Wednesday 23 January 2013

'5சி' யும் நைந்து போனதோர் பயணமும்

வியப்பாகத்தான் இருக்கிறது,தோசையில் தூக்கமருந்து எப்படி இயற்கையாகவே இருக்கிறது என்பது, தின்றால் தூக்க வருமென்று இதற்கு முன்னரே கல்லூரியின் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிந்ததுதான் ஆனாலும்   இந்த நான்கு வருடங்களில் சில சுய பரிசோதனைகள் மூலம் நிறைய தெரிய நேர்ந்தது. அப்படித்தான் தோன்றுகிறது எப்போதும் ஒரு போதை நிலையில் இருப்பதும் சுகம்தான்.அதற்கு இந்த உளுத்தம் பருப்பும் அரிசிமாவும் கலந்து அரைத்து மாவாக்கி ஒருவாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வைத்து எடுத்து சுட்டுத் தருகிற தோசையும் ஒரு காரணம்தான்.

தோசை மிக எளிதில் சுட்டுவிடலாம் ஒன்று, அரைத்த மாவை குளிர்சாதனப் பெட்டியில்  நான்கு அல்லது ஐந்து  நாட்களுக்கு மிகாமல் வைத்துக் கொள்ளலாம் இது போன்ற வசதிகளால் காலையும் இரவும் தோசை என்பது சிரமம் இல்லாதது என்று அம்மாவுக்கு தெரிந்தது எனக்கும் தெரிய வருவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

வீட்டில் அம்மா அப்பா என்னைத் தவிற வேறு யாரும் இல்லை.அவர்களை சொல்லியும் ஒன்றும் ஆவதற்க்கில்லை,தினமும் விருந்து வைக்க உடல்நிலை ஒத்துக் கொள்ளாது,

"எத்தன நாள்தான் வடிச்சி கொட்டுவாங்க"

"பொன்னு பாத்து கண்ணாலம் பண்ணி வைக்கலாமானு கேட்டாக் கூட  ஒத்துக்க மாட்டேங்குற,என்னதான் முடிவுல இருக்கியோ,எப்டியோ போய் தொல"

வீட்டில வரும் கேள்விக்கு உடனடி பதில் கைவசம் ஒன்றும் இல்லை.

கல்யாணம் தேவையான ஒன்றுதான், ஆனால் அதைப் பற்றிய கற்பனையில் ஆழ்ந்த நிமிடமே மனம் சில புதிர்களை போட்டுக் கொள்கிறது.திருமணம் மனிதனின் கடைசி தேவையாக இருக்க முடியுமா என்று தோன்றிய கணம் மறுபடியும் குழப்பம். இதில் இவ்வளவு யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை, ஆனாலும் தற்சம்யம் முடிவெடுப்பது சிரமம்தான் .

தற்போதைய தேவை எதுவென்றும் அறியாமல் இல்லை ,ஏழு மலை, ஏழு கடல் தாண்டி போய் கிடைக்க கூடியதும் இல்லை, நெருங்கும் தூரத்தில்தான், கிடைத்தால் மிச்ச நாட்களில் வேறு பெரிதாக எதற்கும் ஆசைப்படப் போவதில்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யக்கூடிய அளவுக்கு அதில் நம்பிக்கை உள்ளது.பிறகென்ன ? இருப்பதை இழக்க நேரிடும் என்ற பயம்தான்,இருப்பது பெரிய புதையல் இல்லையென்றாலும் அந்த ஒரு புதையலை பாதுகாக்க வாழ்நாளில் பல தியாகங்களை செய்தாயிற்று. இழந்தது தானாக என்றாவது கிடைத்தால் வைத்துக் கொள்ள சிரமமில்லை.

