்தா நிறையவேதான் இருக்கு இதுபோல சம்பவங்கள்.குமார் அது மாதிரி ஒரு சம்பவத்த புரிந்துகொண்டு இல்லை அதில் அவ்வாறு சிந்தையை கசக்கி பிழியும் அளவில் ஒன்றுமே இல்லையென்ற மனோபாவம் இயற்கையாகவே இருந்ததால் அந்தப் பெண் அவனை விரும்பியிருப்பாளோ?

உலகத்தை சுத்தி வந்து ஞானப்பழத்தை பெறமுடியாது போன முருகனுக்கு என்ன மாதிரி வெறுத்துப் போயிருப்பாரோ அப்படித்தான் இருந்தது.அவனுக்கு மட்டும் அந்தப் பழம் கிடைத்தது எப்டி,அங்கிள் வயசு ஆகிப்போன சமயத்துல இந்த மாதிரி ஏமாந்து போனதாக வரும் எண்ணம் நல்லதுக்கில்லைதான்.அப்டி ஒன்னும் வயசு ஆகிடல பார்க்கலாம்.

பார்க்கவே ரவுடி மாதிரி இருக்கான்,நல்லா ஜாலியா வாழ்க்கையை கடத்துறான்.இதுலாம் தப்புனு ஒதுங்கி வீட்ல சொல்லிக்கொடுத்ததை அறம்னு நம்பி வளர்ந்து ஏமாந்து  புலம்பல் தான் மிச்சம்.நானாவது தேவலாம்,அந்த கேஸ் கம்பெனி ஓனர் பையன் ஒருத்தன் இருக்கானே,ஐயோ உலகமே தெரியாம இல்ல வளர்ந்திருக்கான் முப்பது வருஷமா,அம்பி மாதிரி, நாமளாவது இப்ப யோசிக்கிறோம், அவனுக்கு,சொன்னாலும் ஏதோ 'அபிஸ்டு,அபச்சாரம்'னு சொல்லிட்டு போவான்.அதுவும் நல்லதுதான் ஒருவகையில்.

இது நன்மை இது தவறுனு முன்கூட்டியே பழுக காய்ச்சி அடித்து அடித்து இறுக வைத்து விட்ட சூழ்நிலை நம்மளோடது.அப்டியே இருந்துட்டா பரவாயில்ல, உண்மைனு எதையோ இந்த மாதிரி தெரிஞ்சிக்கும்போதுதான் கடைசில என்ன இழந்தோம்ன்றது தெரிய வருது.தெரிஞ்சும் ஒன்னும் பலனில்லை,செக்கு மாட வெளிய அவுத்துவிட்டா சுத்தி சுத்திதான் வரும்.

குமாருக்கு இந்த கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கலாம்,அதனால பிள்ளையார் கணக்கா ஞானப்பழத்தை எடுத்துகிட்டான்.

*****

சரக்கு முழுவதையும் குடித்துவிட்டும் நிதானமாகத்தான் இருந்தான் குமார்.

பாக்கெட்ல இருந்த சிகரெட் ஒன்ன எடுத்த பற்றவைத்து இழுத்தான்.

'நிறைய கெட்டுபோயிருக்க போல'அந்த கணத்தில் நினைத்து கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது,ஹான்ஸ்,சரக்கு பழகவில்லை என்பதான அற்ப காரணங்களால்.

'எப்டி ரவுடி மாதிரி தெரியுதா'

'கிட்டத்தட்ட'

'இல்ல மச்சி நிறைய பிரச்சணை'

'உனக்கு என்னடா பிரச்சணை,ஜாலியா இருக்க'

'உனக்கு தெரியாதுடா,வேல ஒன்னு வாங்கி தர்றேன்னு சொல்லி ஒருத்தன் ரெண்டு லட்சம் ஏமாத்திட்டான்,வீட்ல வேணாம்னு தான் சொன்னாங்க நாந்தான் சண்டை போட்டு கடன் வாங்கி...இந்தப் பிரச்சணை போதாதுனு போன மாசம் போதைல தெருல  மூஞ்சிய பேத்துட்டேன்,எப்படான்னு இருக்கானுங்க, 'கவலை தொணிக்கும் தோரணையில் பேசியது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

நீ ஒன்னும் இதுக்குலாம் கலங்குற ஆளில்லயே மச்சி' செஞ்சதுக்கு வருந்தி பின்னாடி நினைத்து பார்க்காத எதுவும் தவறு இல்லைதான்.

'இல்ல மச்சி,வீட்டு பக்கம் போயே ரொம்ப நாளாச்சி,வீட்லயும் உள்ள விட மாட்றாங்க,+2 பாஸ் பண்ணவே நாலு வருஷம் ஆயிடுச்சி,அப்றம் இன்ஜினியரிங் சேர்ந்து, அதுக்குள்ள நா பார்த்த சின்ன பசங்கெல்லாம் வேலைக்கு வந்துட்டானுங்க, அப்போ எதுவும் தெரியல, படிக்கலனாக்கூட எதாவது தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பேன, எவன் மூஞ்சிலயும் முழிக்க முடியல' போதையேறிய கண்களோடு தன் வலிகளை சொல்லி, சிகரெட் புகையை வெளியே ஊதி,அவனுள்ளும் நானறிய வாய்ப்பில்லாத அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யாத துக்கத்தையும் சற்று ஊதி இலைபாற நினைத்தவன் போல மேலும் தொடர்ந்தான்.

'வீட்லயும் முன்ன மாதிரி இல்ல,எத்தனி நாளைக்குதான் அவங்களும் பொறுத்து போவாங்க, இந்த கஷ்டத்த மறக்க சரக்கு, அடிக்கலனா துக்கமே வரமாட்டேங்குது,ஒன்னு தெரியுமா? நா வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது, அக்கா வீட்ல காசு வாங்கி திண்ணுட்டு, குடிச்சிட்டு திரியுறேன்,எவனாவது மாட்டுவான்,நாள் ஃபுல்லா சரக்குதான்,போதை இறங்கனதுமே என்னோட நிலைமைய நினைச்சி பார்த்தா நெஞ்ச அடைக்குது,எப்படி உயிரோட இருக்குறேன்னே தெரியல மச்சி,நரக வேதனையா இருக்கு,இதுல வேற அந்த பொன்னு,என்ன செய்யுறதுனே தெரியல,நானே என்னோட லைஃப கெடுத்துகிட்டேன்னு தான் நினைக்கிறேன்' அவனோட வேதனைகளை சொல்லி என்னோட அர்த்தமே இல்லாத புலம்பல்களை இன்னும் அர்த்தமில்லாததாக்கினான். .

'அந்த பொன்னுக்கு இதுலாம் தெரியுமா டா'

'வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்'

கொடும கொடுமனு இங்க வந்தா இங்க ஒன்னு தலைய விரிச்சி போட்டுக்கிட்டு டிங்கு டிங்குனு ஆடிச்சாம் அந்த மாதிரித்தான் இருக்கு.

'ம்ம் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சணை'

'சரி விடு அது என்னோட கஷடம்,அப்றம் உனக்கு கல்யாணம் எப்போ? முடிச்சிட வேண்டியதுதான'

'கல்யாணம் போயிட்டிருக்கு மச்சி,பாக்கலாம்'

'ஒன்னும் யோசிக்காத ,வீட்ல பார்க்குற பொன்ன பண்ணாத்தான் நல்லது,எந்த பிரச்சணையும் இல்ல,பின்னாடி எதாவது கஷட்ம்னாலும் கூட நிப்பாங்க' அவனடைந்த வாழ்க்கைப் பற்றிய புரிதல் அறிவுறையாக வந்தது.

'ஆனா நீ பரவால்ல மச்சி, ஞாபகம் இருக்கா அப்போ சின்ன வயசுல வீட்டுக்கு வருவ,பட்டை போட்டுக்கிட்டு,பொட்டு வச்சிக்கிட்டு,எங்க அம்மா உன்ன சொல்லித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க,அப்போ இதை உங்கிட்ட சொன்னது இல்ல,சொல்ல முடியல பொறாமையாவும் இருக்கும்,இப்பக் கூட உன்ன வீட்ல கேட்பாங்க,நானும் உன்ன மாதிரி அப்பலாம் செஞ்சி பார்த்திருகேன்,சாமி கும்பிடுவேன்,காலைல எழுந்து புத்தகத்தை எடுத்து வச்சிக்கிட்டு படிக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கேன் ஆனா என்னோட ஆர்வமெல்லாம் வேறயா இருந்துச்சி அதனால முழுசா செய்யமுடியல'எதோ ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லி முடித்தான்.

இவன் என்னடா இப்டி புலம்புறான்.அதையெல்லாம் நினைச்சி வெட்க்கபட்ட நாளெல்லாம் இருக்கு.

இவன மாதிரியே நம்மளால சொல்ல முடியுமா,"எப்டி மச்சி அந்த பொன்ன உஷார் பண்ண,சூப்பர்டா எங்கயோ மச்சம் இருக்கு மச்சி உனக்கு, நானும் ரெண்டு மூனு ட்ரை பண்ணேன் எல்லாம் மேட்டர் மச்சி,இப்ப சைட் அடிச்சா மொறைக்க பாக்குறாளுக டா,எல்லாம் காலம் கடந்து போச்சு"இப்டி சொல்ல முடிஞ்சா அது அவனோட புலம்பலுக்கு என்னோட சோடியா இருக்குமா தெரியாது.சொல்லலாம் தான்.ஊரு ஒத்துக்காது.

குமாரோட சூழ்நிலை வேறு கட்டுப்பாடு அதிகம் இல்லாத ஒன்று,காட்டு மிருகம் போல,நம்மளோடது மிருகக் காட்சி சாலை,ரெண்டு மிருகத்துக்கும் போராட்டம் இருக்கும்,காட்டுல அதோட இயற்கையான குணங்களோட ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராட வேண்டியிருக்கும்,கம்பிக்குள்ள இருக்குற மிருகத்துக்கு அந்த போராட்டம் இல்ல,ஆனா தன்னோட இணையை கண்ணுல காட்டாம ஊசி போட்டு கர்ப்பம் தெரிக்க வைக்கிற கொடுமை உண்டு,இந்த உண்மை எதுவும் தெரியாதிருந்து,சட்டம் வகுத்து வாழும் மனித சமூகத்தில் குமாரை வைத்து பார்க்கும்போது நம்மளோட புலம்பல்கள் ஒன்னுமே இல்லைதான்.

இல்லை இப்படியாகவும் இருக்கலாம்,அவரவரின் புரிதலில் தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் வட்டம் அதில் அமையும் சூழ்நிலைகள் பொறுத்து. சோதனைகள் இருவருக்குமே இருக்கும்தான்.துக்கமோ சந்தோஷமோ அதன் வடிவம்தான் வேறாக இருக்கும்,வீரியம் என்னமோ ஒன்னுதான்.

என்னவோ இன்னமும் புதிராகத்தான் இருக்கு.

'சரி மச்சி நீ என்கூட வீட்டுக்கு வா,உன் கூட வந்தா வீட்ல விடுவாங்க,வீட்ல உன்ன பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாங்க' போதை அதிகமாகி நிலைகொள்ளாமல் தள்ளாடினான் குமார்.

'வேணாம் இன்னொரு நாளைக்கி வரேன்,நீ வேற தள்ளாட்ற,வண்டில ஏறு வீட்டு முனைல விட்டுடறேன்'

'மச்சி நீ எதும் சாப்பிடலயேடா,வா பெப்சி குடி,இருபது ரூபா இருந்தா தா' எங்கிட்டயே காசு வாங்கி கடையில் பெப்சி வாங்கினான்.பாதி குடித்துவிட்டு கொடுத்தேன்.அதையும் வாங்கிக் கொண்டான்.

'இன்னிக்கி ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா,பார்க்கலாம் மச்சி' கண்கள் சொருகி குரல் தடுமாறியது குமாருக்கு.

