Wednesday 9 April 2014

பெருந்திணை: பிரிவு ஆற்றாமை


சித்திரை மாத இரவு. தலைக்கு மேல்  நட்சத்திரங்கள் செறிந்து தெளிவாக இருந்தது வானம்.குஞ்சு ரொம்பவே குழப்பமாகத்தான் இருந்தான், எந்த துக்கமோ சந்தோஷமோ அதை அனுபவிப்பதை விட அதை நோண்டி ஆராய்ந்து புதிர் அல்லாததை புதிராக நினைத்து பதில் தேடுகிறேன் என்று தன்னையே குழப்பிக்கறது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது இது நாள்வரை.  செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். சாதாரன நாட்களாக இருந்தால் வானில் அகன்ட வெளியை நோக்கி அவற்றின் புதிர்களுக்கு விடைக்காண முயற்சிக்கலாம். இது அதுவும்  இல்லை. ஆனால் என்னவோ மல்லாக்க படுக்கப் போட்டு பெரியதொரு பாறையை நெஞ்சின் மீது ஏற்றி வைத்தது போல பாரம் கனத்தது. விலக்கும் தோறும் கனக்கும் போல. பாறையாகவே ஆகிவிட்டாலன்றி வேறு மார்க்கம் இல்லை என்று தோன்றியது.

காரணம்  'தனு' தான்.  காதலிக்கத் தொடங்கி அது நிறைவு பெறுவதற்குள் அடுத்த காதல் ஆரம்பித்து விடுவதாலயே காதலால் ஏற்படுகிற காயம் அந்த நிலையெல்லாம் தான் எப்போதோ கடந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன் தனு அப்படி முடிவாக சொன்னதின் பொருளை அவள்தான் சொன்னாளென்று நம்பவே கொஞ்ச நேரம் பிடித்தது, "இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை, நிஜமாவே வலிக்குது" என்று நினைத்துக் கொண்டான்.

ஒரே நிமிடம்தான் அவள் பேசியது.

"வீட்டுக்கு தெரிஞ்சிப் போச்சி,அப்பா எங்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது, அம்மா அழறாங்க, இது இனிமே சரி வராது, வீட்ல ஒத்துக்க மாட்டாங்க, அவங்கள எதிர்த்துலாம் நம்ம கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்ல நானும் அத பண்ணமாட்டேன், இதுல யோசிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல எங்க வீட்ல பிடிக்கல அவ்ளோதான், இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத" பதிலுக்கு காத்திராதவளாக பேசி முடித்துவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

பெரிய கவித்துவமான வாக்கியம் மாதிரியோ,உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்து கிடப்பது போலவோ இல்லை, ரொம்ப நாள் யோசித்து சொன்னது மாதிரியும் தெரியல ஆனா இதை வேறு எப்படியும் சொல்ல அவசியம் இல்லைதான். அந்த மாதிரி சொல்லவும் சிரத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூட தெரியவில்லை, காயப்படுத்துற எண்ணம் கூட இருக்கறதா தெரியல. ஆனால் அப்படி எந்தவித  எண்ணமும் இல்லைன்னாலும் காயப்படவேதான் செய்தது.

பொதுவாக பெண்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இவ்வாறு ஒரு முடிவெடுப்பது தெரிந்ததுதான் என்றாலும் காதல்னு வந்தபிறகு அதில் திளைத்து அதே சமயம் இந்த புற உலக பிரக்ஞையோடும் இருப்பது கடினம்தான், மாசத்துக்கு ஒரு தடவ நிதானமா லைட்டா சரக்கு அடிக்கறவன குடிகாரன்னு சொல்லமாட்டோம் இல்லையா அதே மாதிரிதான் பிரக்ஞை அற்றுப்போன மொடாக் குடிகாரனோட நிலைமையத்தான் காதல்னு சொல்லுறோம். அப்படித்தான் காதலித்திருந்தான் குஞ்சுவும். பிரக்ஞை அற்றுப்போய். தனு ஒரு வருடமாகத்தான் பழக்கம், செல்போனில் ஆரம்பித்து அப்படியே காதலாக வளர்ந்துவிட்டிருந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் ஒவ்வொரு அசைவிலும் அவளின் தாக்கம் இருந்தது அல்லது அவனுடைய அசைவின் காரணமே அவளாக இருந்தான்னுதான் சொல்லனும் அவளுக்கும் அப்படித்தான்னும் அல்லது அப்படி இருக்குமா? என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.பின் அவ்வபோது நேரில் சந்தித்து காதல் கானம் பாடி ஓடி தழுவியும் நழுவியும், பிறந்த நாள் காதலர் தினங்களுக்கு அன்புப் பரிசு பறிமாறுதலுமாக ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் தனு ஆரம்பம் முதலே புலம்பல்தான்,

"அப்பாவுக்கு தெரிஞ்சுதுனா அவ்ளோதான், நா உங்கிட்ட பேசுற மாதிரி யாருகிட்டயும் பேசுனது கிடையாது, இதெல்லாம் கேட்டாங்கனா நானா இப்டினு நினைப்பாங்க நம்பவே மாட்டாங்க, என்ன நல்ல பொன்னா நினைச்சிட்டு இருக்காங்க, இனிமே அடிக்கடிலாம் பேசமாட்டேன், எப்பயாவது தான் "

"இது ஒன்னும் பெரிய தப்பில்லையே நீ வேணா பாரு இன்னும் பத்து வருஷத்துக்கு அப்றம் இந்த கல்யாணம்ன்ற நிகழ்வே அரிதாகிடும், நாம செய்யறது தப்பா சரியானு நமக்கு பிந்தி வர்றவங்கதான் சொல்லனும்"

"நா அம்பது வருஷமானாலும் சரி வீட்ல ஒத்துகிட்டாதான், அவங்க நம்பிக்கையலாம் என்னால கெடுக்க முடியாது, நூறு வருஷம் ஆனாலும் என்ன பொறுத்த வரைல அது வீட்டுக்கு செய்யுற துரோகம்தான்"

இப்படி நிச்சயமில்லாமல் பேச்சு இருந்தாலும் நாளைக்கு பத்து தடவ அழைப்பு, அதற்கு இடையில் குறுஞ்செய்திகளும் வருவது தவறாது.