        ஆனாலும் பழம் நழுவி  விழும்வரை காத்திருப்பது இயலாமை காரணம் என்று சொல்ல முடியாது,வேறு சிலவற்றை அடைய செய்த தியாகம்தான் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்ளலாம்.ஒன்றை இழந்து ஒன்றை பெறுவது எப்போதும் சுலபமாகவும், புத்திசாலித் தனமாகவும் தெரிகிறது.

இது இப்படி இருக்கையில் பகல் கனவவென்று ஒரு அற்புதமான விஷயம் அன்றாட நாட்களில் நிகழவில்லையெனில் சான்றோன் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இழந்த இன்பத்தின் கூட்டுத்தொகைகளை பெருக்கி அமைந்த உலகத்தை  தினமும் சாத்தியப்படுத்தி பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.ஆனால் முதலில் கனவு காண்பதை நிறுத்தனும்.அக்கனவு நேரடி காட்சிகள் தரும் அனுபவத்தை குறையச் செய்கிறது என்பது உண்மைதான்

                                                         ************

காட்சிகள் புலப்படத் துவங்கியதுமே,ஏழா நம்பர் புதுச்சத்திரம் பேருந்து நின்றது. இன்னும் பத்து நிமிடத்தில் வரும் 5சி பரங்கிபேட்டை வண்டி. மூன்று பேருந்துகள்  ஒன்றாக சேர்ந்து வரும்.பின் வருபவர்கள் ஒரு மணி நேரம் காத்திருக்க வேன்டும் அடுத்த பேருந்திற்க்காக, நம் அரசு இயந்திரம் அப்படி. இப்போதே வந்து கால் மணி ஆயிற்று. பேருந்துக்காக காத்திருக்கும் இந்த அற்ப நேரத்தில் எவ்வளவு சிந்தனை?

பத்து ஆண்டுகளில் நிறைய மாற்றம்,சிதம்பரம் முன்பு போல இல்லை,
வீக்கம் பெரிதாகி கொண்டுதான் இருக்கிறது.மக்களின் வாங்கும் சக்தி பெருகிக் கொண்டே இருப்பதாக கேள்விப் படுகிறேன். நுகர்வோராகவே மக்களை வைத்திருப்பது ஒன்றிரண்டு முதலாளிகளின் சாதனைகள் என்று தெளிவாகிறது.எத்தனை நாள் இப்ப்டி இருக்கமுடியும், உலகம் உய்ய நுண்ணுயிர்கள் முதலாக பகிர்வது அவசியம், உணவு சங்கிலி.'சும்மா இருக்குறதையெல்லாம் நாமளே எடுத்துகிட்டா எத்தன நாளைக்கு இங்க காலம் தள்ள முடியும்'.

இன்று வியாழன் சந்தை நாள் பேருந்தில் இடம் கிடைப்பது சிரமம்தான்.போய் சேர்ந்தால் எம்பிரான் கருனை.

அருகில் சிகரெட் பற்றவைத்து ஒருவர் ஊதிக்கொண்டிருந்தார்,இளைஞர்கள் யாரும் இப்போது பிடிப்பதில்லை, கிழவர் ஒருவர் மந்தகாசமாக இழுத்து ஊதிக் கொண்டிருந்தார், வேறு ஒருவராயிருந்தால் பிரகாசமாக எதாவது கருத்து தோன்றி  மறைய வாய்ப்புண்டு ,பாவம் இவருக்கு என்ன பிரச்ச னையோ' என்று நினைத்து  திரும்ப வேண்டியிருந்தது.