'பார்க்கலாம் மச்சி' அவன் சொன்னதை ஆமோதித்து திரும்ப சொல்ல தோணவில்லை,எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது,தெளியவாவது செய்ததா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Monday 25 March 2013

காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்


வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.கிடைத்ததை தின்று அரை குறை வயிற்றுடன் நகரின் பிரதான சாலையோரம் கோயில் அருகில் இருந்ததால் வெட்டாமல் விட்டு வைத்திருந்த அரசமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது கொம்பன் காளை.அப்படியொன்றும் விருந்து இல்லை,இருந்த இடத்திலே சகலமும் தேடி வந்த காலம் கனவுபோல் ஆகிவிட்டது, ஒரு வேளை வயிறு நிறையவே  இப்போது நாள் முழுவதும் நகரத்தில் சுற்ற வேண்டியிருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் என்றால் பாலித்தீன் பைகளில் சுருட்டி போட்ட காய்கறி மிச்சங்கள் அல்லது உணவு எச்சங்கள் தாகத்திற்க்கு கழிவு நீர்தான் இன்னும் மார்கெட்டில் பொழுது போன நேரம் பார்த்து கிடைத்த அழுகின முட்டைக்கோஸ்,தக்காளி,கீரை வகைகள், அதுவும் இல்லாத சமயம் சாலைகளில் நடந்தால் புதுப்பட சினிமா அல்லது பிறந்த நாள் காணும் அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகள் சில நேரங்களில் இவை கூட கிடைப்பது கடினம்தான்.ருசியாக எள்ளு, கடலை, பருத்திப் பிண்ணாக்கு, பார்த்து வருடங்கள் ஆகியிருக்கும்.

சரி அப்படியே மெதுவாக உலாத்திவிட்டு வரலாம்.கூட துணையும் இல்லை,தான் ஒட்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து  சில காலம் ஆகிறது. சுற்றும் பார்த்துவிட்டு மெதுவாக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தது. பின்னங்கால் ஒன்றில் உடைத்துப்போட்ட கண்ணாடி சில்லு கால் குளம்பில் ஏறி  இழுத்துக்கொண்டு நடந்தது காளை.நன்றாக நினைவிருக்கிறது பார வண்டி இழுத்த நாட்கள், அப்போதெல்லாம் தினமும் மூண்று வேளை தவிடு, வடி கஞ்சி, ஞாயிறு நாட்களில் பிண்ணாக்கு. அவ்வ போது காளையேறுதல் கூட, அதுதான் கொம்பன் கடைசியாக மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள், உரிமையாளர் ரிக்ஸா ஒன்று வாங்கி விட்டதால் வளர்த்த பாசம் காரணமாக கறிக்கு அனுப்பாமல் அவிழ்த்து விட்டுவிட்டார். சில நாட்கள் அங்கேயே சுற்றி வந்துவிட்டு  பின் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட போது செல்ல இடம் தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அலைந்து ஒன்றாக புசித்து சில பல நாட்டு ரக பசுக்களுக்கு பேருந்து நிலையத்திலோ அல்லது காய்கறி சந்தையிலோ கன்று வரம் கொடுத்து ஓடியது சில நாட்கள்.

கடைகள் அடங்க ஆரம்பித்திருந்தன, சுற்றி வந்தது காளை. நாய் ஒன்று 'வள்'ளென்று குரைத்தது, மிரண்டு அப்பக்கம் ஒடியது. தண்ணீர் இருந்தால் தேவலாம்,மைதா தடவிய போஸ்டரை சாப்பிட்டதில் தாகமாக இருந்தது, குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைப்பதோ மனித உருவத்தில் இருந்தால் தான் சாத்தியம் போல் தெரிகிறது.ஆழ்துளை கிணறுகள் வெட்டவோ இல்லை அக்வாகார்ட் உபயோகிக்கவோ தோதாக உடல் அமைப்பும் இல்லை நினைத்து பெருமூச்சு விட்டது. சிரமம்தான் மிருகமாய் இருப்பது அதுவும் மனிதனிடம் வளர்ந்துவிட்டு பின் விரட்டியடிக்கப்பட்டு இப்படி உணவுக்காக திரிவதென்றால் கொடுமையாகத்தான் உணர்ந்தது. தார் சாலை நேற்றுதான் புதிதாக போட்டது போல,வாகனங்கள் சென்று தெறித்த சிறு சிறு கற்கள் கண்ணாடி சில்லு ஏறிய காலை பதம் பார்த்தது.வலியுடன் முனகியது.

பசி,வலி போன்ற இயற்கையின் உந்துதல்களை அந்தந்த உடலுறுப்புகள் கூட தாங்கிக்கொள்ளக்கூடும் அவை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க கடினமாகத்தான் இருந்தது.சில வருடங்களாகத்தான் இந்த தன் உணர்வு தானும் மற்றக் காளைகளை போல எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மன சஞ்சலம் 

வந்திராது.மற்ற மாடுகள் இப்படியில்லையே நடந்தது நடக்கப்போவது இதைப்

பற்றிய எவ்வித உணர்வும் இல்லாமல்லவா சுற்றித் திரிகின்றன.

தன் நிலைமையை நினைத்து நொந்து குட்டிச்சுவர் ஒன்றில் கொம்பால்      முட்டிக்கொண்டது.தனக்கு மட்டும் ஏன் இப்படி, இத்தனை நாட்கள் தன் இனம் காணாத சுய உணர்வு எப்படி?


மாடுகளின் நாட்காட்டியில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு..

ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆளரவமற்ற பகுதி.சிதிலமடைந்த கோயில்.சுற்றி ஆங்காங்கே சிதறியனவாக அமர்ந்திருந்த, தலை,கை,கால்கள் இல்லாத தியான நிலை சிற்பங்கள்.கடுமையாக எப்போதோ சேதப்படுத்தப் பட்டிருந்தன.பழமை வாய்ந்த இடமாகத் தோன்றியது.ஆங்கே ஒரு அரச மரத்தடியில் கொம்பன் தன் கூட்டத்துடன் உட்க்கார்ந்து மந்தகாசமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது சற்றே இது மட்டும் கண் அயர்ந்தது.நேரம் போனது தெரியவில்லை, திடீரென்று  ஒரு உதறல் தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்தபோது உடல் ரோமமெல்லாம் குத்திட்டு நின்றது.குளிராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது, எழுந்து சோம்பல் முறித்தது.கெட்ட கனவொன்று கண்டது போல் இருந்தது.என்ன கனவென்று தெரியவில்லை. சுற்றிலும் வேறு பசுக்களோ காளைகளோ கூட இல்லை,எல்லாம் மேய்ச்சலுக்கு சென்று விட்டன.

அந்த சிதிலமடைந்த கட்டிடத்தில் ஒரு சிலை அதற்கு ஒரே ஒரு கண் இன்னொரு கண் உடைந்திருந்தது.உடல் தவமிருக்கும் நிலையில்,அந்த கண் தன்னையே பார்ப்பதுபோல் இருக்கவே  கொம்பன் ஒன்றும் அறியாததுபோல் தலையை  வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.ஆனால் உடலில் ஒருவித வைப்ரேசன்,எனர்ஜி.

அப்போது ஒன்றும் உறைக்கவில்லை, அடுத்த நாளும் அதே இடத்திற்க்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.அந்த அதிர்வை,எனர்ஜியை மறுபடியும் அனுபவிக்க வேண்டுமாய் இருந்தது கொம்பனுக்கு.அடுத்த நாளும் மற்ற காலைகள் ஓய்வெடுத்து சென்ற பின் கொம்பன் மட்டும் அங்கு நின்று சிலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.இன்றும் அதே வைப்ரேசன்.

அதாவது,

பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில்களில் புத்த விகாரமே இருந்ததாகவும் பின் வந்த மன்னர்களால் அது இடிக்கப்பட்டதாகவுமான ஒரு வரலாறு நாம் சமகாலத்தில் அறிந்ததே.கொம்பன் கிடைத்ட அனுபவம் கூட இந்த புத்த விகாரையால்தன்.ஆதலால் சந்தேகமே வேண்டாம் கொம்பனுக்கு கிடைத்த அந்த வைப்ரேசன்,காளைக்கு போதி நிலை அடைந்தது.பிறவியெனும் பந்தம் அறுந்தது.

இவ்வளவு சுலபமாகவா என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை.

நாளடைவில் கொம்பன் புத்த விகாரே தவமாகக் கிடந்தது.

இப்படியாக ஒரு வாரம் செல்லவே காளையின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்ததை சக மாடுகள் கண்டு கொள்ள ஆர்ம்பித்தன.உணவு தேடியலைந்தது போக மற்ற நேரங்களில் சிதிலமடைந்த கோயிலின் முன் உட்க்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்வதும், (மாடுகள் கால்கள் பிண்ணி அமர்ந்து தியானம் செய்வது சாத்தியமில்லையென்றாலும் கொம்பன் தன் பின்னங்காள்களை தரையில் மடித்து உட்க்கார்ந்தும் முன்னங்கால்களை முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டும் தியானம் செய்தது ஒன்றும் வியப்பில்லை, இதை கற்பனை செய்து பார்ப்பதற்க்கு வாசகர்கள் தடுமாறலாம் ஆனாலும் வேறு வழியில்லை இக்கதையின் கரு அப்படி).

சில நாள் நடுநிசியில் திடீரென தலை சிலுப்பி சன்னதம் கொண்டு ஆடுவதும்,எதாவது கேட்டால் மோன நிலையில் வாயோரம் புத்தரை போல மெலிதாக ஒரு புன்னகை புரிவதுமாக,காளை புன்னகை புரிகிறதென்றால் நம்ப முடியாமல்தான் உள்ளது ஆம் அது அப்படித்தான்.சக காளைகள் கொம்பனின் அருகில் வரவே தயங்கின.நாட்கள் உருண்டோட  மற்ற காளைகள் போல் கொம்பனால் இருக்கமுடியவில்லை, தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு திரிந்தது.கேட்டால் மந்தகாசமாக ஒரு புன்னகை.

அதன் பிறகு எப்போதும் கூட்டத்தை விட்டு தனித்து செல்லவே விரும்பியது கொம்பன்.உணவு தேடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது,பசி எடுக்கிற சமயம் மட்டும் ஏன் எதுவும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் சிந்தித்து பார்த்தது,ஒன்றும் மட்டுப்படவில்லை.

ஒரு சமயத்தில் இது மாதிரி கோளாறான சிந்தனைகள் அலுப்பை உண்டாக்கியது,காரணம் இயற்க்கையின் உந்துதல்கள்,காளையேறி பல நாட்கள் ஆகிறது மறுபடியும் தன் கூட்டத்திலே சேரலாம்,மனிதனின் சுபாவங்கள் சிலவற்றை காளை தன் கூட்டத்திடம் பிரயோகித்து பார்க்கலாம் என்று நினைத்தது.

ஒரு நாள் நிசியில் சன்னதம் கொண்டு எழுந்து ஆடி சக மாடுகளை கூட்டி தனக்கு போதம் வந்துவிட்டதாகவும்.நான் சாதாரன காளை மாடு இல்லையென்றும் நான் உங்களின் மீட்பர் என்றும் அதை தன் கனவில் இறக்கையுடன் கூடிய இரண்டு கெடாரிகள் வந்து சொன்னதாகவும்,கூறவே முதலில் யாரும் நம்பவில்லை. சில இளங்க்காளைகள் சிரித்துக் கொண்டன. சில கன்றுகளும் அதன் தாய் பசுக்கள் மட்டும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தன.

இருந்தாலும் காற்று கொம்பனுக்கு சாதகமாகவே வீசியது.

பின்னாளில் கொம்பன்  தன்னை  நம்பும் சில காளைகளையும் சில ஜெர்சி ரக பசுக்களையும் கூட்டி கோயிலின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் பிரசங்கம் உபாசனைகளும் நடந்தேற்றியது.  நாளைடவில் பக்கத்து ஊர் நாட்டு பசுக்களுக்கும்  செய்தி பரவி கொம்பனை கேட்க்க வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.மரத்தடியில் வெட்டவெளி ஆசிரமம் ஏற்படுத்தும் அளவிற்க்கு பிரசித்தி பெற்றது. கொம்பனான்டி என்றால் தெரியாத மாடுகளே கிடையாது சுற்று வட்டாரத்தில்.காளைகள் சிஷ்ய கோடிகளாக சேர்ந்து பணிவிடை செய்தன.இரவு நேரங்களில் சில உயர்ரக சிந்திப் பசுக்களை அழைத்து வந்து பஜனை நடந்ததாக வந்த செய்தி  கொஞ்சம் மிகையாக இருக்கலாம். செக்ஸ் ஆராய்ச்சி என்று சொல்லி சமாளிப்புகள் நடந்தன. எதிர்ப்புகளும் எழாமலில்லை.