"நம்ம கல்யாணம் நடக்குமானுலாம் தெரியாது, என்னால ஓடிலாம் வர முடியாது, அப்டி ஏதும் நினைப்புலாம் வச்சிக்காத, வேற பொன்ன கல்யாணம் பண்ணிக்கோ"

ஆனாலும் மொபைல் எடுக்கலனா செமயா கோபம் வரும், "என்ன கழட்டி விட பாக்குறியா, கொண்ணுடுவேன், சரி இதுக்கு பதில் சொல்லு, என்ன புடிச்சிதான் லவ் பண்றியா" இந்த மாதிரி டார்ச்சர்லாம் ஒரு ஆம்பளை தன் வாழ்நாள்ல அனுபவிக்கலனா ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல. அவளின் இந்த புலம்பல்கள் காதலில் இருந்த அந்த ஒரு வருட காலமும் நீடித்து இருந்தது என்பது ஆச்சர்யபடும் விஷயமில்லைதான்.

எப்படியோ ஒரு நாள் மொட்டை மாடியில் செல்ஃபோனில் காதல் ரசம் சமைக்கும்போது ஒரு துளி அவங்க வீட்டுக்குள் தெறித்து பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. வீட்ல மாட்டிக்கிட்டா, குட்டு வெளிப்பட்ட அடுத்த இரண்டு நாட்கள் அவளிடமிருந்து எந்த அரவமும் இல்லை, எத்தனையோ தவிர்க்கப்பட்ட அழைப்புகளும் குறுஞ்செய்திகளுக்கும் பின்னுமாக ஒரே ஒரு பதில் வந்தது, இப்படியாக பிரிந்துவிடலாம் என்று. எதிர்பார்த்துதான். ஆனால் தன்னை சமாதானப் படுத்தும் எண்ணம் துளிக் கூட இல்லாமல் அவள் பேசியதுதான் நிறையவே காயப்படுத்தியது குஞ்சுவுக்கு.

"இதை எப்டி சொன்னா சமாதானம் அடைவேன்னு கொஞ்சமாவது நினைத்து பார்த்திருக்கனும், ஆனா அது மாதிரிலாம் ஒன்னும் தெரியல, சுத்த சுயநலம், எங்கிட்ட எடுத்து சொல்லிருந்தா நானே விலகிப் போயிருப்பேன், அப்போ என்னோட நிலைமை ஒரு பொருட்டே இல்ல அவளுக்கு, ஒரே ஒரு மெசேஜ் மட்டும் போதுமா இருந்திருக்கு, எல்லாத்தையும் மறந்துடுனு எவ்ளோ சுலபமா சொல்லிட்டா அதுவும் ஒரு மெசேஜ்ல, ஃபோன் பண்ணி சொல்லக்கூட பிடிக்கலயோ, அவ சொன்னதை பார்த்தா ஒரு முடிவோடதான் இருக்குற மாதிரி தெரியுது" உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தான். ஆத்திரம் பொங்க சுவற்றில் ஓங்கி அறைந்தான், 'விண்'னென்று தெறித்தது வலி. பொறுக்கமுடியாமல் கெட்டவார்தையில் கத்தினான், "த்தா..நாரக்**..தே***..பு***"

அந்த நேரம் பின் வீட்டு மாடியில் ஏதோ அரவம் தெரியவே அமைதியானான். அந்தப் பெண்தான், இது வேற கதை. ஒரு வருடத்திற்கு முன் கண்களால் பேசி அந்த நிலையிலேயே கைவிட்டாயிற்று. இப்போது இந்த நிலைமையில், கொஞ்ச நேரம் சைட் அடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். இறுக்கமாக இருந்த சூழ்நிலை கொஞ்சம் மாறியது. தென்னைக் கீற்றுகள் சற்று அசையத்தொடங்கியது, வியர்த்திருந்த உடலில்  லேசான குளிர்ந்த காற்று தழுவிச் சென்றது.இதமாகத்தான் இருந்தது, அமைதியானான். அந்தப் பெண் சென்றதுமே மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவ்வளவு எளிதில்  இந்த முடிவை அவளால் எடுக்க முடிகிறதென்றால் அதற்கான சமாதானங்களை அவள் நிச்சயமாக அந்நேரம் உருவாக்கி கொண்டிருக்க வேண்டும். என்னவாக இருக்கும் என்ற புதிரை அவிழ்க்க தொடங்கினான். தனுவுக்கு அவங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் என்னையும் பிடிக்கும்தான் ஆனால் இருவரில் யாரென்று வந்தால் சந்தேகமே வேணாம், அந்த நிலைமை இப்போ அவளுக்கு வந்திருக்கலாம், காதலித்த சமயத்தில் இருவரும் பரிமாறிக்கொண்ட அந்த இனிமையான உரையாடல்கள் அந்த நினைவுகள் கொஞ்சமும் அசைக்கலயா அவளை, அசைத்திருக்கும், அவளின் குடும்பத்தில் இந்த புதிதான பிரச்சணை அவளிடம் ஏற்படுத்திய மாற்றத்தை  அதை தடுக்கும் அளவுக்கு அந்த காதல் நினைவுகள் இல்லை என்பதுதான் உண்மை, காதலிக்கும்போது  பேசினது எல்லாமே உண்மையாக இதயத்திலிருந்துதான் வந்திருக்கனும் என்பதில் சந்தேகமில்லைதான் அதே சமயம் கண்ணு முன்னு தெரியாம காதலிக்கற அளவுக்கு அவள் பேதையும் இல்லை.