இது மாதிரி காத்திருக்கும் சமயங்களில் செல்போனை வைத்து நோண்டிக் கொண்டிருப்பது அல்லது  கையில் வைத்து உருட்டுவது ஒருவகையான உடல்மொழி யுத்தி. இந்த பேருந்து நிறுத்தத்தில் சில தினக் கூலிகள்,சந்தைக்கு காய்கறிக் கூடை வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் தவிர ஏனைய குடிமக்கள் அனைவரது கையிலும் செல்போன் இருப்பது ஒன்றும் வியப்பில்லை. இந்த சாதனத்தை தொழில் போட்டியின் காரணமாக ஒருவர் கண்டுபிடித்ததாக படித்திருக்கிறேன். தனிமனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இவ்வளவு தாக்கத்தை அது ஏற்படுத்த இந்த சிறிய காலம் போதுமாக இருந்திருக்கிறது. அவனுடைய கனவு எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

இப்படி மறைந்திருக்கும் உண்மை தெரிய வருகையில், எங்கோ எவரோ ஒருவர் காணும் கனவின் விளைவாக நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நிச்சயப் படுத்தப் படுகிறது என்பது வியப்பை அளிக்கிறது.

                                                            *****************

இது கனவல்ல 5சி வந்துவிட்டது ,ஒரு மணி நேரப் பயணம், 5சி என்பது கால் மணி நேரத்தில் சென்று அடைய வேண்டிய தூரத்தை இருபது நிறுத்தங்களில் நின்று ஒரு மணிநேரம் பயணம் மேற்க்கொள்ளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்க்கு சொந்தமான ஒரு கனரக வாகனம்.தொல்லை வேண்டாமெனில் தனியார் பேருந்து, தூக்கத்தை சிறிது நேரம் தியாகம் செய்து எழுந்து கிளம்பி முன்பாகவே காத்திருக்க்க வேண்டும், ஆனால் இனி எதையும் தியாகம் செய்வதில்லை என்று முடிவெடுத்தாயிற்று. கால் மணி நேரப் பயணம்தான், உயிருக்கு உத்தரவாதம் இல்லை, 5சி யிலும் இல்லை ஆனாலும் வேகம் குறைவு என்பதால்  சிறு காயங்களோடோ அல்லது கை கால்கள் இழந்தோ பிழைக்கலாம். எதாவது அரசு வேலைக்கூட கிடைக்கலாம் என்றாலும் தூக்கத்தை தியாகம் செய்யத் தயாரில்லை, நிச்சயமாக.

முந்தியடித்துக் கொண்டு ஏறியாயிற்று.ஆண் பெண் பேதமெல்லாம் இங்கு கிடையாது அழுத்தி உரசி,தள்ளி,பிதுக்கி முகத்தில் ஒரு முரட்டு முட்டியால் குத்து வாங்கி, இருக்கையில் அமர்ந்தாயிற்று,விடுவமா,பின்ன மூன்று வருட அனுபவம் சும்மாவா....பக்கத்து இடம் காலியாகத்தான் இருந்தது,தெரிந்த பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார், தினமும் இதே பேருந்தில் பயணிப்பவர்தான்,வங்கியில் பணிபுரிபவர்,என்னைவிட அதிக வயதுதான் ஒன்றும் யோசிக்காமல் உட்கார்ந்திருக்கலாம்,என்ன நினைத்தாரோ, பார்ப்பதற்க்கு பயமாக இருந்ததோ என்னவோ அதற்குள் இடம் நிரம்பியது. என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. ஆனால் ஆண் பெண் என்ற ஒரு காரணம் மட்டும் இருக்கலாம் என பின் தோன்றியது.

என்னைப்போல் எத்தனையோ பயணியை பார்த்ததுதான் இந்த 5 சி, டீசலும் ஓட்டுனரும் இருந்தால் பயணம்,வாரத்தில் இரண்டு நாளாவது ப்ரேக் டவுன் வழியிலேயே, இருந்தாலும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது, இதுபோல இன்னொரு 5சி பெயின்ட் அடிக்கப்பட்டு புதுப்பேருந்தாக அரசால் கணக்கு காட்டி உலாவருகிறதென்பதும் அறியாததில்லை, அதையெல்லாம் அவதாணித்துக்கொண்டேதான்  பயணிகிக்கிறது.