சிறிது நாட்கள் இப்படியாக ஓடியது,ஆனாலும் உண்மையை  அறைகுறையாக  அறிந்தவன் உறங்கியதில்லை, கொம்பனுக்கு இந்த வாழ்க்கை முறையும் சலித்துதான் போனது, தான் தேடிப் புல் மேய்ந்து தினம் பல காளையேறி வெயிலேறி தகிக்கும் தார் சாலைகளில் சாணி போட்டு  உழன்று மடியும் இனமில்லை என்ற எண்ணம் சிந்தையை உலுக்கிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் தான் வடதிசை நோக்கி நான்கு கால்நடையாக பிரயாணம் போகப் போறதாகவும் தன்னுடன் வருபவர்கள் வரலாமென்று கூறவே சிஷ்ய மாடுகள் மறுக்க ஆசிரம பணிகளை அதுகளிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பியது.

வடதிசை பிரயாணங்களின் போது சில நாட்கள் பெருநகரங்களில் சுற்றியது. அங்கு உயிரினங்கள் வாழ தோதான சூழ்நிலைகள் இல்லையென்று அறிந்துகொண்டது.கண்ணுக்கு எட்டின தூரம் வரை புல்பூண்டையே காணும்,மனித இனம் மட்டும் எப்படி பிழைக்கிறது என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது,பின் மிகவும் பிரயத்தனம் செய்து அந்த உண்மையை தெரிந்து கொண்டது.அதை யாரிடமும் சொல்வதாக இல்லை.

வட திசை பயணத்தின் ஒரு நாளில் டெக்கான் பீடபூமியில் மார்கழி இரவுக் குளிரில் மனம் அலைபாயவே எழுந்து நான்கு கால் போனபோக்கில் நடந்தது. தூரத்தில் மூன்று இளங்காளைகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன, அருகில் மங்கிய வெளிச்சத்தில் ஒரு பசு நிற்பது தெரிந்தது. வெட்டவெளி ஆசிரமத்தில் நாளைக்கு ஐந்து என்று ஏறிய காலமெல்லாம் இல்லை, போராடுவது சிரமம், பேசி மயக்கி வேண்டுமானால் பார்க்கலாம் மனித காளைகள் போல. "இது வேலக்கி ஆகாது" இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தது,சமாளிக்க முடியவில்லை,சிறு காயங்களுடன் தப்பித்து ஓரமாக வந்து நின்றது,ஒன்றும் பலனில்லை.பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது.

சிரித்துக்கொண்டே தோற்றுப்போன காளைகளோடு சேர்ந்து திரும்பி நடந்தது.மனிதனின் குணங்கள் தனக்கும் தொற்றிக் கொண்டதை நினைத்து வெட்கிய நேரம் முகத்தில் சுளீரென்று வெளிச்சம் அடித்தது. அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் கரிய நிழல் போல தன் முன்னால் நெருங்கி வருவது தெரிந்தது.நெருங்க நெருங்க ஏதோ ஆபத்து வருகிறது என்று மட்டும் சூதாரித்து ஒரு முடிவுக்கு வந்த நேரம் கொம்பனும் மற்ற காளைகளும் ஒரு டெம்போ வேனில் ஏற்றப்பட்டு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தன.பின் கொம்பன் ஒற்றைக் காளையாக குடோனில் அடைப்பட்டிருந்த தன் சக மாடுகளையெல்லாம் காப்பாற்றி வெளியே வந்ததெல்லாம் வேறு கதை.
                                                                                                   
அது நடந்த ஆகிறது பல காலம்.இந்த இருபத்தைந்து வருடங்களில் எங்கும் சுற்றி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்து சேரத்தான் முடிந்தது.பழைய நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. பின்னிரவு நேரம்,சாலைகளில் மனித நடமாட்டம் மங்கியிருந்தது,அப்போதும் கூட மனிதன் பிற உயிர்களை நடமாட விடுவது கிடையாது,சுளீரென்று முதுகில் அடி விழுந்தது காளைக்கு, பழக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரன் கத்தினான், துள்ளிக் கொண்டு சாலையின் அப்பக்கம் ஓடியது.எதை வைத்து அடித்தான் என்று தெரியவில்லை,அடித்த இடம் எரிந்தது.சாலையின் ஓரமாக சென்று பின்னங்கால்களை மட்டும் மடக்கி உட்க்கார்ந்து மூத்திரம் கால்களில் தெளிக்காமல் பெய்தது.எரிச்சலாக இருந்தது.ஹஸ்த பாதாங்குதாசனம் கற்றுக்கொண்டது வசதியாக போயிற்று. நிறைய தெரிந்துகொண்டுதான் இருந்தது இத்தனை வருடங்களில். பயணங்கள் என்றுமே அலுத்துபோனதில்லை இந்த காளைக்கு.

தன் இருபத்தைந்தாண்டு பயணங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது.மனித இனம் தன் இனத்தை விருத்தி செயவதை ஒரு தொழிலாகவே செய்வதை அறிந்து திகைத்தது.பசுவை ஏமாற்றி பால் கறக்கும் விதத்தையும் மேலும் பசுவை சிணை பிடிக்க வைக்க வெள்ளைக் கோட் போட்ட ஒரு மனிதன் ஊசி போன்று கையில் வைத்திருக்கும் தன் ஆண் குறியை பயன்படுத்துகிறானென்றும் அந்த குறியை எளிதாக தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளவும் குளிர்பெட்டியில் வைக்கவும் செய்கிறான் என்பதையும் அறிந்து மிரண்டு போனது.அதிகம் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதுதான்.

எல்லாம் தெளிவு பெற்றும் ஒரு குறை இருந்தது.அதுதான் மொழி ஆளுமை. பின் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.சாட்சாத் சரஸ்வதி தேவியை நோக்கி பத்து திங்கள் ஒரு மலையடிவாரத்தில் தவம் இருக்கவே அந்த வரமும் கிடைத்துப் போனது. பின் சில பல மனித மொழிகளை  படிக்கவும் கற்றுக்கொண்டது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவிற்க்கு இல்லை யென்றாலும் ஓரளவிற்க்கு புலமை பெற்றிருந்தது. அஃறினைகளுக்கு இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாசகர்கள் முயல வேண்டாம்,கதை ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது, விட்டு விடுங்கள்,அவ்வபோது குப்பையில் கிடைக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலம் மனித இனத்தின் நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொண்டது. பின் ஹிந்தி, அங்கிலம் போன்ற மொழிகளும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது. முதலில் ஹிந்தி கற்க நேரும்போது மனதுக்குள் ஹிந்தி எதிர்ப்பு துளிர்விட்டது.வேறு வழியில்லை தன்னைப் போன்ற நாடோடிகளுக்கு மொழி பேதம் ஏது, ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி  அடையப்போவது ஒன்றுமில்லை.

உயிரியல் தத்துவங்களுக்கும் குறையில்லை.குப்பையில் கிடந்த பள்ளி மாணவனின் விடைத்தாளிலிருந்து டார்வின் கொள்கையையும் மனித உடலின் அனாட்டமியையும் அறைகுறையாக தெரிந்து கொண்டது.பரிணாம வளர்ச்சியின் பயனாக உயிரினங்களின் தலை,கை,கால்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப நீட்டி,முழக்கி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து தன் கால்களை வளைத்து நெளித்து பார்த்தது. பின்னங்கால்களில் பாதி எழுந்து நின்று விட்டை போட்டுவிட்டு முன்னங்கால்களை பின்னால் வளைத்து தண்ணீர் ஊற்றி அலம்ப முயற்சி செய்து பார்த்து பின் இது அதீத கற்பனை என்பதையும் உணர்ந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது.அந்த முயற்ச்சியை கைவிடாமல் தோதாக சில யோகாசன முறைகளையும் பழகிப் பார்த்தது.

நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரியத் துவங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்று.தான் ஒரு காளை என்றும் அது மனித இனம் தங்களுக்கு பொதுவாக சூட்டிய பெயர் என்றும் தெரிந்து கொண்டது.

அவ்வபோது சில அரசியல் கட்சி கூட்டங்களையும் தொண்டர்கள் பின் ஒரு ஓரமாக உட்க்கார்ந்து கேட்க்க வாய்ப்பிருந்தது,எல்லாம் செய்தாலும் வயிற்றுப் போராட்டம் பெரும்பாடாகவே இருந்தது.சில நேரங்களில் உடல் பசிக்கு துணை தேடுவதும் அறிதாகவே நடந்தது.காலையேறி வருடம் இருக்கும், தியானம்,யோகாசன பயிற்சி  காரணமாக அதை துறந்தாகிவிட்டது, சில முறை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் மனித இனம் தன் கைகளை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை ஒரு பருவ இதழில் கொம்பன் படித்திருந்தது.தனக்கு அந்த வசதி இல்லையென்று நினைக்கும் போது தாங்கொனா துயரில் ஆழ்ந்தது.

எத்தனை படிப்பிணைகள்,தன் வாழ்வு மற்ற காளைகள் போலல்லாமல் இனிதே முற்று பெற்றுவிட்டதாக உணர நேர்ந்தாலும் அநேக நேரம் நிம்மதி இழந்து தவித்தது. அது தூங்கிப்போன சிந்தையை எழுப்பிக் கொண்டே இருந்தது.

குடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த உலோகத் துகள்கள் வயிற்றில் ஏற்படுத்திய அரவம் காளையின் குடலை அரித்துக்கொண்டே இருந்தது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.தான் சிந்தித்தவற்றை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக போகிறோம் என்று நினைக்கையில் துயரம் உணவுக் கவளம் வைத்திருந்த தொண்டையை அடைத்தது.துயரத்தை அடக்கி கவளத்தை மறுபடியும் வாயில் கொண்டு சென்று அசைப்போட்டது.

எவ்வளவு நேரம் சாலையோரங்களில் குப்பைகளை மேய்ந்தாலும் பசி மட்டும் அடங்காதுபோல.எழுந்து மறுபடியும் நடந்தது.சுவற்றில் புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் இருந்த மனிதனின் உருவத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது, அந்த போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் "பருவ ராகம்" என்ற படப் போஸ்டர் ஒட்டியிருந்தது.அதை கிழித்து திண்று பசியை தீர்த்துக்கொண்டது. பசி அடங்கவில்லை, திரும்பி நடப்பது வீண்,காலையில் பார்த்துக் கொள்ளலாம்.சாதாரன காளையாக இருந்து கிடைத்ததையாவது அனுபவித் திருக்கலாம் என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை.முதலில் இந்த பாரத்தை இறக்கி வைத்தால் தேவலாம் போல் இருந்தது. மிதமாக வீசும் குளிர் காற்று என்னவோ செய்தது.சினிமா சுவரொட்டியை பார்த்ததிலிருந்து மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியில் சென்று பச்சையாக ஏதும் மேய்ந்து பார்க்கலாம் என்றாலும் போகப்போக நீண்டுகொண்டே செல்கிறது நகரத்தின் ஆக்கிரமிப்பு , அதற்க்கு பேசாமல் இங்கேயே கடைத் தெருவில் மீந்து போனது எதாவது கிடைக்கும். வாயிலும் கண்களிலும் நீர் ஒழுக அலைந்தது.தனக்கு இவ்வளவு ஞானம் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு நாள் முழுக்க சிந்தனை செயவது தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை என்பதை நினைத்து மனம் வேதனை அடைந்தது. தூக்கம் வராமல் உலாத்தியதில் களைத்துப் போயிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்து உட்க்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போடத் துவங்கியது.
                                                 
                                                        ----தொடரும்----

Wednesday 23 January 2013

'5சி' யும் நைந்து போனதோர் பயணமும்

வியப்பாகத்தான் இருக்கிறது,தோசையில் தூக்கமருந்து எப்படி இயற்கையாகவே இருக்கிறது என்பது, தின்றால் தூக்க வருமென்று இதற்கு முன்னரே கல்லூரியின் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிந்ததுதான் ஆனாலும்   இந்த நான்கு வருடங்களில் சில சுய பரிசோதனைகள் மூலம் நிறைய தெரிய நேர்ந்தது. அப்படித்தான் தோன்றுகிறது எப்போதும் ஒரு போதை நிலையில் இருப்பதும் சுகம்தான்.அதற்கு இந்த உளுத்தம் பருப்பும் அரிசிமாவும் கலந்து அரைத்து மாவாக்கி ஒருவாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வைத்து எடுத்து சுட்டுத் தருகிற தோசையும் ஒரு காரணம்தான்.