மேலும் அவள் வளர்ந்த சூழ்நில வேறு, கட்டுப்பாடான ஒன்று, கலாச்சார விதிமுறைகளை அடிப்படை அறமாக நினைத்து போதிதுக் கொண்டிருக்கும் பெரும்பாலான குடும்பம் போல்தான், அதன் காரணமாக அவளிடமிருந்து அவ்வபோது எழுந்த பயம் கலந்த புலம்பல்களை  நம்பிக்கையான வார்த்தைகளை கூறி சமாதானப் படுத்த முனைந்ததில்லை அது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். சொக்க வைத்து மயக்கி இருக்க வேண்டுமோ? அப்படியே இருந்தாலும் அந்த பேச்சுக்கெல்லாம் மசிபவளும் இல்லை.

"உன்ன பார்க்காம இருக்கவே முடியல, இன்னிக்கு பூரா உன்னதான் நினைச்சிட்டு இருந்தேன், உனக்காக உயிரையே கொடுப்பேன்" இந்தமாதிரி சினிமா வசனங்களுக்கெல்லாம்  "சரி சரி அளக்காத" என்று எரிச்சலான ஒரு பதில் வரும். அப்படிசொன்னது நிஜமாகவே பொய்தான் என்பது வேறு என்றாலும் அவ்வாறு மயக்கும் வார்த்தைகளை எப்படி கூறுவது என்பது கூட தெரியாத அசடனாக குஞ்சு இருந்தான் என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.இந்த தியாகத்தின் மூலம் வீட்டில் அவளுடைய பிரச்சணைகள் திர்ந்துவிடும் மாறாக யோசித்து இருந்தால்  பிரச்சணையை எதிர்நோக்கியபடியே வாழ்க்கையை கடக்க வேண்டிவரும்  என்ற எண்ணமே போதுமானது நிராகரிப்பதற்கு, இனி தனுவிடம்  பேசி ஒன்றும் ஆவதிற்க்கில்லை. இதிலிருந்து எந்த பலத்த காயமுமின்றி தப்பிக்க வழி தேடியாக வேண்டும். இவ்வாறு ஒரு நிலைக்கு வந்துவிட்டபோதே அந்த வழியையும் கூடவே கண்டடைந்திருந்தான். காதலில் காயம் ஏற்படாதவாறு விலகுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதை அறிந்திருந்தாலும் வேறு சில வழிகள் இருக்கத்தான் செய்கிறது.

குஞ்சு மீதான அவளின் காதலை சந்தேகப்படக்கூடிய அளவுக்கு எதுவும் இந்த ஓராண்டு நடந்தும் விடவில்லை அதனால் அதை நினைத்து சமாதானம் அடையவும் வாய்ப்பில்லை. பழிக்கு பழி வேண்டுமானால் உதவலாம். அதற்கு வன்மத்தை வளர்த்தாக வேண்டும், நயவஞ்சகமாக பழகி, பேசி துரோகம் இழைத்துவிட்டதாகவும் அல்லது தன்னைப்போலவே பல ஆண்களை அவள் ஏமாற்றியிருக்கக்கூடுமென்றும், இது அவளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே கூட இருக்கலாம் என்றும் எதாவது கற்பனை செய்து பார்க்கலாம் ஆனால் தனுவை அப்படி நினைக்கக் கூட மனம் துணியவில்லை. அப்படி நினைக்க முடியாவிட்டாலும் பழி வாங்குவது கொஞ்சம் ஆறுதலாக அமையலாம்.

எப்படி பழிவாங்குவதென்பது இங்கு பெரிய கேள்விதான்.

இந்த இழப்பு அவளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற முடிவுக்கு அவள் வந்திருந்ததனால், கொஞ்ச நாளில் எல்லாம் மறந்துவிடும் என்று அவள் சமாதானமாகி இருக்கலாம். மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னை இழந்ததை பெரிய இழப்பாக நினைத்து வருந்தினாள் என்றால் அதுவே பழிதீர்த்த மாதிரிதான். அப்படி அவளும் நினைக்க வேண்டுமே அவ பேசினத பார்த்தா ஃபீல் பண்ற மாதிரியே தெரியல, இரண்டு நாட்களுக்கு முன் இதே நேரம் எப்படிலாம் பேசிட்டு இருந்தோம்,  இந்நேரம் நினைக்காம இருக்கவே முடியாது, அப்டி எந்த சலனமும் இல்லாமல் இருந்தாளென்றால் அவகிட்ட பார்த்தது எல்லாமே பொய்யாக இருந்திருக்கனும், நிச்சயமா சொல்லலாம், அவளுடைய குணாதிசயங்களுக்கு அவ்வாறு அது இல்லையென்றால் அதிசயம்தான். அவளுக்கு வேற ஒருவனுடன் திருமணமும் நடக்கும், அதற்கு அவள் சம்மதித்தே ஆவாள். நினைக்கவே பயமாகத்தான் இருந்தது, இல்லற வாழக்கையில் விரக்தி ஏமாற்றம் எப்போதாவது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். அந்த தருணங்களில் இழந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அதுதான் அவளுக்கு தண்டனையாக இருக்கக்கூடும். ஆம் அதுதான் தனக்கும் ஆறுதலாக அமையும் என்று நினைத்தான் குஞ்சு."அவசரப்பட்டு அவள திட்டி விட்டுட்டாளோ இல்ல டார்ச்சர் பண்ணாளோ அதுவே  விலக்குறதுக்கு ஒரு வலுவான காரணத்தை உண்டு பண்ணிடும், அதுக்கு வாய்ப்பளிக்க கூடாது இந்த இரண்டு நாளைக்கு முன்னாடி எப்டி காதலித்தாலோ அப்படியே பிரியனும், அதுதான் சரியாக இருக்கும்" மார்கத்தை கண்டடைந்தவனாக திருப்தியுற்றான்.