                                                                  ************

மெல்ல ஊர்ந்து சிதம்பரத்தை தாண்டுவதற்க்குள் 5 சி முழு கொள்ளளவை எட்டியிருந்தது.அதுவும் இன்று சந்தை நாள்.

பயணிக்க ஆரம்பித்த நாள் முதலாகவே நடத்துனரிடம் சில்லரையாகவே கொடுத்துதான் பழக்கம்,அப்படி ஒன்று இரண்டு ரூபாய் கொடுக்காவிட்டால் கூட கேட்பதில்லை,பணத் திமிறல்ல, திட்டாமல் வாங்கிக்கொண்டாரே என்ற நிம்மதிதான்.பின் இருக்கையில் இருந்த ஒரு பெரியவருக்கு வசை விழுந்தது,ஒருவேளை தினமும் சென்று வரும் பழக்கம் காரணமாகவும் நாகரிகமான உடை (என்னளவில்) காரணமாகவும் நான் தப்பித்து இருக்கலாம்.

வாழ்நாளில் சம்மந்தமே இல்லாமல் இருவருக்கு பயந்ததுண்டு,சின்ன வயசுல எனக்கு முடி வெட்டுறவர்,அடுத்ததா சில்லரைக்காக இந்த பேருந்து நடத்துனர். டவுன் பஸ் என்பதால் 5சி நடத்துனருக்கு ஓய்வு இல்லை, ஒரு நாள் பொழுதில் பேருந்துக்குள்ளேயே  அங்கும் இங்கும் இருபது கிலோமீட்டராவது பயணம் செய்யும் அதிசயப் பிராணி .

டூ விலரில் பயணித்தால் கால் மணிநேரப் பயணம்தான்.50 ரூபாய் பெட்ரோல் செலவு அவ்வளவுதான்.இந்திய தீபகற்பத்தில் பெட்ரோல் தேவையை குறைக்கவும் மாசில்லா சிதம்பரத்தை உருவாக்கவும் என்னால் முடிந்ததை செய்கிறேன் பேர்வழி என்று மூன்றாயிரம் போட்டு சைக்கிள் ஒன்று வேறு வாங்கி வருடம் ஆகிறது. பரம்பரை சைக்கிளான அட்லசையே தூசு தட்டி உபயோகித்திருக்கலாம், எளிமையானவர் என்று பிறர் சொல்வதற்கு நான் பிச்சைக்காரன் இல்லை என்பதை முதலில் நிருபிக்க வேண்டியுள்ளது. அதனால் புது சைக்கிள்.அதுவும் ஒரு மாதத்தோடு சரி.

                                                              ************

எந்த கியர் என்று தெரியவில்லை,ஒரு மாதிரியான கியரில் அமங்கள ஓசையெழுப்பிக் கொண்டு 5சி மணலூர் தாண்டி சென்றுகொண்டிருந்தது.

ஜன்னல் ஓரமாக உட்க்கார்ந்துகொண்டு காற்று வாங்கி ரசிக்கும் நிலையெல்லாம் இல்லை,அப்படி செய்து அதிகப்படியான மாசு நுரையீரலுக்கு சென்று ஒவ்வாமை ஏற்பட்டதுதான் மிச்சம்,அதுவும் டூ வீலரில் வண்டியில் செல்லும்போது முகத்தை மூடாமல் செல்ல முடியாது,கண் எரிச்சல் வேறு.உண்மையில் இது மாதிரி காற்றையும் தண்ணீரையுமே மாசுபடுத்தி வாழ்நாளை கடத்தும் வாழ்க்கையத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில்  மக்கள் சிந்திக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருகிறது,இன்னமும் தெளிவில்லை சமூகத்தில் தனித்துப் போவது யாரென்று.