தோசை மிக எளிதில் சுட்டுவிடலாம் ஒன்று, அரைத்த மாவை குளிர்சாதனப் பெட்டியில்  நான்கு அல்லது ஐந்து  நாட்களுக்கு மிகாமல் வைத்துக் கொள்ளலாம் இது போன்ற வசதிகளால் காலையும் இரவும் தோசை என்பது சிரமம் இல்லாதது என்று அம்மாவுக்கு தெரிந்தது எனக்கும் தெரிய வருவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

வீட்டில் அம்மா அப்பா என்னைத் தவிற வேறு யாரும் இல்லை.அவர்களை சொல்லியும் ஒன்றும் ஆவதற்க்கில்லை,தினமும் விருந்து வைக்க உடல்நிலை ஒத்துக் கொள்ளாது,

"எத்தன நாள்தான் வடிச்சி கொட்டுவாங்க"

"பொன்னு பாத்து கண்ணாலம் பண்ணி வைக்கலாமானு கேட்டாக் கூட  ஒத்துக்க மாட்டேங்குற,என்னதான் முடிவுல இருக்கியோ,எப்டியோ போய் தொல"

வீட்டில வரும் கேள்விக்கு உடனடி பதில் கைவசம் ஒன்றும் இல்லை.

கல்யாணம் தேவையான ஒன்றுதான், ஆனால் அதைப் பற்றிய கற்பனையில் ஆழ்ந்த நிமிடமே மனம் சில புதிர்களை போட்டுக் கொள்கிறது.திருமணம் மனிதனின் கடைசி தேவையாக இருக்க முடியுமா என்று தோன்றிய கணம் மறுபடியும் குழப்பம். இதில் இவ்வளவு யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை, ஆனாலும் தற்சம்யம் முடிவெடுப்பது சிரமம்தான் .

தற்போதைய தேவை எதுவென்றும் அறியாமல் இல்லை ,ஏழு மலை, ஏழு கடல் தாண்டி போய் கிடைக்க கூடியதும் இல்லை, நெருங்கும் தூரத்தில்தான், கிடைத்தால் மிச்ச நாட்களில் வேறு பெரிதாக எதற்கும் ஆசைப்படப் போவதில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யக்கூடிய அளவுக்கு அதில் நம்பிக்கை உள்ளது.பிறகென்ன ? இருப்பதை இழக்க நேரிடும் என்ற பயம்தான்,இருப்பது பெரிய புதையல் இல்லையென்றாலும் அந்த ஒரு புதையலை பாதுகாக்க வாழ்நாளில் பல தியாகங்களை செய்தாயிற்று. இழந்தது தானாக என்றாவது கிடைத்தால் வைத்துக் கொள்ள சிரமமில்லை.

        ஆனாலும் பழம் நழுவி  விழும்வரை காத்திருப்பது இயலாமை காரணம் என்று சொல்ல முடியாது,வேறு சிலவற்றை அடைய செய்த தியாகம்தான் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்ளலாம்.ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது எப்போதும் சுலபமாகவும், புத்திசாலித் தனமாகவும் தெரிகிறது.

இது இப்படி இருக்கையில் பகல் கனவவென்று ஒரு அற்புதமான விஷயம் அன்றாட நாட்களில் நிகழவில்லையெனில் சான்றோன் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இழந்த இன்பத்தின் கூட்டுத்தொகைகளை பெருக்கி அமைந்த உலகத்தை  தினமும் சாத்தியப்படுத்தி பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.ஆனால் முதலில் கனவு காண்பதை நிறுத்தனும்.அக்கனவு நேரடி காட்சிகள் தரும் அனுபவத்தை குறையச் செய்கிறது என்பது உண்மைதான்

                                                         ************

காட்சிகள் புலப்படத் துவங்கியதுமே,ஏழா நம்பர் புதுச்சத்திரம் பேருந்து நின்றது. இன்னும் பத்து நிமிடத்தில் வரும் 5சி பரங்கிபேட்டை வண்டி. மூன்று பேருந்துகள்  ஒன்றாக சேர்ந்து வரும்.பின் வருபவர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேன்டும் அடுத்த பேருந்திற்க்காக, நம் அரசு இயந்திரம் அப்படி. இப்போதே வந்து கால் மணி ஆயிற்று. பேருந்துக்காக காத்திருக்கும் இந்த அற்ப நேரத்தில் எவ்வளவு சிந்தனை?

பத்து ஆண்டுகளில் நிறைய மாற்றம்,சிதம்பரம் முன்பு போல இல்லை,
வீக்கம் பெரிதாகி கொண்டுதான் இருக்கிறது.மக்களின் வாங்கும் சக்தி பெருகிக் கொண்டே இருப்பதாக கேள்விப் படுகிறேன். நுகர்வோராகவே மக்களை வைத்திருப்பது ஒன்றிரண்டு முதலாளிகளின் சாதனைகள் என்று தெளிவாகிறது.எத்தனை நாள் இப்ப்டி இருக்கமுடியும், உலகம் உய்ய நுண்ணுயிர்கள் முதலாக பகிர்வது அவசியம், உணவு சங்கிலி.'சும்மா இருக்குறதையெல்லாம் நாமளே எடுத்துகிட்டா எத்தன நாளைக்கு இங்க காலம் தள்ள முடியும்'.

இன்று வியாழன் சந்தை நாள் பேருந்தில் இடம் கிடைப்பது சிரமம்தான்.போய் சேர்ந்தால் எம்பிரான் கருனை.

அருகில் சிகரெட் பற்றவைத்து ஒருவர் ஊதிக்கொண்டிருந்தார்,இளைஞர்கள் யாரும் இப்போது பிடிப்பதில்லை, கிழவர் ஒருவர் மந்தகாசமாக இழுத்து ஊதிக் கொண்டிருந்தார், வேறு ஒருவராயிருந்தால் பிரகாசமாக எதாவது கருத்து தோன்றி  மறைய வாய்ப்புண்டு ,பாவம் இவருக்கு என்ன பிரச்ச னையோ' என்று நினைத்து  திரும்ப வேண்டியிருந்தது.

இது மாதிரி காத்திருக்கும் சமயங்களில் செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருப்பது அல்லது  கையில் வைத்து உருட்டுவது ஒருவகையான உடல்மொழி யுத்தி. இந்த பேருந்து நிறுத்தத்தில் சில தினக் கூலிகள்,சந்தைக்கு காய்கறிக் கூடை வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் தவிர ஏனைய குடிமக்கள் அனைவரது கையிலும் செல்போன் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. இந்த சாதனத்தை தொழில் போட்டியின் காரணமாக ஒருவர் கண்டுபிடித்ததாக படித்திருக்கிறேன். தனிமனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இவ்வளவு தாக்கத்தை அது ஏற்படுத்த இந்த சிறிய காலம் போதுமாக இருந்திருக்கிறது. அவனுடைய கனவு எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

இப்படி மறைந்திருக்கும் உண்மை தெரிய வருகையில், எங்கோ எவரோ ஒருவர் காணும் கனவின் விளைவாக நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நிச்சயப் படுத்தப் படுகிறது என்பது வியப்பை அளிக்கிறது.

                                                            *****************

இது கனவல்ல 5சி வந்துவிட்டது ,ஒரு மணி நேரப் பயணம், 5சி என்பது கால் மணி நேரத்தில் சென்று அடைய வேண்டிய தூரத்தை இருபது நிறுத்தங்களில் நின்று ஒரு மணிநேரம் பயணம் மேற்க்கொள்ளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்க்கு சொந்தமான ஒரு கனரக வாகனம்.தொல்லை வேண்டாமெனில் தனியார் பேருந்து, தூக்கத்தை சிறிது நேரம் தியாகம் செய்து எழுந்து கிளம்பி முன்பாகவே காத்திருக்க்க வேண்டும், ஆனால் இனி எதையும் தியாகம் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று. கால் மணி நேரப் பயணம்தான், உயிருக்கு உத்தரவாதம் இல்லை, 5சி யிலும் இல்லை ஆனாலும் வேகம் குறைவு என்பதால்  சிறு காயங்களோடோ அல்லது கை கால்கள் இழந்தோ பிழைக்கலாம். எதாவது அரசு வேலைக்கூட கிடைக்கலாம் என்றாலும் தூக்கத்தை தியாகம் செய்யத் தயாரில்லை, நிச்சயமாக.

முந்தியடித்துக் கொண்டு ஏறியாயிற்று.ஆண் பெண் பேதமெல்லாம் இங்கு கிடையாது அழுத்தி உரசி,தள்ளி,பிதுக்கி முகத்தில் ஒரு முரட்டு முட்டியால் குத்து வாங்கி, இருக்கையில் அமர்ந்தாயிற்று,விடுவமா,பின்ன மூன்று வருட அனுபவம் சும்மாவா....பக்கத்து இடம் காலியாகத்தான் இருந்தது,தெரிந்த பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார், தினமும் இதே பேருந்தில் பயணிப்பவர்தான்,வங்கியில் பணிபுரிபவர்,என்னைவிட அதிக வயதுதான் ஒன்றும் யோசிக்காமல் உட்கார்ந்திருக்கலாம்,என்ன நினைத்தாரோ, பார்ப்பதற்க்கு பயமாக இருந்ததோ என்னவோ அதற்குள் இடம் நிரம்பியது. என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. ஆனால் ஆண் பெண் என்ற ஒரு காரணம் மட்டும் இருக்கலாம் என பின் தோன்றியது.

என்னைப்போல் எத்தனையோ பயணியை பார்த்ததுதான் இந்த 5 சி, டீசலும் ஓட்டுனரும் இருந்தால் பயணம்,வாரத்தில் இரண்டு நாளாவது ப்ரேக் டவுன் வழியிலேயே, இருந்தாலும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது, இதுபோல இன்னொரு 5சி பெயின்ட் அடிக்கப்பட்டு புதுப்பேருந்தாக அரசால் கணக்கு காட்டி உலாவருகிறதென்பதும் அறியாததில்லை, அதையெல்லாம் அவதாணித்துக்கொண்டேதான்  பயணிகிக்கிறது.

                                                                  ************

மெல்ல ஊர்ந்து சிதம்பரத்தை தாண்டுவதற்க்குள் 5 சி முழு கொள்ளளவை எட்டியிருந்தது.அதுவும் இன்று சந்தை நாள்.

பயணிக்க ஆரம்பித்த நாள் முதலாகவே நடத்துனரிடம் சில்லரையாகவே கொடுத்துதான் பழக்கம்,அப்படி ஒன்று இரண்டு ரூபாய் கொடுக்காவிட்டால் கூட கேட்பதில்லை,பணத் திமிறல்ல, திட்டாமல் வாங்கிக்கொண்டாரே என்ற நிம்மதிதான்.பின் இருக்கையில் இருந்த ஒரு பெரியவருக்கு வசை விழுந்தது,ஒருவேளை தினமும் சென்று வரும் பழக்கம் காரணமாகவும் நாகரிகமான உடை (என்னளவில்) காரணமாகவும் நான் தப்பித்து இருக்கலாம்.

வாழ்நாளில் சம்மந்தமே இல்லாமல் இருவருக்கு பயந்ததுண்டு,சின்ன வயசுல எனக்கு முடி வெட்டுறவர்,அடுத்ததா சில்லரைக்காக இந்த பேருந்து நடத்துனர். டவுன் பஸ் என்பதால் 5சி நடத்துனருக்கு ஓய்வு இல்லை, ஒரு நாள் பொழுதில் பேருந்துக்குள்ளேயே  அங்கும் இங்கும் இருபது கிலோமீட்டராவது பயணம் செய்யும் அதிசயப் பிராணி .

டூ விலரில் பயணித்தால் கால் மணிநேரப் பயணம்தான்.50 ரூபாய் பெட்ரோல் செலவு அவ்வளவுதான்.இந்திய தீபகற்பத்தில் பெட்ரோல் தேவையை குறைக்கவும் மாசில்லா சிதம்பரத்தை உருவாக்கவும் என்னால் முடிந்ததை செய்கிறேன் பேர்வழி என்று மூன்றாயிரம் போட்டு சைக்கிள் ஒன்று வேறு வாங்கி வருடம் ஆகிறது. பரம்பரை சைக்கிளான அட்லசையே தூசு தட்டி உபயோகித்திருக்கலாம், எளிமையானவர் என்று பிறர் சொல்வதற்கு நான் பிச்சைக்காரன் இல்லை என்பதை முதலில் நிருபிக்க வேண்டியுள்ளது. அதனால் புது சைக்கிள்.அதுவும் ஒரு மாதத்தோடு சரி.