இது பெண்களுக்கு பொதுவாக உள்ள மனநிலை என்றுதான் நினைக்கிறேன் தான் காதலித்து கைவிட்ட ஆண்களும் மறக்காமல் தாடி வளர்த்து திரிய வேண்டும் என்ற ஆசை,உண்மையாகவே உள்ளம் உருகி காதலித்து இருந்தாலும்கூட. அவ்வாறு இல்லாமல் மறுநாளே சகஜ நிலைக்கு திரும்பும் ஆண்கள் பெண்கள் மனதில் நிலைக்காமல் போகிறார்கள். ஏமாத்துறவன்னு கூட நினைக்க வாய்ப்பிருக்கு.ஆனால் தனு அப்படியில்லை, தாடியுடன் அவளை நினைத்து மருகினானென்றால் "இந்த முட்டாளையா லவ் பண்ணோம்" என்று நினைத்து உதறித் தள்ளிவிடுவாள். மிகுதியாக உணர்ச்சிவசப்படவும் கூடாது, அதை சுத்தமாக வெளிப்படுத்தாமலும் இருக்கக்கூடாது. அதே சமயம் காதல் கைகூடாததற்க்கு முழு பொறுப்பை அவள் மீது ஏற்றிவைத்தாகிவிட்டால் பின்னாளில் அவள் நினைத்து வருந்த  ஏதுவாக இருக்கலாம்.

தனு இப்போ எந்த மனநிலையில் இருப்பாள் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். இத்தனை நேரம் அவளிடம் பேசலாமா வேண்டாமா என்று குழப்பதுடனேயே மாடிக்கு வந்தவன் சற்றும் யோசிக்காமல் மொபைலை எடுத்து நம்பரை அழுத்தினான். மறுபக்கம் அழைப்பு ஒலி அடித்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தான்,அவளிடம் முதன்முதலில் பேசியபோதும் இப்படித்தான் இருந்தது,

"ஹலோ" மறுமுனையில் தனு.

".............."

பதட்டமாகத்தான் இருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் ஹலோ சொல்லக் கூட தடுமாறினான். பதற்றத்தில் சற்று முன் சிந்தித்த யாவும் மறந்தே போனது. இப்பவுமே கூட பிரக்ஞை இழந்துதான் போனான், இந்த இரண்டு நாட்கள் வேதனையை அனுபவித்திருந்தாலும் தன்னை இப்படி அலட்சியப்படுத்திப் பேசியதால் இனி அவளிடம் பேசவே போவதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான். ஆனாலும் இப்போது தனுவின் குரலை கேட்டப்பிறகு எதுவுமே எடுபடாமல்தான் போனது, நடக்கப் பழகி தடுக்கி விழுந்த குழந்தை வலி பொறுக்க முடியாமல் தன் அம்மாவிடம் முறையிடுவது போலவே அவனும்,

"என்னால முடியல,மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு,என்னென்னமோ யோசிக்க தோனுது"

"ப்ளீஸ் புரிஞ்சிக்கோ"

"இல்ல என்னால மறக்க முடியும்னு தோணல"

"செல்லக்குட்டி... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ, வீடே அமைதியா இருக்கு இங்க யாரும் என் கூட பேச மாட்றாங்க,பழைய மாதிரி அவங்க என் கூட பேசனும் சகஜமாகனும் நீ சரியானாத்தான் நடக்கும் இதெல்லாம்,என்ன மன்னிச்சிடு ப்ளீஸ்"

"என்ன ஏமாத்திட்டல்ல, ஃபோன வையி பேசாத"

"சரி என்ன வேணா சாபம் விட்டுக்கோ,விட்ல நா எப்டிலாம் சண்டை போட்டேன் தெரியுமா,இதுவரை எங்க அப்பாகிட்ட சண்டை போட்டதே இல்ல,ஆனாலும் அவங்க கொஞ்ச கூட அசையல"

"அப்டிலாம் ஒன்னும் சாபம் விடமாட்டேன்"

"சரி எல்லாம் சரியாகிடும்,எனக்கு கொடுத்து வைக்கல அவ்வளவுதான்,இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு"

"சரி வச்சிடு"

இதுதான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை என்பதை நினைக்கவே வேதனையாகத்தான் இருந்தது. தன் பழிக்கு பழி வாங்கும் நினைப்பு இப்போது தகர்ந்தே போனது.நினைத்து வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இப்போது தோன்றியது. "எப்படிலாம் உருகி காதலித்தோம்,எப்படி என்னால் அவளை அப்படி நினைக்க முடிஞ்சது,ச்சே எவ்வளவு கொடூரமா யோசிச்சிருக்கேன்".

இருந்தாலுமே இது முடிந்துபோனதுதான் ஒருபோதும் அவள் திரும்பி வரப்போவதில்லை அதிசயமாக ஏதும் நிகழ்ந்தாலன்றி. மறக்க கற்றுக்கொண்டாக வேண்டும், முழுவதுமாக. கடினமான காரியம்தான். எதையாவது நினைத்து தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. யோசித்துப் பார்த்தால் அப்படி ஒன்றும்கூட  இருக்கத்தான் செய்தது குஞ்சுவுக்கு.