பேருந்து அடுத்த நிறுத்தம்,வழக்கமாக ஏறும் நரிக்குறவர் கூட்டம்,மற்றவர்கள் போலவே இவர்களும் வார பரங்கிப்பேட்டை சந்தையில் காட்டில் கிடைத்த தேன்,நரிக்கொம்பு ,மணிகள் விற்பனை செய்வதுண்டு.இங்கு காடென்று ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான்.ஏறியதுமே பேருந்தில் உள்ள இதர முகங்கள் அசிங்கத்தை கண்டதுபோல் சுளிக்க ஆரம்பிக்கும், ஏதொ புரியாத மொழியில் ஒலி எழுப்பி  பேசிக் கொள்வார்கள் அவர்கள் பேசும் மொழி என்னவென்று இன்றுவரை புலப்படவில்லை, யார் கண்டார்கள் தமிழைவிட பழமையானதாகக் கூட இருக்கலாம்,செம்மொழி கூட்டம் நடத்த இவர்கள் அரியணை ஏறினால்தான் சாத்தியம்.5சிக்கு இந்த மனித பேதம் கிடையாது ஆனால் அரியனையில் இருப்பவர்கள் 5சியில் ஏறியதும் கிடையாது.

அதில் ஒரு குறத்திப் பெண்ணை பார்த்திருக்கிறேன், பதினாறு வயது இருக்கலாம், பார்த்தால் கண் விட்டு அகலாது. அப்பெண்ணின் மீது சில நாட்கள் காதலில் கூட  விழுந்திருக்கிறேன், அவர்களின் மற்ற பெண்கள்போல் இல்லை, அழகு இருப்பதனாலோ என்னவோ பொதுவாக மற்ற நவநாகரிக பெண்களுக்கும் ஏற்படும் இயற்கைக்கு மாறான உடல்மொழி, இடைவெட்டி நடத்தல், கூந்தலை அடிக்கடி ஒதுக்குவது, ஒரு மாதிரியான கண்டுகொள்ளாத புன்னகை இந்தப் பெண்ணிடமும் இருந்தது வியப்பளிகவில்லை,கொஞ்ச நாட்களாகவே பேருந்தில் பார்க்கமுடிவதில்லை.

டூ வீலரில் சென்றால் இதுமாதிரியான அனுபவங்களை இழக்க நேரும் என்பதாலயே பேருந்து பயணம் என்பதும் ஒரு காரணம்.ஆனாலும் இது அலுத்துவிட்டது, செய்து பழகி நைந்து போன விஷயங்கள் சிந்தையை கவ்விப் பிடிப்பதில்லை.

                                                                ***********

பேருந்து படிகளில் நிரம்பி வழிந்து எழுபது டிகிரி கோணத்தில் சாய்ந்து கொண்டு சென்றது.இது தமிழக ஓட்டுனர்களுக்கே தெரியும் வித்தை.இந்த நிலையிலும்  படியில் தொங்கிக் கொண்டு வரும் பள்ளி மாணவர்கள். இடம் கிடைத்தாலுமெ அப்படித்தான்,இவர்களுக்கு இது ஒருவகையில் எதிர்பாலரின் கவனத்தை கவரும் உத்தி பெண்கள் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கமான ஆடைகள் அணிந்து கவருவதுபோல்,தவறில்லை நியதியே அதுதானே, தடுத்து கட்டுப்பாடுகள் போட்டால் முடியுமா.ஆனாலும் ஆண்கள் காதில் தோடு போட்டுக்கொள்வது மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை, அதில் பெண்களுக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

புவனகிரி  தாண்டி ஊர்ந்து கொண்டு சென்றது 5சி.இதே நாள் போனவருடம் இருமருங்கும் ராஜ ராஜ சோழன் என்று பலகை நட்டு முற்றிய நெற்கதிர்கள் அறுவடைக்காக,இப்போது இல்லை.யாரையும் சொல்லத் தோன்றவில்லை.

வெகு நேரமாகவே என் பக்கத்தில் கிழவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார், இடம் கொடுக்க வேண்டுமென்றால் தியாகம் செய்தாக வேண்டும்,வேறு வழியில்லை, தர்மம தலைக்காக்கட்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்திருக்க வேண்டியிருந்தது.