                                                              ************

எந்த கியர் என்று தெரியவில்லை,ஒரு மாதிரியான கியரில் அமங்கள ஓசையெழுப்பிக் கொண்டு 5சி மணலூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது.

ஜன்னல் ஓரமாக உட்க்கார்ந்துகொண்டு காற்று வாங்கி ரசிக்கும் நிலையெல்லாம் இல்லை,அப்படி செய்து அதிகப்படியான மாசு நுரையீரலுக்கு சென்று ஒவ்வாமை ஏற்பட்டதுதான் மிச்சம்,அதுவும் டூ வீலரில் வண்டியில் செல்லும்போது முகத்தை மூடாமல் செல்ல முடியாது,கண் எரிச்சல் வேறு.உண்மையில் இது மாதிரி காற்றையும் தண்ணீரையுமே மாசுபடுத்தி வாழ்நாளை கடத்தும் வாழ்க்கையத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில்  மக்கள் சிந்திக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருகிறது,இன்னமும் தெளிவில்லை சமூகத்தில் தனித்துப் போவது யாரென்று.

பேருந்து அடுத்த நிறுத்தம்,வழக்கமாக ஏறும் நரிக்குறவர் கூட்டம்,மற்றவர்கள் போலவே இவர்களும் வார பரங்கிப்பேட்டை சந்தையில் காட்டில் கிடைத்த தேன்,நரிக்கொம்பு ,மணிகள் விற்பனை செய்வதுண்டு.இங்கு காடென்று ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்.ஏறியதுமே பேருந்தில் உள்ள இதர முகங்கள் அசிங்கத்தை கண்டதுபோல் சுளிக்க ஆரம்பிக்கும், ஏதொ புரியாத மொழியில் ஒலி எழுப்பி  பேசிக் கொள்வார்கள் அவர்கள் பேசும் மொழி என்னவென்று இன்றுவரை புலப்படவில்லை, யார் கண்டார்கள் தமிழைவிட பழமையானதாகக் கூட இருக்கலாம்,செம்மொழி கூட்டம் நடத்த இவர்கள் அரியணை ஏறினால்தான் சாத்தியம்.5சிக்கு இந்த மனித பேதம் கிடையாது ஆனால் அரியனையில் இருப்பவர்கள் 5சியில் ஏறியதும் கிடையாது.

அதில் ஒரு குறத்திப் பெண்ணை பார்த்திருக்கிறேன், பதினாறு வயது இருக்கலாம், பார்த்தால் கண் விட்டு அகலாது. அப்பெண்ணின் மீது சில நாட்கள் காதலில் கூட  விழுந்திருக்கிறேன், அவர்களின் மற்ற பெண்கள்போல் இல்லை, அழகு இருப்பதனாலோ என்னவோ பொதுவாக மற்ற நவநாகரிக பெண்களுக்கும் ஏற்படும் இயற்கைக்கு மாறான உடல்மொழி, இடைவெட்டி நடத்தல், கூந்தலை அடிக்கடி ஒதுக்குவது, ஒரு மாதிரியான கண்டுகொள்ளாத புன்னகை இந்தப் பெண்ணிடமும் இருந்தது வியப்பளிகவில்லை,கொஞ்ச நாட்களாகவே பேருந்தில் பார்க்கமுடிவதில்லை.

டூ வீலரில் சென்றால் இதுமாதிரியான அனுபவங்களை இழக்க நேரும் என்பதாலயே பேருந்து பயணம் என்பதும் ஒரு காரணம்.ஆனாலும் இது அலுத்துவிட்டது, செய்து பழகி நைந்து போன விஷயங்கள் சிந்தையை கவ்விப் பிடிப்பதில்லை.

                                                                ***********

பேருந்து படிகளில் நிரம்பி வழிந்து எழுபது டிகிரி கோணத்தில் சாய்ந்து கொண்டு சென்றது.இது தமிழக ஓட்டுனர்களுக்கே தெரியும் வித்தை.இந்த நிலையிலும்  படியில் தொங்கிக் கொண்டு வரும் பள்ளி மாணவர்கள். இடம் கிடைத்தாலுமெ அப்படித்தான்,இவர்களுக்கு இது ஒருவகையில் எதிர்பாலரின் கவனத்தை கவரும் உத்தி பெண்கள் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கமான ஆடைகள் அணிந்து கவருவதுபோல்,தவறில்லை நியதியே அதுதானே, தடுத்து கட்டுப்பாடுகள் போட்டால் முடியுமா.ஆனாலும் ஆண்கள் காதில் தோடு போட்டுக்கொள்வது மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை, அதில் பெண்களுக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

புவனகிரி  தாண்டி ஊர்ந்து கொண்டு சென்றது 5சி.இதே நாள் போனவருடம் இருமருங்கும் ராஜ ராஜ சோழன் என்று பலகை நட்டு முற்றிய நெற்கதிர்கள் அறுவடைக்காக,இப்போது இல்லை.யாரையும் சொல்லத் தோன்றவில்லை.

வெகு நேரமாகவே என் பக்கத்தில் கிழவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், இடம் கொடுக்க வேண்டுமென்றால் தியாகம் செய்தாக வேண்டும்,வேறு வழியில்லை, தர்மம தலைக்காக்கட்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்திருக்க வேண்டியிருந்தது.

5சி யில் நின்று கொண்டு பயணம் செய்வது கருடபுராணத்தில் வரும் செய்முறை விளக்கமாக இருக்கலாம்.பேருந்தில் காய்கறி,மீன்,கருவாடு கூடைகளின் வீச்சம்  மனிதர்களின் வியர்வை நாற்றத்துடன் சேர்ந்த வேதியல் நிகழ்வின் காரணமாக  ஒரு வினோதமான கலவையான வாயுவை முகத்தில் பாய்ச்சியது போல் உணர நேர்ந்தது.

வங்கி ஊழியர் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தார், அப்போதே பக்கத்தில் உட்க்கார்ந்திருக்கலாம், இப்போது மூன்று பக்கமும் ஆண்கள் புடைசூழ நெருக்கி..

5 சி யில்நின்று கொண்டு செல்வதென்பது பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு மாறாக கூட்டத்தில் மிதப்பது போல்தான். கூட்டம் நெருக்கியது. எங்கிருந்தோ ஒரு பெண்மணியின் கொண்டை ஊசி கண்ணத்தை கீறி  குருதி தோய்ந்தது. இந்த கடினமான சூழ்நிலையிலும் நடத்துனரின் கைகள் எங்கிருந்தோ பாம்பு போல் நீண்டு வந்து சில்லரைக் கேட்டு பயணச்சீட்டு கொடுத்ததை பாராட்டாமல்  இருக்க முடியாது. திறமையானவர்தான், இல்லயென்றால் இந்த பாரத நாட்டில் பிழைப்பு நடத்த முடியுமா? ஆனால் இரண்டு பக்கமும் வாட்ட சாட்டமான பெண்மணிகளின் இடையில் மாட்டிக்கொண்டது இப்போதுதான் புரியத்துவங்கியது,இரு பக்கமும் உருளும் ரோலரில் மாட்டிக் கொண்டது போல்தான்.

                                                    ****************

முட்லூர் தாண்டி பரங்கிப்பேட்டை ரயிலடி நோக்கி சற்று சீரான வேகத்தில் சென்றது 5 சி.கடல் பக்கம் என்ப்தால் இங்கு சிறிது காற்று வாங்கிக் கொள்ளலாம்.

நல்ல வேளை,கிழவரின் இடம் வந்தது. ரயிலடியில் இறங்கிக்கொண்டார், இடம் மீண்டும் கிடைத்தது,உடல் ஒரு சுற்று குறைந்தது போல் இருந்தது திக்பிரம்மையாக இருக்கலாம்.அடுத்த நிறுத்தத்தில் கூட்டம் ஒருவாறு குறைந்தது.பக்கத்தில் இருந்தவரும் இறங்கவே தொம்மென்று விழுந்து பக்கத்தில் இருக்கையை பிடித்தார்  மீன்காரப் பெண். நகர்ந்து இன்னும் இடம் கொடுக்க வேண்டியிருந்தது, இருவர் அமரும் இருக்கையை முக்கால்வாசி பிடித்தாயிற்று.வியக்காமல் இருக்க முடியாது.

சந்தை நாட்களில் இவர்களை பார்ப்பதுதான்.சில நேரங்களில் அவதனித்திருகிறேன். வியாபாரம் நிமித்தமாக பயணிக்கிறார்கள், அல்லது அடிப்படை தேவையான சோறு, அதன் காரணமாக பயணம்.இவர்களின் உடையலங்காரம், அது இருப்பதாக உணருவார்களோ என்னவோ? தன்பாட்டிற்க்கு விலகி பாதி இடுப்பு வரை விலகி இருக்கும். வாயில் இருந்து வரும் வார்த்தைகள் தமிழ் அகராதியில் என்ன காரணம் பொருட்டோ  சேர்க்கவில்லை, வசைமொழி என்று தனித் தமிழ் அகராதியே போடலாம். நடத்துனரிடம் சகஜமாக இரண்டு அர்த்தம் தொணி க்கும் விதத்தில் வாக்குவாதம் நடக்கும்.

'என்ன கிராக்கிங்கடா இதுங்க,பெண் என்ற கட்டுப்பாடு இல்லை, ஆக்கங்க் கெட்ட பொம்பளைங்க'னு சிலர் சொல்வதுண்டு, அவர்கள் சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அப்படி சொன்னவர்களிடம் கேட்டிருக்கிறேன்.

'சார் இவங்கலாம் நாலு இடத்துக்க்கு போறவங்க,மூணு வேல திங்கனும்னா கட்டுப்பாடுலாம் பாத்தா முடியுமா,புருசன் நல்லா சம்பாதிச்சான்னா விட்டுக்குள்ளயே படிதான்டாம இருக்கலாம்'நம்ம மதங்கள் சொல்ற பொன்னுங்களுக்கான கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க  அவர்களின் அடிப்படைத் தேவை பூர்த்தியாகி இருக்கனும், சுருக்கமா சொல்லனும்னா பணம் வேணும் சார் "

'ஒழுக்கம்னு ஒன்னு  தேவையில்லையா,என்ன சார் பேசுறீங்க'

பேசிப் பயணில்லை,வீட்டில இந்தப் பெண்களுக்கு என்ன நிலைமையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கலாம் அரசுப் பள்ளிகளில் அல்லது அவர்களும் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்.புருஷன் இருக்கானோ அல்லது டாஸ்மாக் ஓரத்தில் விரை தெரிய ஆடை விலகி மயங்கிக் கிடக்கிறானோ. அன்று பயணம் செய்தால் சோறு. நாம் விவாதிக்கிற சில்லரை விஷயங்கள் இவர்களுக்கு பெரிது கிடையாது,

நவநாகரிகம் சொல்கிற பெண்சுதந்திரம் அதை இவர்கள் பேச தங்களிடம் மிகுதியான பணம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் நமக்கு இது பெரிய விஷயம்தான்.விரகம் வியாபாரமாகிப் போன விஷயம்.

                                                         **************

எனது பயணமும் மறைமுகமாக சோற்றுக்காகத்தான்,இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஒரு தேவைக்காக மற்றொன்றை தியாகம் செய்து கடக்கும் 'இருத்தல்' பயணம்.
                                           
ஆனால் 5சி எப்போதும் போல்தான் பயணிக்கிறது,முடிவு தெரிந்ததோர் பயணம். நின்றது , இறங்கிக் கொண்டேன்.இப்போது அது மீண்டுமொரு பயணத்திற்க்கு தயாராயிருந்தது  எத்தனைமுறை செய்தாலும் அலுத்துப்போகாத பயணம்.