உண்மைதான் தனு இப்படி போனது எங்கோ ஒரு மூலையில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியிருந்தது என்றால் நம்ப முடியாதுதான். திகைப்பாக இருக்கலாம் ஆனால் அது அப்படித்தான். பொதுவில், ஏமாற்றப் பட்டுவிட்டதாக தெரிந்தாலும் அதை அவ்வாறு எடுத்துக்கொள்ளாமல் வேறுவிதமாக அதாவது தனிமைப் படுத்தப்பட்டதாகவோ நிராகரிக்கப் படுவதாகவோ இல்லை கைவிடப்படுவதாகவோ எழும் எண்ணம் நம்மை முன்னெப்போதும் இல்லாத அளவு சுதந்திரமாக உணரச்செய்கிறது, புத்துணர்ச்சியாகவும்தான்.  அப்படி அதுவரை ஏற்கனவே பழகியும் விட்டிருந்தான்.அப்படியான சமயத்தில் தான் விரும்பியதை செய்ய எது தடையாக இருந்ததோ அந்த கட்டு  உடைந்திருக்கும். இது ஆபத்தான நிலைதான்.அதுநாள் வரை கட்டுப்பாடற்ற சிந்தனையோட்டத்தால் உருவாகியிருந்த தன்னுடைய அகம் பாதிக்கப்படும் என்ற தவறான புரிதலாலேயே இந்த மாதிரியான உறவுகளை தவிர்த்தும் வந்திருந்தான் குஞ்சு. அப்படியொரு நிலையில் இருந்த போதுதான் தனுவுடன் பழக்கம் ஏற்பட்டது. ஆனாலும் மாற்றிக் கொள்ளவுமே தயாரகத்தான் இருந்தான்.  நிலைமை  அப்படி இருக்கையில் யாருக்காக இத்தனை நாள்  தன்னையே நகலெடுத்துக் காட்டிக் கொண்டிருந்தோமோ அவளால் நிராகரிக்கப் படும்போது இந்த விடுதலையுணர்வு எழாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.

ஆனாலும் தனிமையை விரும்பும் ஒருவன் இருக்கமுடியுமா என்ன.சில சமயங்களில் அதை விரும்பலாம்.முழுவதுமாகவே ஒருவன் தன்னை தனிமையில் தள்ளிக்கொள்ள விரும்பமாட்டான் என்றுதான் தோன்றுகிறது.ஆனால் அதற்கு பழகியவன் தான் குஞ்சு.குடிகாரனுக்கு சரக்கு அடிச்சதுக்கு பின்னாடி வரும் புது உற்சாகம் மாதிரி. குடி பழகிவிட்டதாலேயே பழகிப்போன உடல் ஒரு கட்டிங் உள்ளே சென்றால்தான் சகஜ நிலைக்கு திரும்பும். சாதாரணமாகவே தனிமை பழகிவிட்டவனுக்கு அனுதினம் அவ்வாறு அதை திரும்பத் திரும்ப உணர்த்தக்கூடிய மெய்ப்பிக்கக்கூடிய சம்பவங்கள் அவனை உற்சாகமூட்டத்தான் செய்கிறது. நிச்சயமாக இது  ஒரு அபாண்டமான பொய்  போலத்தான் தெரிகிறது, இதை  நமக்கு நாமே திருப்தியடைவதற்காக வேண்டுமானால்  சொல்லிக் கொள்ளலாம் . ஆனால் அப்படித்தான் சமாதானமடைந்தான் குஞ்சு.

இப்போது மீண்டும் பின்வீட்டு மாடியில் ஏதோ அரவம் கேட்டது. மறுபடியும் அவளேதான். ஏனோ இப்போது திடீர் கிளர்ச்ச்சி அடைந்தவனாக காணபட்டான். உண்மையில் இத்தனை நாள் இதை கட்டுப்படுத்திதான் இருந்தான் தனுவுக்காக.அந்தக் கட்டுப்பாடு இப்போது இல்லையென்பதால் அந்த கிளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம், ஆக முடிவில் உண்மை இப்படித்தான் இருக்கிறது, அதாவது,

கொளுத்துகிற வெயில்லயும்  ஜீன்ஸ் பேன்டை அணிந்துகொண்டு தொடை இடுக்கில் ஏற்படுகிற அரிப்பையும் பொருட்படுத்தாமல் வெளியுலக மனிதர்களிடையே சிரித்துப் பேசி வீட்டுற்க்கு வந்ததும் பேன்டை கழட்டி காலை நீட்டி விரிச்சி போட்டு விட்டத்தை பார்த்து காத்து வாங்குகிற சுதந்திரத்தைதான் இப்போது தனு தன்னை கழட்டிவிட்டதன் மூலம் அடைந்திருந்தான் என்பது ஆச்சர்யமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் தான் இருக்கிறது.

Wednesday 26 February 2014

நொந்தகுமாரன் கலம்பகம்

'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த மரியாத கூட இல்ல உனக்கு, அத எப்பவோ நீ கெடுத்துக்கிட்ட, தள்ளிப் போ அங்க'

கோபத்தை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக கதவை ஓங்கி அறைந்துவிட்டு செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பினான் குமர். பின்பனி இரவு,கிட்டத்தட்ட தெரு அடங்கும் நேரம். நடக்கையில்  கோபத்தில் கொதித்துப் போயிருந்த இரத்தம் குளிருக்கு அடங்குவதாய் இல்லை. 

'இன்னும் கேட்டிருக்கனும் அவன,மூஞ்சி தொங்கி போச்சில்ல இப்ப உனக்கு, சாவுடா' உதிரியாக மனதுக்குள் திட்டிக்கொண்டே நடந்தான்.நெடு நாட்கள் அடக்கி வைத்திருந்தது,நிம்மதியாகவும் இருந்தது.வீழ்த்திவிட்ட நிம்மதி.

ஓரளவுக்கு சுள்ளுனு உறைக்கிற மாதிரியும் தெளிவாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் அனிச்சையாக இப்போது வெளிவந்தது மனநிறைவாகத்தான் இருந்தது. ஆச்சர்யமாகவும்தான், இல்லையென்றால் உணர்ச்சிவசப்பட வேண்டியதாய் இருந்திருக்கும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால்.பெருமூச்சொன்று விட்டுக்கொண்டான்.