5சி யில் நின்று கொண்டு பயணம் செய்வது கருடபுராணத்தில் வரும் செய்முறை விளக்கமாக இருக்கலாம்.பேருந்தில் காய்கறி,மீன்,கருவாடு கூடைகளின் வீச்சம்  மனிதர்களின் வியர்வை நாற்றத்துடன் சேர்ந்த வேதியல் நிகழ்வின் காரணமாக  ஒரு வினோதமான கலவையான வாயுவை முகத்தில் பாய்ச்சியது போல் உணர நேர்ந்தது.

வங்கி ஊழியர் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுதான் நின்று கொண்டிருந்தார், அப்போதே பக்கத்தில் உட்க்கார்ந்திருக்கலாம், இப்போது மூன்று பக்கமும் ஆண்கள் புடைசூழ நெருக்கி..

5 சி யில்நின்று கொண்டு செல்வதென்பது பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு மாறாக கூட்டத்தில் மிதப்பது போல்தான். கூட்டம் நெருக்கியது. எங்கிருந்தோ ஒரு பெண்மணியின் கொண்டை ஊசி கண்ணத்தை கீறி  குருதி தோய்ந்தது. இந்த கடினமான சூழ்நிலையிலும் நடத்துனரின் கைகள் எங்கிருந்தோ பாம்பு போல் நீண்டு வந்து சில்லரைக் கேட்டு பயணச்சீட்டு கொடுத்ததை பாராட்டாமல்  இருக்க முடியாது. திறமையானவர்தான், இல்லயென்றால் இந்த பாரத நாட்டில் பிழைப்பு நடத்த முடியுமா? ஆனால் இரண்டு பக்கமும் வாட்ட சாட்டமான பெண்மணிகளின் இடையில் மாட்டிக்கொண்டது இப்போதுதான் புரியத்துவங்கியது,இரு பக்கமும் உருளும் ரோலரில் மாட்டிக் கொண்டது போல்தான்.

                                                    ****************

முட்லூர் தாண்டி பரங்கிப்பேட்டை ரயிலடி நோக்கி சற்று சீரான வேகத்தில் சென்றது 5 சி.கடல் பக்கம் என்ப்தால் இங்கு சிறிது காற்று வாங்கிக் கொள்ளலாம்.

நல்ல வேளை,கிழவரின் இடம் வந்தது. ரயிலடியில் இறங்கிக்கொண்டார், இடம் மீண்டும் கிடைத்தது,உடல் ஒரு சுற்று குறைந்தது போல் இருந்தது திக்பிரம்மையாக இருக்கலாம்.அடுத்த நிறுத்தத்தில் கூட்டம் ஒருவாறு குறைந்தது.பக்கத்தில் இருந்தவரும் இறங்கவே தொம்மென்று விழுந்து பக்கத்தில் இருக்கையை பிடித்தார்  மீன்காரப் பெண். நகர்ந்து இன்னும் இடம் கொடுக்க வேண்டியிருந்தது, இருவர் அமரும் இருக்கையை முக்கால்வாசி பிடித்தாயிற்று.வியக்காமல் இருக்க முடியாது.

சந்தை நாட்களில் இவர்களை பார்ப்பதுதான்.சில நேரங்களில் அவதனித்திருகிறேன். வியாபாரம் நிமித்தமாக பயணிக்கிறார்கள், அல்லது அடிப்படை தேவையான சோறு, அதன் காரணமாக பயணம்.இவர்களின் உடையலங்காரம், அது இருப்பதாக உணருவார்களோ என்னவோ? தன்பாட்டிற்க்கு விலகி பாதி இடுப்பு வரை விலகி இருக்கும். வாயில் இருந்து வரும் வார்த்தைகள் தமிழ் அகராதியில் என்ன காரணம் பொருட்டோ  சேர்க்கவில்லை, வசைமொழி என்று தனித் தமிழ் அகராதியே போடலாம். நடத்துனரிடம் சகஜமாக இரண்டு அர்த்தம் தொணி க்கும் விதத்தில் வாக்குவாதம் நடக்கும்.