பஸ்டான்ட் டீ கடைக்காரர் புன்னகையுடன் வரவேற்றார்,மூன்று வருடமாக பார்த்து பழகி பின் மெல்ல வெறியேற வைக்கிற புன்னகை,

"நாதாரி இன்னிக்காவது டீயில கொஞ்சம் பால ஊத்துடா"
     

              

Monday 10 December 2012

வாலி வதைப் படலம்


காலேஜ் படிக்கறப்ப நண்பர்கள் சில பேர தெரியும் எப்டின்னா அவங்க வாழ்க்கையில ஒவ்வொரு விசயத்தையும் பெரிய திட்டம் போட்டுத்தான் செய்வாங்க, எதிர்காலம் பற்றிய பெரிய கனவுகளோடு இறுதியில் சென்று அடைகிற இடத்தை அதற்க்கான முழு திட்டமும் அவங்க கையில் இருக்கும், பாதையை விட்டு கொஞ்சம் விலகினாலும் பெரிய ஆபத்துனு எதோ உள்ளுணர்வாக இருக்குமோ என்னவோ ரொம்பவும் கவனமாக கடினமா தங்களோட வாழ்க்கையை அமைத்து நடப்பாங்க. படிச்சி டிகிரி வாங்கி வேலைக்கு போறது வேற விசயம் ஆனா காலேஜ் வாழ்க்கையை கடைசி வரை மறக்க முடியாமல் ஆக்குவது கண்டிப்பா அந்த டிகிரியா இருக்காது. நானெல்லாம் அந்த நாலு வருசத்த கடைசி வரைக்கும் மறக்கவே கூடாதுனே சில பல திரில்லரான வேலைகள் செய்திருக்கேன். ஆனாலும் எனக்கே பலதை தவற விட்டு விட்டோம் என்ற எணணம் இன்றுவரை உண்டு. அதற்கு காரணம் எனக்கும் எதிர்காலம் பற்றிய பயம் உண்டு,தெரிந்தோ தெரியாமலோ நானும் என் வாழ்க்கையின் சில கணங்களை கடினமாக்கிக் கொண்டேன் என்றுதான் தோன்றியது ராஜனை பார்க்கும்போது.

ராஜன் எங்கள் அலுவலகத்தில் எனக்கு பின்பு சேர்ந்தவர்தான்.தந்தை இறந்து அவருடைய வேலை இவருக்கு கிடைத்தது. திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால் நான் அதுவரை பார்த்திராத குடும்பத் தலைவர் என்றுதான் சொல்லவேண்டும்.மனிதருக்கு இல்லாத  பழக்கமே கிடையாது, சிகிரெட்,தண்ணி,பொன்னுங்கனு ஒரு சுகபோகினு சொல்லலாம். லோக்கலில்  பல பெரிய ஆட்கள், அடிதடி ஆட்களின் சகவாசம் வேற உண்டு. நான் வேலை  செய்யும் அலுவலக்த்தில் அனைவருமே 'குடி'மக்கள்தான் என்றாலும் அவர்களுக்கு குடும்ப பொறுப்பு இருப்பதை சில சமயங்களில் பார்க்க முடியும். இவருக்கு மனைவியோ குழந்தைகளோ இருப்பது அவர் பேச்சில்கூட தெரிந்து கொள்ள முடியாது. சம்பள சிலிப்  மூன்று அல்லது இரண்டு இலக்கம் தான்.  போடாத லோன் இல்லை.பிடித்தம் போக வீட்டுக்கு என்ன  போகுமோ தெரியல.அவருடைய அம்மாவுக்கு பென்ஷன் வரும் அதில்தான் குடும்பம் ஓடும்போல.அவர் எங்கள் அலுவலகத்திற்க்கு வந்து சேர்ந்த்தே ஏற்கனவே வேலை செய்த இடத்தில் பணத்தை கையாடல் செய்து கிடைத்த தண்டனை யால்தான்.

சக ஊழியருக்கெல்லாம் ஒரு பயம் இங்க என்ன செய்ய போறானோன்னு. ஆனா வந்த கொஞ்ச நாள்லயே எல்லார்கிட்டேயும் சிரிச்சி பேசி ரொம்ப ஜாலியான பேர்வழினு பேர் வாங்கிட்டாரு.இங்க ஏறகனவே எல்லாரும் தண்ணி கேசு இவரும் வந்து சேர்ந்துட்டதனால கேட்கவா வேணும்.வேலை முடிஞ்சதும் குரூப்பாவே தண்ணி அடிக்கிறதுனு எல்லாரும் ரொம்ப நெருக்கமாகிட்டாங்க.ஆனா செலவு எப்பவுமே இவருதான். அவங்க பையிலிருந்து காசே வெளிய வராது.எனக்கும் அவரோட நல்ல சினேகம் இருந்தது.

வந்த கொஞ்ச நாள்லயே மேலதிகாரிக்கும் அவருக்கும் மோதல், வேலையும் சரியா செய்யறதில்லை,பேச்சு எப்பவுமே உயர் டெசி பெல்லதான் இருக்கும்.

"த்தா நீ யார்றா என்ன வேல செய்ய சொல்றது,ஒரு போன் போட்டனா வீடு போயி சேர மாட்ட"

"ஐ வில் டேக் சிவியர் ஆக்சன் ராஜன்"-அதிகாரி.

"போடா தெரியும்  எல்லாத்தையும் பாத்துட்டுதான் வந்திருக்கோம்"

"ஐ வில் இஷ்யு மெமொ"

"குடு குடு கிழிச்சி மூஞ்சில போடுறேன்"

இந்த மாதிரி எதிக்ஸ்லாம் இங்க வழக்கமானதுதான்.இது பரவால்ல  இதுக்கு  முன்னாடி மேலதிகாரிய ஊழியர் ஒருத்தர அறுவாளால வெட்ட வந்ததுலாம் வேற விசயம்.ராஜன் எளிதில் கோபம் அடையக்கூடியவர்தான்,ஆனாலும் வெளிப்படையாக பேசுபவர்,வெளியிலும் நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிது.மாலை நான்கு மணி ஆனதுமே மொபைல் அலற ஆரம்பித்துவிடும், பார்ட்டி முடித்துவிட்டு வீடு போக பத்து ஆகும்போல.

வாழ்க்கையில் பெரிதாக தெரிகிற சில விசயங்கள் நாம் தேடிப்போனாலும் கிடைப்பதில்லை,ஒருவேலை அதை பெரிதாக நினைக்காவிட்டால் அது அன்றாட நிகழ்வாக நடந்துவிட்டுப்போகுமோ என்னவோ மூத்திரம் பெய்வதுபோல.ராஜனுக்கு எல்லா விசயமும் அதுபோலத்தான்.

எனக்கு அவரை பார்க்க சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கும்,எந்த கவலையுமே இல்லாம மனுசன் இருக்கமுடியுமா அதுக்கு ராஜன் மாதிரி இருந்தாதான் முடியுமானு?ராஜனை போன்றவர்களை நிகழ்காலத்தில் வசிப்பவர்கள் என்றுதான் சொல்வேன்.கடந்த கால ஏக்கமும் இல்லை எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும் இல்லை.எந்தவித சிந்தனைகளுமின்றி வாழ்க்கையை அனுபவிக்க தெரிவதும் ஒரு வரம்தான்.

என்ன மேட்டருன்னா எங்க அலுவலகத்துல ஒரு பொண்ணும் வேலை செய்யுது,சின்ன வயசிலே விதவை ஆனவங்க,அவங்க கணவரும் அங்கயே வேலை செயதவர்தான்.ஆனா தெரிந்த பெண்ன்றதனால மற்ற எல்லா  ஊழியர்களும்  அதுகிட்ட கண்ணியம்மா நடந்துப்பாங்க.அதுக்கும் ஆபிஸ் வந்துட்டு போறத தவற வேற வேலை எதுவும் செய்யத் தெரியாது. சொன்னாலும் திருதிருனு முழிக்கும்.இதுக்கிட்ட என்னத்த சொல்லினு இருக்கும்,பார்த்தாலும் பாவமா இருக்கும்.நமக்கு சில சமயம் வேலை கடுமையா இருக்கும்போது இது சும்மா தேமேனு உட்கார்ந்திருக்கும் அப்டியே  எரிஞ்சி வரும் ஆனாலும் சொல்லத் தோணாது.

 ராஜன் கிளார்க்காதான் வந்தாரு,இந்த பொன்னும் சும்மாதான் இருக்கேன்னு அவருக்கு துணையா எடுபுடி வேலை செய்யட்டுமேனு அதே ரூம்ல விட்டாச்சு. கொஞ்ச நாள் நல்லாத்தான் போயிட்டிருந்தது.நாளாக அந்த பொன்னு கிட்டேயும் சில மாற்றம் தெரிஞ்சது.மேக்கப் பொட்டுகிட்டு,கலர் கலரா புடவ கட்டிகிட்டுனு, அவருடைய ரூம்லயும் பேச்சு சத்தம் சிரிப்பு சத்தம்னு அதிகரிக்க ஆரம்பித்தது.ஜாலியா எதாவது பேசுவார்னு சும்மா இருந்துட்டோம்.

எங்ககிட்ட ஒருத்தர் இருக்கார் இந்த மாதிரி விசயங்கள ஆராய்ந்து மோப்பம் பிடிக்கறதுக்குனு,வேலை செய்வாரோ இல்லையோ போட்டு கொடுக்கிறது, பத்த வைக்கறதுதான் இவர் வேலை. ஆரம்பத்திலே  புலம்பல்,விசயம் வேற மாதிரி போயிடிச்சுனு.முதல்ல யாரும் நம்பல,அவரு சும்மா இருப்பாரா? யாரும் நம்பலைனு தெரிஞ்சதும் ஆதாரம் திரட்ட ஆரம்பிசிட்டாரு. ஒருநாள் அந்த பொன்னோட மொபைல் நம்பர கொடுத்து  அவுட்கோயிங்க் நம்பர் லிஸ்ட் கேட்டாரு நானும் ஒரு ஆர்வத்துல தட்டி பார்க்கும்போதுதான் தெரிஞ்சது. கடலை ஆபிஸ்ல முடிஞ்சி வீட்லையும் தொடர்ற விசயம்,ஆஹா மேட்டர் முத்திடிச்சு போல.தெரியாத்தனமா அந்த லிஸ்ட பிரின்ட் வேற போட்டு கொடுத்துட்டேன்.அவரு அதை கையில வச்ச்சிக்கிட்டு ஆபீஸ் பூரா ஆளுக் கொரு நகல் எடுத்து கொடுத்துட்டாரு. விசயம் அப்பத்தான் விவகாரம் ஆக ஆரம்ப்பிச்சுது.பொன்னு வேற தெரிஞ்ச பொன்னு, விடுவாங்களா?

 அடுத்த சில நாட்கள் அலுவலகமே அல்லோல கல்லோல பட்டது.விசயம் தெரிஞ்சு அந்த பொன்ன கூப்பிட்டு வச்சி கேட்டு அதுவும் இல்லைனு மறுத்து, நா  சும்மா  வேலை  சம்மந்தமா  சந்தேகம்  கேட்டேன்னு  அது சொல்ல, எல்லாருக்கும் தூக்கிவாரிப்  போட்டது.எனக்கு சிரிப்ப அடக்க முடியல.நேரடி ஆதாரம் இல்லாததால் கொஞ்ச நாள் அமுங்கிருந்தது விசயம்,என்னடா செய்யலாம்னு எல்லாரும் கையை பிசைந்து கொன்டிருக்கும்போது ஒரு நாள் ஆபிஸ் செக்யூரிட்டி அவங்க ரெண்டு பேரையும் ஏடாகூடமான நிலையில  அவங்க அறையில்  பார்க்க இப்ப ஆதாரத்தோட மாட்டிக்கிட்டாங்க.விசயம் மேலதிகாரி வரைக்கும் போனது. இதுக்கிடையில எங்க ஆபிஸ்ல இருந்த வங்க நடத்துன கூத்து இருக்கே,அவரோட குரூப்பா சேர்ந்து சரக்கடிச்ச வங்கெல்லாம் இப்போ எதிரியாகிட்டாங்க,

"அடிங்கொ தெரிஞ்ச பொன்னுனு கை வைக்காம இருந்தா இவன் வேலைய காட்டிடானா "

"ஆபிச பெனாயில் ஊத்தி கழுவங்கயா"னு அடிக்க போயிட்டார் ஒருத்தர்.

அதுவரைக்கும் வெறும் ஊழியராக இருந்தவங்கெல்லாம் கலாச்சார காவலராகி கையில கட்டைய எடுத்துட்டாங்க.ஒருவாரம் ஆபிசே குத்துவேன் கொல்லுவேன்னு ரணகள பூமியா இருந்தது.அவருக்கும் பின்புலம் கொஞ்சம் நிறைய இருக்கும் போல அந்த தைரியத்தில் 'பாத்துர்றேன், தூக்கிட்றேன்'னு எதிர்கூச்சல்.ஆனா அடிதடி நடந்த பாடில்ல.எல்லாருக்கும் வேலைய பற்றிய பயம் இருந்தது யாரு முதல்ல கைய வைக்கறதுனுதான் கொஞ்சம் தயக்கம்.ரத்தம் வராம சாட்சியில்லாம அடிச்சா கம்பெனி நடத்தை விதிகள் பாயாது.