தெரு அமைதியாகத்தான் இருந்தது,நாயொன்று வள்ளென்று குரைத்தது.கீழே கிடந்ததிலேயே கொஞ்சம் பெரிய கல்லை எடுத்து முழு பலத்தையும் பிரயோகித்து எறிந்தான்,அது எங்கோ விலகிச் சென்று சுவற்றில் அடித்து இரண்டாக உடைந்தது, இன்றில்லை என்னைக்குமே குறி சரியாக இருந்ததில்லை அது தெரிந்திருக்குமோ என்னவோ எந்த சலனமும் இன்றி நின்றிருந்தது அந்த நாய். 'சனியனே ஓடிடு' என்று ஆற்றாமையில் கத்திவிட்டு நடந்தான். எப்படினாலும் வீட்டுக்கு திரும்பி போகத்தான் வேண்டும் இது ஒன்றும் புதிதில்லை. இதற்க்குமுன் கூட இப்படி நடந்திருக்கிறது, ஆனால் அப்போதெல்லாம் கோபம் அதிகமாகி பேச்சே வராது, ஒரு முற்றிய சமயத்தில் 'வாய மூட்றா, பேசாத' சத்தமாக கத்திவிட்டு கிளம்பிவிடுவான், 'சே சரியா திட்டாம வந்துட்டோமே' என்று நினைத்து வருந்தியதுண்டு.

பெரும்பாலும் அப்பாதான்  முதலில்  சண்டையை ஆரம்பித்து வைப்பதால் அவர் நிலையாகத்தான் இருப்பார், இவனுக்கு ஆரம்பத்திலேயே உடல் சூடேறிவிடும். அவரின் புண்படுத்தும் வார்த்தைக்கான சரியான பதிலை சொல்லத் தெரியாமல் அழுத்தம் அதிகமாகி வாய் குழறி இயலாமையினால் ஒன்று எதையாவது போட்டு உடைப்பான் அல்லது ஒருமையில் பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.ஆனால் இந்த முறை நிதானமாக இருந்தான்.

நெடு நாட்கள் மனதுக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டான். தக்க தருணம் அமையும் வரை காத்திருப்பது. எதிராளி இங்கு தந்தையாதலால் வீழ்த்துவதென்பது எளிதான வழிதான். நிராகரித்தல், மகன் என்ற அந்த அடிப்படை நம்பிக்கையில் அவர் எடுத்துக்கொண்ட அக்கறையோ அத்துமீறலோ அல்லது எல்லா அப்பாக்களுக்கும் மகன்களை காட்டிலும் மகள்கள் மீது காட்டப்படும் அதீத பாசத்தின் உளவியலால் இயற்கையாகவே உள்ள அந்த புரிந்துகொள்ளமுடியாத பகையோ அது எதுவோ கன்றாவியோ அந்த அடிப்படையை நிராகரித்தல். இதை அவன் சிந்திக்காவிட்டாலும் நிராகரிப்பு என்பது இங்கு எளியதான ஒரு போர் தந்திரம் என்பதை இயல்பாகவே அறிந்திருந்தான்.

'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இன்னிக்கி சொல்லியாச்சு,எல்லா அப்பனுங்களும் இப்படித்தான் இருப்பனுங்களா,இல்லையே ஒவ்வொருத்தனும் அவனோட பையனுக்கு எப்டிலாம் சப்போர்ட் பண்றான்.இவனும் இருக்கானே எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே, அந்த மாதிரி சொல்லியே அது என்னோட குறை இல்லைனாலும் அப்படியே ஆக்கிட்டான்,ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு,சின்னப் பையனா இருக்கும்போதேதான் ஆரம்பிச்சிட்டான்,கூட படிக்கிறவன சொல்லிக் காட்டி திட்றது, அவனப் பார்த்து திருந்தேன்டா, அவன் மூத்திரத்தக் குடிடான்னு, அப்பவே அப்பிருக்கனும் இவன. ஒவ்வொரு விஷயத்துக்கும் இதுமாதிரியே சொல்லி என்னோட தன்னம்பிக்கை, சுயமதிப்பீடு எல்லாத்தையும் தகர்த்துட்டான். இன்னிக்கி சின்னதா எதாவது ஒன்னு செய்யனும்னா கூட எவ்வளவு சந்தேகம்,பயம்,அவநம்பிக்கை, வாழ்க்கையே கெடுத்துட்டான் ஒத்தா நல்லா வாயில வருது' வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.

ஏதோ படித்து,ஏதோ வளர்ந்து,ஏதோ ஒரு பட்டம் பெற்று ஏதோ வேலைக்கு செல்லும் சில சராசரிகளின் நிலைமையைவிட மோசம் என்று சொல்ல முடியாது ஆனாலும் அப்படித்தான் இருந்தது குமாரின் நிலைமை.தான் இவ்வாறு இருப்பதற்க்கு முழு காரணம் தன் தந்தைதான் என்று திடமாக நம்பினான்.சிறு வயதிலிருந்தே தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை செய்யவிடாமல் அவருடைய கனவுகளை தன்மீது  திணித்து, அதையும் செய்யமுடியாமல் அடைந்த தோல்விக்கும் தன்னையே பொறுப்பாக்கி, தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலும் சகமனிதர்களிடத்தில் ஏற்படும் அவமானமுமாக சேர்ந்து மனதின் எங்கோ ஆழத்திலிருந்து எப்படியோ எப்போதாவது மட்டும் வெளிப்படும் அச்சம் அச்சமயம் முதல் அதுவே அவனாக ஆனதும், பின் அதுவே பழகிப்போய் எந்த ஒரு சின்ன செயலுமே செய்வதற்க்கு பயந்து தயங்கி அந்த பலவீனத்தை மறைக்க தன்னை ஒரு சோம்பேறியாக வெளிக்காட்டிக் கொண்டு கோழை என்பதைவிட சோம்பேறி என்று சொல்வது பரவாயில்லை என்ற மனநிறைவோடு இருக்க உதவிய பெருமையும் தன் தந்தையையே சேரும் என்று முழுமையாக நம்பினான்.