'என்ன கிராக்கிங்கடா இதுங்க,பெண் என்ற கட்டுப்பாடு இல்லை, ஆக்கங்க் கெட்ட பொம்பளைங்க'னு சிலர் சொல்வதுண்டு, அவர்கள் சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அப்படி சொன்னவர்களிடம் கேட்டிருக்கிறேன்.

'சார் இவங்கலாம் நாலு இடத்துக்க்கு போறவங்க,மூணு வேல திங்கனும்னா கட்டுப்பாடுலாம் பாத்தா முடியுமா,புருசன் நல்லா சம்பாதிச்சான்னா விட்டுக்குள்ளயே படிதான்டாம இருக்கலாம்'நம்ம மதங்கள் சொல்ற பொன்னுங்களுக்கான கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க  அவர்களின் அடிப்படைத் தேவை பூர்த்தியாகி இருக்கனும், சுருக்கமா சொல்லனும்னா பணம் வேணும் சார் "

'ஒழுக்கம்னு ஒன்னு  தேவையில்லையா,என்ன சார் பேசுறீங்க'

பேசிப் பயணில்லை,வீட்டில இந்தப் பெண்களுக்கு என்ன நிலைமையோ குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கலாம் அரசுப் பள்ளிகளில் அல்லது அவர்களும் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்.புருஷன் இருக்கானோ அல்லது டாஸ்மாக் ஓரத்தில் விரை தெரிய ஆடை விலகி மயங்கிக் கிடக்கிறானோ. அன்று பயணம் செய்தால் சோறு. நாம் விவாதிக்கிற சில்லரை விஷயங்கள் இவர்களுக்கு பெரிது கிடையாது,

நவநாகரிகம் சொல்கிற பெண்சுதந்திரம் அதை இவர்கள் பேச தங்களிடம் மிகுதியான பணம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் நமக்கு இது பெரிய விஷயம்தான்.விரகம் வியாபாரமாகிப் போன விஷயம்.

                                                         **************

எனது பயணமும் மறைமுகமாக சோற்றுக்காகத்தான்,இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஒரு தேவைக்காக மற்றொன்றை தியாகம் செய்து கடக்கும் 'இருத்தல்' பயணம்.
                                           
ஆனால் 5சி எப்போதும் போல்தான் பயணிக்கிறது,முடிவு தெரிந்ததோர் பயணம். நின்றது , இறங்கிக் கொண்டேன்.இப்போது அது மீண்டுமொரு பயணத்திற்க்கு தயாராயிருந்தது  எத்தனைமுறை செய்தாலும் அலுத்துப்போகாத பயணம்.

பஸ்டான்ட் டீ கடைக்காரர் புன்னகையுடன் வரவேற்றார்,மூன்று வருடமாக பார்த்து பழகி பின் மெல்ல வெறியேற வைக்கிற புன்னகை,

"நாதாரி இன்னிக்காவது டீயில கொஞ்சம் பால ஊத்துடா"
     

              

2 comments:

  1. நம்ம ஊர பத்தி எழுத தங்கர் பச்சன் தவிர வேற யாருமே இல்லன்னு நெனச்சேன்.... அசைவற்று சிதம்பரத்தை சிந்திக்கலானேன்.

    உங்க *வீட்டுக்கு வந்தேன் ... எங்க *வீட்டுக்கு மறக்காம வந்துடு ...
    *வலைப்பூ என படிக்க

    http://arulmoviereview.blogspot.in/2012/06/blog-post_2144.html



    :D

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,நானும் வரேன்

      Delete