ஒரு சமயத்தில் தொடர்பு  இருக்குனு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறமும் பிரச்சணை முடிஞ்சபாடில்லை.விசயம் அவங்க வீட்டுவரைக்கும் போக அந்த பொன்னோட  பெரிய பையனுக்கு பதிமூன்று வயது ,அவன் வீட்டு பக்கமே வர்றதில்லை, இவரோட  வீட்ல அவர் அம்மா மனைவி விசம் குடிச்சிடுவேன்னு மிரட்ட, இவரு அம்மாவையும்  மனைவியையும்  வீட்ட  விட்டு அடித்து துரத்த இவங்க காதல் இன்னும் முற்றியதே தவிர குறையல. எங்க ஆபிசுலயும் என்னென்னமோ செஞ்சி பார்த்தாங்க,ம்ம்ம் நடக்கல, அப்புறம் ஒரு நல்ல நாள்ல ஆள் செட் பண்ணி கை கால் முறிக்கற வரைக்கும் போன போது ரெண்டு பேரும் கோயிலில் கல்யாணம் செய்துகிட்டாங்க.

இப்போ ஊரறிய வைப்பாட்டி,  ஆபிஸ்லயும்  கொஞ்ச  நாள் மழை  விட்டும்  தூவானம் மாதிரி  அவ்வபோது  சில  வாய்ச்சண்டைகள், அவ்வளவு தான், பிசுபிசுத்தது. இப்போ கோபம் குறைந்து பொகைச்சல் ஆரம்பித்தது,

"மனுசன் வாழ்ந்தா இவன மாதிரி  வாழனும்டா,நாமளும்தான் வாழுறோம்"

"ஆமா தேவுடியா, புருசன் செத்து வயித்து பொழப்புக்கு வேல கொடுத்தா,ஒடம்பு பசிதான் முக்கியமா போயிட்டுது இவளுக்கு"

"இவதான் மயக்கிட்டா,நா கொஞ்ச நாள் சிரிச்சி பேசிருந்தா என்னையும் வளைச்சி போட்டிருப்பா "

ராஜனின் வீட்டில்அவர் மனைவியின் கூச்சல் மட்டும் அவ்வபோது எழுந்து அடங்கும்போல மற்றபடி பணத்திற்க்கு இப்போது பிரச்சணை இல்லையென்று கேள்வி, வீட்டில் பிரச்சணை வந்தாலாவது இதற்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்த்தவர்கள் அப்படி ஆகாததால்,அவர் குடும்ப பிண்ணனியை சந்தியில் இழுத்தனர்.

"அவனோட அம்மாவே ஒரு தேவடியாங்க,அவ பொண்டாட்டி ஊர் மேயுறவ,மாமியாரும் தொழில் பண்றவ பின்ன தாயளிக்கு புத்தி எப்படி போவும்,அவன் குடும்பத்துக்கு இதுலாம் ஒரு விசயமே இல்ல"

இப்படி சிறிது நாள் பேச்சுகள் வந்து பின் அதுவும் ஓய்ந்து போனது.

இவ்விசயத்தில் பிரச்சணை எழுப்புவது ஊழியர்கள் மட்டும்தான் ஏற்கனவே பல ஆண்டு முன்விரோதம் மேலதிகாரிக்கும் அவர்களுக்கும் இருந்ததால் எதிர்பாராதவிதமாக மேலதிகாரி ராஜனுக்கு ஆதரவாக இருந்தார். ஊழியர்கள் கொடுத்த மனுவை அவர் பரிசீலக்கவே இல்லை

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் நான் விலகியே இருந்தேன்,அவர் கூடவே சேர்ந்து சரக்கடிக்கவில்லையென்றாலும் அவரிடம் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது.விவகாரம் நடந்து கொண்டிருக்கும்போது ஒருமுறை அலுவலக ஊழியர்கள் அனைவரும் சேரந்து ராஜனை இடைநீக்கம் செய்ய மணு எழுதி அனைவரின் கையெழுத்தையும் வாங்கி என்னையும் கையெழுத்திட எவ்வளவு வற்புறுத்தியும் நான் முடியாதென்று மறுத்துவிட்டேன்.

ஒன்று அலுவலக நன்னடத்தை விதிகளின்படி இதுமாதிரி சம்பவங்கள் தண்டிக்கபட வேண்டியவைதான் ஆனால் பாதிக்கபட்டவர் முறையீடு செய்திருக்க வேண்டும்.அதற்க்கு இங்கு வழியில்லை. இல்லையென்றாலும் கூட அலுவலகத்தில் இருவரும் தகாத நடத்தையில் ஈடுபட்டதை ஒருவர் பார்த்திருக்கிறார்,இதை வைத்துக்கொண்டு அவரை நீக்கம் செய்யலாம். ஆனால் இங்கு இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது.எங்கள் கம்பெனி வரலாற்றை திரும்பி பார்த்தால் தெரியும். ஒரு கோடிவரை  ஊழல் செய்து  ஒரு இடையூறும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றவர்கள் உண்டு. இது ஒரு சார்பான காரணம் மட்டும்தான் நான் இந்த விசயத்தில் ஒன்றும் செய்வதற்கில்லை என்பதற்கு. உண்மை என்னவென்றால் என்னுடைய குழப்பமான மணநிலைதான்.ராஜன் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவர் செய்தது தவறுதான்,ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார்.

உண்மையில் இருவரும் திருமணம் வரை செல்ல வாய்ப்பிருக்கவில்லை, ராஜன் அவ்வாறு மாட்டிக்கொள்பவரில்லை.எங்க ஊழியர் சொன்னதுபோல

"அந்த பொன்னுக்கு ஒடம்பு பசி,இவனுக்கு காசு வேணும் சரக்கடிக்க"

இந்த சம்பவத்தை அப்படியே விட்டிருந்தால் இருவரும் தானாகவே பிரிந்திருக்க வாய்ப்புண்டு,இருவருக்குமே வீட்டில் குழந்தைகள் உண்டு. உண்மையில் ஊழியர்கள்தான் இதை பெரிதாக்கி வெடிக்க வைத்துவிட்டார்கள்.

இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு ராஜனும் அந்த பெண்ணும்  ஜோடியாகத்தான் வருகை, சிரித்துப் பேசிக்கொண்டே,மற்றவர்கள் காதில் விழும்வரை. இவருக்கும் இப்போ இரண்டு சம்பளம், சரக்குக்கு குறைவில்லை. கை செலவில் பஜாஜ் டிஸ்கவர் ஒன்னு வாங்கியாகிவிட்டது,கலர் கலராக ட்ரெஸ், அவர் மனைவியும் வேற வழியில்லாமல் இவரிடம் வந்துவிட்டதாக தெரிந்தது. இப்போது இரண்டு குடும்பம்.மனுசன் ஒரு மாதத்தில் ஏக சதை போட்டு முகத்தில் பள பளப்பு கூடியிருந்தது. முன்னைவிட முகத்தில் எப்போதும் ஒரு எள்ளல் தொணி, சிரிப்பு.

"பார்த்தியா எப்டி வந்தோம்ல" என்று.

சரி முடிந்தது, இனிமேலாவது வாங்குற சம்பளத்திற்க்கு அலுவலகத்தில் வேலை நடக்குமென்று நினைக்கும்போது ஒரு நாளில் ராஜன் அவர் வீட்டு மின்விசிறியில் மனைவியின் புடவையால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.   
              
சற்று வியப்பாகத்தான் இருந்தது.புற உலகத்திற்க்காகவே  தங்களுடைய  வாழ்க்கையை  கடினமாக்கி   கொள்பர்களின்  மத்தியில் ராஜன் சில நாட்களாவது தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அவர் கடுமையான மண உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

எந்த ஒரு மனிதனுக்கும் எவ்வளவு பெரிய பாவங்களிலிருந்தும் தன்னை விடிவித்துக் கொண்டு  ஒரு புதிய வாழ்க்கை வாழ உரிமையுண்டு.

ராஜன் தூக்கு மாட்டி தொங்கிய மறுகணமே குடும்பத்தினர் வந்து காப்பாற்றியுள்ளனர்.ஆனால் அவர் சில கணம் தாமதித்திருந்தால் நிலைமை விபரீதம்தான்.இப்போது முன்னைவிட தான் செய்வதில் நம்பிக்கையுடன் இருக்கிறார் .அந்த பெண்ணின் வீடு வரை சென்று குடும்பம் நடத்துகிறார். அந்தப் பெண்ணை வேறு ஊருக்கு பணி மாற்றம் மட்டுமே செய்ய முடிந்தது மற்றவர்களால்.

 

Monday 27 August 2012

ஒரு சன்டேவும் சில குறிப்புகளும்

ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்ற எதிர்நோக்கிய நாட்களெல்லாம் உண்டு,இப்போது இல்லை ,காலையில் விடுமுறை நாளென்பதால் பொறுமையோடு தின்ற ஐந்து தோசை,தோசை என்று சொல்ல முடியாது, வேண்டுமானால் அப்பம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் இது அதிலும் சேர்த்தியில்லை என்றுதான் தோன்றுகிறது,இரண்டு அப்பத்தை சேர்த்து வைத்தார்போல் தடிமம்,நான்கு சென்டிமீட்டர் ஆரத்துடன்,சில சமயம் இரண்டு ஆட்களுக்கு சேர்த்து சுட நேரும்போது ஆரம் ஆறு சென்டு மீட்டர் வரை நீளும்,சாப்பிட்டு உட்க்கார்ந்தால் எழுந்திருக்க தோணாது,வயிறு மந்தமாகி, சீரணமாகாமல்,வேலை நாட்களானால் அலுவகத்தில் குனிந்து நிமிரும்போது செரிமானமாக வாய்ப்புண்டு,மதிய சோறும் திங்கமுடியாமல் ஒருவாறு உருண்டு புரண்டு கணினி முன் தவம் கிடந்து,அதுவும் இல்லையென்றால் சில சமயம் தடித்த புத்தககங்களை கையில் எடுத்துக் கொண்டோ இல்லை
தலையில் வைத்துக் கொண்டோ,பெரும்பாலும்"போரும் அமைதியும்" அதே பத்தாவது பக்கம், தூக்கம் சொக்கிக்கொண்டு வரும்.இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் வாழ்நாள் சாதனைதான். முகப்புத்தகத்தில் சிறிது நேரம்.

 மணி நான்கு,செல்பேசி சிணுங்கியது,நண்பர்தான்,திரையரங்கில் ஆறுமணி
 காட்சி,என்ன படம் என்பதெல்லாம் இல்லை,மொழிபேதம் கிடையாது ஹிந்தியானாலும் சரி இரண்டரை மணி நேரம் கடக்க வேண்டும் அவ்வளவுதான்.எழுந்து குளித்துவிட்டு உடைமாற்றி கிளம்பலானான். ஒப்பனை செய்வதெல்லாம் அலுத்துவிட்டது,செய்துதான் என்ன?மங்கை, மடந்தை,அரிவை ,தெரிவைகள்  காமுறும் வகையொன்றும் இல்லை.
சைக்கிளை வெளியில் எடுத்து மிதித்தான்.

விடுமுறை நாளென்பதால் அவ்வளவாக சாலையில் வாகன நெரிசல் இல்லை, சில பல கனரக வாகனங்கள்,ஆண்கள்,பெண்கள்,சில ஆப்ரிக்க இளைஞர்கள் கூடவே பெண்களும், இருக்கமாக அரைக்கால் ட்ரௌசரும், மேலாடை கீழிறக்கப்பட்டு ,குலுங்க,நன்றாகத்தான் இருக்கிறது,வட மாநிலத்தவர் எண்ணிக்கயும் அதிகமாகத்தான் இருக்கிறது,  பத்து வருடம் முன்பு கூட மாநிறத்தைதான் வெள்ளையென்று நினைத்து அலைந்த காலமெல்லாம் உண்டு, இப்போதும் ஒன்றும் ஆகிவிட வில்லை,முயற்சி செய்யலாம்,அனால் நம்க்கோ,
"கோன் ப்னேகா குரோர்பதி",

"எத்தன மணிக்கு லவுட்டேங்கா",

"தீன் பஜேங்கா,துமாரா பேரு என்ன?",

"மேரா பேரு உஸ்தாத் அலிகான்.."