பின்னாட்களில் சில அடிப்படை தவறுகள் தெரிந்தே செய்வதற்க்கும் தனக்கு நியாமான காரணங்கள் இருப்பதாக நினைத்து சமாதானமடைய வேண்டியிருந்தது. தவறென்று தெரிந்தபின்பும் அதில் மனம் ஒன்றிப்போக இதுமாதிரி கற்பிதம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.முதன்முதலில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அப்படித்தான் ஏற்பட்டது.எப்படியோ புகையை இழுத்து அதனுடைய போதையை அனுபவித்த பிறகு இது கேடு என்றும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் ஏற்பட்ட தோல்விகளும் அவமானங்களும் அதற்க்கு முழுபொறுப்பாளராக நினைத்த தந்தையையும் நினைக்கையில் உலகத்தில் தான் மட்டும் எல்லா சமயங்களிலும் எல்லாராலும் கைவிடப்பட்டுவிட்டதாக ஏற்பட்ட எண்ணம் தீராத தனிமை உலகம் ஒன்றில் தள்ளியது.தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதால் இந்த சின்ன சிகரெட் போதையை அனுபவிக்க தனக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நினைக்க வைத்தது அது.

இது எவ்வளவு அபாண்டமானதொரு பொய் என்றும் பின் அறிய நேர்ந்தது என்றாலும் வயது முதிர்ச்சிக்கேற்ப அதை தத்துவார்த்தமாக பரிசீலித்து எதிர்கொண்டு சமாதானமடைய கற்றுக்கொண்டான்.

இதையெல்லாம்விட அவன் தந்தைமேல் தீராத வன்மம் கொள்ள வைத்தது, தன்னுடைய காதல் விஷயத்தில் ஏற்பட்ட கசப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவரே காரணம் என்றும் நினைத்ததுதான்.காதலைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கல்லூரியில் சைட் அடித்து சுற்றித் திரியும்போது எப்படி நடந்தது என்று தெரியாமலேயே இருவருமே காதல் வயப்பட்டு உலகத்தையும் கூடவே தன்னையுமே மறந்த நாட்கள், தன் பலவீனத்தை மறக்கடிக்க செய்த நாட்கள், ஆனாலும் ஒரே பெண்ணை அளவில்லாமல் காதலிக்க  முடியாது என்பதாலோ இல்லை அப்படியும் காதலித்தால்  காதலை தவிர்த்து மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க நேரிடும் என்பதாலோ அவனுள் இருந்த அந்த பல்வீனமானவன் இப்போதும் எதிரிமறையாக சிந்தித்ததின் விளைவு அந்த காதலும் முடிவு பெறாமல் போனது.காதல் முறிந்த சில நாட்கள் அதன் வலியும் பின்னே 'அட கிடைச்ச சமயத்துல அவள அனுபவிக்க தவறிட்டோமே' என்று வாய்ப்பை தவறவிட்ட ஏமாற்றமும் தான் மிச்சமானது. பயங்கரம் என்னவென்றால் அதற்க்கும் தன் தந்தைதான் காரணம் என்று நம்பினான். அவனுள் இருந்த பலவீனமானவன் காதல் விஷயத்திலும் தலைத்தூக்கியதுதான் காதல் முறிவுக்கும் காரணமாக இருந்தது.அந்த பலவீனமானவனை உருவாக்கியது தன் தந்தைதானே என்று நம்பினான்.

எப்படியோ ஒருவாறு பட்டம் பெற்றாகிவிட்டாலும் வேலை தேடும் பயங்கரம் பயமுறுத்தியது. தோல்வியை ஒப்புக்கொண்டு மேற்படிப்புக்கு செல்வதென்றாகி கொஞ்ச நாள் தப்பித்து அந்த காலக்கெடுவும் முடிந்து இப்போது இப்படி இவ்வாறு இருக்கும் நிலைமைக்கு வந்திருந்தான். ஒன்று அந்த பலவீனமானவனை ஒழிக்க வேண்டும் இல்லை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கான போராட்டத்தில் சில நேரம் தோல்வியடைய நேரும்போது அவன் தந்தை இப்படியாக அவனுள் மிதித்து நசுக்கப் படுவார்.

'இவன்லாம் எதுக்குயா கல்யாணம் பண்ணி கொழந்த பெத்துக்குறான்,இப்டி சமூகத்துல ஒன்னுமில்லாம ஆக்கவா, இவனுக்குலாம் கல்யாணம் செஞ்சி வச்சான் பாரு அவன சொல்லனும், ஓத்தா வளர்க்க தெரியலனா எங்கயாவது தெருலயாவது விட்டிருக்கலாம்,சாதாரன மனுஷனுக்கு கிடைக்கிற சந்தோசத்தையாவது அனுபவிச்சிட்டு போயிருப்பேன்' ஆனால் அதுவொன்ன்றும் அவ்வளவு எளிதில்லை என்றும் உள்ளூர அறிந்திருந்தான்.

அப்படியொன்றும் மோசம் இல்லை. குமாரின் அடிப்படைத் தேவைகளை என்றுமே நிறைவேற்றித்தான் வந்திருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமலில்லை. அப்பாக்கள் என்றுமே மகன்களை புரிந்துகொள்வதில்லை. மாறாக எல்லா மகன்களும் அப்பாக்களை புரிந்துகொள்ளும் தருணம் ஒன்று நிச்சயமாக ஏற்படுகிறது.

அருகில் இருந்த கடையொன்றில் சிகரெட் வாங்கி பற்றவைத்து இழுத்தான். எப்போதாவதுதான், இது மாதிரி நியாமான காரணங்கள் அமையும்போது.புகைப்பிடித்து விட்டு மிஞ்சிய துண்டை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.இதுவும் கொஞ்ச நாளாகத்தான் மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும்போது மற்ற உருப்புகள் தங்களது அன்றாட கடமையை தானாகவே செய்ததின் விளைவு இது.பின் தொடைச் சதையில் சூட்டை உணர்ந்து அதை வெளியே எடுத்துப் போட்டான்.