அவ்வளவுதான்.ஆங்கிலமும் குளறுபடிதான்,

"என்னப்பா வயசு ஆகிட்டே போகுது,பொன்னு பாத்திடலாமா"

"ஏதொ உங்க இஷ்டம்,உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி"

பொதுவான இந்த பதிலின் அந்தரங்கமான அர்த்தம் இப்போதுதான் புரியத் தொடங்குகிறது.

"தாயளி லெஃப்ட் சிக்னல் போட்டு ரைட்ல போறான் பாரு".

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஒரு வட இந்திய இளைஞனை வட்டார வழக்கில் வசைமாறி பொழிந்து கொண்டிருந்தார்.

                                                   ********************

திரையரங்கில் கூட்டம் இருந்தது முதல் வாரம் போல,நண்பர் சொன்னவுடன்தான் தெரிய வந்தது,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென்று

"இந்த டைரக்டர் எடுத்த மூனு படமும் ஹிட்"

"அப்டியா.."

"ஹீரொயின் ஹிந்தில ஃபேமஸ்..ஆறுகோடி சம்பளமாம்.."

"ஓஹோ."

போஸ்டரில் ஹீரோயின் அழகாகத்தான் இருந்தாள்,வயசுப்பையன்கள் என்றில்லாமல் ஆண்கள் அனைவரும் காமறும் அதிரூப சுந்தரிதான், ஹீரொவுக்கு சற்று கிழடு தட்டியிருந்தது,அதை மறைக்க ரோஸ் நிற சுண்ணாம்பு,சிகரெட் குடித்து கருப்பேறிய உதட்டை மறைக்க சிகப்பு சாயம்,போஸ்டரில் கதாநாயகியை இறுக்கமாக  அணைத்து மார்பில் முகம் புதைத்து கொண்டிருந்தார்,நாயகி முகத்தில் உண்ர்ச்சி கொப்பளிக்க அவன் தலையை கைவைத்து அழுத்திக்கொண்டிருந்தாள்,

ஹம்ம்..கொடுத்துவைத்தவன்தான்,சும்மாவா ஆறுகோடியில்ல...

மேட்னி ஷோ முடிந்து,டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்..

கண்மூடி திறப்பதற்க்குள் மக்கள் கூட்டம் டிக்கெட் கவுன்டரை சூழ்ந்து கொண்டது,டிக்கெட் கொடுப்பவருக்கு நான்கு திசைகளிலும் கைகள் நீள அவரும் அலுக்காமல் கிழித்து கொண்டிருந்தார், அனைவருக்கும் டிக்கெட் உண்டு என்றாலும் விட்டுவிடுவார்களா..மக்களின் பாரம்பர்யம் என்னாவது, தமிழா தேசியமல்லவா..

"டிக்கெட் எவ்வளவுடா"

"கீழ நூறு..பால்கனி நூத்தியம்பது.."

சரி பார்க்கலாம் ஹீரோயினுக்காக,ஆறு கோடி சம்பளம், நூறு ரூபாய்க்கு மலிவா காட்டுறான்,பார்த்துவிட்டு போகலாம் ஒன்னும் குறையில்லை என்று
 தோன்றியது.

பெரும்பாலும் கல்லூரி இளைஞர்கள்,ஆண், பெண்,ஒரு ஆண் பல பெண்கள்,பல ஆண்கள் ஒரு பெண் என்ற விகித அடிப்படையில் அங்கங்கு சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்,

"மச்சி ஒரு வாரத்துல அம்பது கோடி வசூலாம்..போன படத்தை பீட் பண்ணும்னு  பேப்பர்ல படிச்சேன்.."

"ஹீரோயின் அடுத்த படமும் தமிழ்லதானாம்..சம்பளம் எட்டு கோடியாம்..வெப்சைட்ல பார்த்தேன்.."

தங்கள் பொதுஅறிவை எடுத்து விட்டுக்கொண்டிருந்தனர் சிலர்,வெட்கமாகத்தான் இருந்தது இந்த செய்தியை படிக்காமல் விட்டோமென்று.

நண்பர் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார்.

உள்நுழையும்போதும் அதே அடிதடி..

எப்படியோ உள்ளே நுழைந்தாயிற்று..

தோதாக ஒரு இடம் தேடி அமர்ந்து சற்று மேல பட்டனை கழற்றி விட்டு ஆசுவாச படுத்திக்கொண்டான்.எதிர்புறம் சிலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போல,முன் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.கதை என்று இல்லாவிடிலும் அந்த சின்ன சந்தோசம் கெட்டுவிடக் கூடாதென்று காதை பொத்திக்கொண்டான்.

நாயகனைவிட கதாநாயகியை பற்றித்தான் பேச்சு அதிகமாக இருந்தது.ஆவலாகத்தான் இருந்தது,என்னதான் இருக்குமென்று பார்த்துவிடலாம்,

விளக்குகள் அணைந்தது,ரீல் ஓடியது,பெயர் போட்டார்கள்,கதாநாயகனின் பெயர் ஒவ்வொரு எழுத்தாக கீழிருந்து மேல் சென்றது,பின்னே அதிரும் மின்னணு வாத்தியங்கள் முழங்க. அரங்கமே அதிர்ந்தது விசில் சப்தத்தால்.சில இளைஞர்கள் பூ தூவினார்கள்,இருக்கையின் மீதேறி சட்டையை அவிழ்த்துப் போட்டு ஆடினார்கள்.ஹீரோ அறிமுக பாடல் முடிந்தவுடன் ஹீரோயின் முறை,கதாநாயகி அருவியில் குளிப்பது போன்ற பாட்டு,முழுக்க நனைந்து ஈரம் அப்பிய தாவணியுடன் தரையில் புரண்டு குதித்து, அவிழ்த்து, ஆட்டி, விரித்து,முங்கி கிரங்க வைப்பதுதான்,பாட்டு முடிந்தவுடன்தான் சற்று சூடு தணிந்தது போல் இருந்தது.நண்பரை திரும்பி பார்த்துக்கொண்டான். நண்பருடன் அரங்கில் வந்து அமர்ந்தால் பின் பேச்சே இருக்காது,ஒரே ஏரில் பூட்ட வேண்டியவை.கலா ரசனை கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.

காட்சிகள் நகர்ந்தன,நாயகன் வழக்கமாக பயம், வீரம், இழிப்பு, அற்புதம், 
இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை போன்ற நவரச உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்,அதற்க்கேற்ப கதாநாயகியும் மறற 
கதாப்பாத்திரங்களும் எதிர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.அவ்வபோது அலுக்கும்போது கதாநாயகி பருவ உடல் காட்டி நடனமாடி...

படத்தில் ஹீரே ஹீரோயினை ரேப் செய்வதுபோல் ஒரு காட்சி,துரத்திக்கொண்டு ஓடுகிறார் அத்துவானக் காட்டில்,தாவணி கிழிந்தாயிற்று, ஓடுகிறாள்,காட்சிகள் ஸ்லோ மோசனில் ஓட,ஹீரோயின் குலுங்கி ஓடுகிறாள்,தோதாக மழையும் பெய்கிறது,அட்ரா சக்கை. மாட்டிக்கொண்டாள், தரையில் புரளுகிறார்கள்,நாயகனின் கைகள் படர்கிறது, அணைக்கிறது, இறுக்குகிறது,அரங்கமே மயான அமைதியுடன் இருக்கையில் கேமரா வானை நோக்கி மேலெழுகிறது,எல்லாம் முடிந்தது,மூலையில் உட்க்கார்ந்து விசும்புகிறாள்.உதறிவிட்டு கிளம்பிய கதாநாயகனை கைப்பிடித்து இழுத்து..

போதுமா..இதுக்குத்தானா...

என்று ஆரம்பித்து இரண்டு பக்க வசனம் தமிழ் உச்சரிப்பு உதட்டசைவோடு ஒட்டாமல் பேசி முடித்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த கதாநாயகனை கேமரா நூறு சத்விகிதம் சூம் செய்கிறது,முகம் கோணலாக மாற,மூக்கு புடைக்க,கண்களிலிருந்து கண்ணீர் துளி விழுந்து நாயகியின் கைகளை நணைக்கிறது...இப்போது நாயகனிடமிருந்து வசனம்..

இவ்வளவு நாளா ஒரு மிருகமா வாழ்ந்துட்டேன்,தெரியல்,தப்புனு தெரியல என்று மறுபடியும் நான்கு பக்கம்.கதாநாயகன் திருந்திவிட்டதை உண்ர்த்தும் வகையில் நாயகி தாவணியில்லாமல் கிழிந்த ஜாக்கெட்டுடன் 
பாதிபகுதிகள் தெரியவே ,கதாநாயகனை மார்போடு அணைத்துக்கொள்கிறாள்.

வழக்கமாக வில்லன் நடிகர்தான் ரேப் செய்வதெல்லாம், இது புதிதுதான் ஒருவேளை ஆறு கோடி சம்பளம் காரணமாக இருக்கலாம்

இடைவேளை போட்டார்கள்..

பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்,

"ஹூரோ திருந்திட்டான்,இனிமே வில்லன பழிவாங்குவான்"

வேறென்ன,

டாய்லட் போகலாம்,அங்கும் கூட்டம் முந்திக்கொண்டது,சுவற்றில் தமிழனின் ஓவியத்திறமைகள்,மனித உடலின் அனாட்டமி,இலக்கியங்கள்,சில் இடங்களில் மொபைல் நம்பர்கள் எழுதி  நூறு ரூபாய் என்றிருந்தது, செய்தித்தாளில் காய்கறி விலைப் பட்டியல்  ஞாபகம் வந்தது.என்ன கட்டுப்படியாகும்.அரசு குறுக்கிட்டு இதற்க்கும் அடிப்படை விலை நிர்னயம் செய்ய வேண்டும்.

பாப்கான் வாங்கி கொறித்து கொண்டு வந்து மீதிப்படத்தை ரசிக்கலாம்,வெளியில் விற்பதைவிட இரண்டு மடங்கு விலை,இருந்தாலும் வியாபாரம் நடந்துக்கொண்டிருந்தது,நாம் ரௌத்திரம் பழகுவது காய்கறி சந்தையில்தான்.இரண்டு பெப்சி வாங்கி குடித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாயிற்று.

மீதி படம் ஓடிக்கொண்டிருந்தது,கதாநாயகன் பறந்து பறந்து பௌதிக விதிகளுக்கு கட்டுப்படாமல் சண்டையிட்டு கொண்டிருந்தார்.வசனங்கள் தெறித்தன,வாசகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட வசனங்களாம்,பரிசும் உண்டு,நாயகன் உக்கிரம் அடங்கும்போதெல்லாம் நாயகியை முகர்ந்து தணிகிறார்.நம்மையும் த்ணிய வைக்கிறார்.இறுதியில் வில்லன் நாயகியை ரேப் செய்வதுபோல் காட்சி,ஆனால் இந்தமுறை ஓடுவதோடு சரி, வில்லனுக்கு அந்த அனுகூலம் இல்லை.இறுதியில் வில்லனும் நாயகன்
பேசும் வசனத்தால் திருந்திவிடுகிறார்.

படத்தில் எல்லாரும் திருந்திவிடுகிறார்கள்,பார்ப்பவர்கள் தவிர,படம் முடிந்து செல்லும் போது பேசிக்கொண்டார்கள்,ஹீரோயினுக்காக பாக்கலாம்,சரியான் சீன்றா மச்சி.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் முடிவெடுத்தாயிற்று இனி சினிமா பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வதென.

செய்தித்தாளில் அசாம் கலவரம்,விலைவாசி உயர்வு,ஊழலுக்கெதிரான போராட்டம் ஆகியவற்றை பைப்பாஸ் செய்து சினிமா பக்கம், நேற்றைய படத்தை பற்றி போட்டிருந்தார்கள்,அதில் டைரக்டர் பேட்டி,

கீழே ஒரு துணுக்கு செய்தி,நடிகையின் கவர்ச்சி படத்துடன்

"நகைக்கடை திறப்பு விழாவில் மும்பை நடிகை இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு அடி,உதை"

போடு... சிரிக்கி பய புள்ள,ஆசைய பாரு,அவனவன் ஆறுகோடி குடுத்து கூட்டியாரானுவ,இவுருக்கு ஓசில கேக்குதா"