இதெல்லாமே தான் நினைத்திருந்தால் மாற்றியிருந்திருக்கலாம் என்றும் சில சமயங்களில் தோண்றும்,ஆனால் தன் இயலாமையை மறைக்க எதன்மீதாவது முழுபழியையும் ஏற்றி வைப்பது அடைந்ததும் அடையப்போவதுமான தோல்விகளுக்கும் முன்கூட்டியே ஆறுதலாக அமையும் என்பதால் இது சாலச் சிறந்த வழியாக நினைத்தான். அதற்க்கான வேலைகளில் மனமும் மூளையும் விரைவாக இயங்கும்.நடந்து முடிந்த சம்பவங்களை அடுக்கடுக்காக நினைத்துப் பார்த்து காரண கர்த்தாவான தன் தந்தையையும் நினைத்து தவறு நம்முடையதல்ல என்று மனம் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும்.

புலம்புவதும் பிடித்துதான் போயிருந்தது ,மனதை பாதித்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து புதிப்பித்துக் கொள்வது தற்போதுள்ள வலிக்கு ஆறுதலாக இருந்தது.அப்படி ஒன்றும் நினைத்து மந்தஹாசம் புரியும் சம்பவங்களில்லைதான், தான் இவ்வாறு இப்படி இருப்பதற்க்கு அவை விளக்கம் அளிப்பதால் அடைந்த பொய்யான ஆறுதல்.

நடந்த களைப்பில் பசி அதிகமானது.

வீட்டுக்கு போனால் அவருடைய முகத்தை பார்க்க வேண்டியிருக்கும், நிச்சயமாக காயப்படுத்தும் என்ற எண்ணத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை உள்வாங்கி அதிர்ச்சியாகி தளர்ந்த அப்பாவின் முகம் ஞாபகம் வந்தது. தமிழ் சினிமா ஒன்றில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.நாயகனின் இதே மாதிரி புண்படுத்தும் வார்த்தையால் தந்தை கதாபாத்திரம் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்க்காரும்.பின் ஒரு நாள் தந்தையை நினைத்து கட்டிலில் போய் படுத்து கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு அழுகிற காட்சி.சினிமாவின் தாக்கம் இவ்வளவு தூரம் இருக்கும் என்று நினைக்கத்தான் இல்லை.அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான்,அது மாதிரி அழுதால் நன்றாகத்தானிருக்கும்.எதற்க்கு?எதற்க்கோ.

வீட்டுக்கு திரும்பி நடந்தான்.

அம்மாதான் கதவை திறந்தது. 'ஏம்பா அப்டி சொன்ன,சாப்ட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்குனு படுக்கப் போய்ட்டாரு' இப்படி ஒரு வசனத்தை அம்மாவிடம் எதிர்பார்த்தான்.இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக்த்தான் இருந்தது.காட்டிக்கொள்ளவில்லை.

'ஏன்டா சீக்கிரம் வந்து திண்ணுட்டு ஆள விட வேண்டியதுதான ஏன் இப்டி தூக்கத்த கெடுக்குற' அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

எதையும் பேசாமல் உள்ளே நுழைந்து அப்பா தூங்கிவிட்டிருந்த அறையை தாண்டிப் போய் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து எட்டிப்பார்த்தான்.அப்பாவின் குறட்டை ஒலி அதிர்ந்தது,தொப்பை வெகுவாக ஏறி ஏறி இறங்கியது.நன்றாக தூங்கிவிட்டிருந்தார்.மனதை தேற்றிக்கொண்டு பெருமூச்சொன்று விட்டான்.

சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான். இன்றைக்கு எப்படியாவது அழ வேண்டும். சுலபமான காரியம் போல் தெரியவில்லை.

அந்த சினிமா காட்சியை நினைவுப் படுத்திக் கொண்டான்.அப்பாவின் தளர்ந்த முகம் மீண்டும் வந்து  நெஞ்சை கணக்குமாறு செய்ய வேண்டியிருந்தது. அப்பானு இத்தனை நாள் நினைக்கலனா எப்படி எந்த உரிமையில் அவரோட காசுல வாழ்ந்துகிட்டு இருக்கோம், இதெல்லாம் எல்லா அப்பாக்களும் செய்ய வேண்டிய கடமைதானே என்று உள்ளூர இருந்த அசைக்கமுடியாத எண்ணம்தானே. கைவிடப்பட்டு தனிமையாகிவிட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் கயிற்றின் அறாத பிரிபோல சிறு நம்பிக்கைத் தழல் உள்ளே கனன்று கொண்டிருப்பது அவர் இருக்கிறார் என்ற உள்ளுணர்வுதானே. பின்னே யார் செய்த பிழை இது.வில்லன் நானேதானோ.எளிதில் ஒப்புக்கொள்ள முடியாதுதான், இன்று அழுதாக வேண்டுமாதலால் இதுவும் உதவலாம் ஆனால் இது மட்டும் போதாது.

அப்பாவிடம் தான் கூறிய வார்த்தைகளின் கடுமையை நினைத்தான். அதனாலா இல்லை எங்கோ மனதின் அடி ஆழத்திலிருந்து எல்லாம் தன்னுடைய தவறாகுமோ என்று எழுந்த குற்ற உணர்வாலா இல்லை தன்னிரக்கத்தாலா இல்லை சினிமாவில் அந்த நாயகன் அழும் காட்சியை நினைத்துப் பார்த்ததாலா எதுவென்று தெரியாமல் வாயை கையால் பொத்திக்கொண்டு உடைந்து அழத் தொடங்கினான்.

Tuesday 4 February 2014

சராசரிகளும் ஒரு உரையாடலும்

உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய ஆரம்பித்து விட்டது, இனி இது தணிய எத்தனை நாள் ஆகுமோ? அது எப்டி இவனுக்கு, அதுவும் MBBS படிச்ச பொன்னு,காலக் கொடுமைடா, எவ்வளவு சாதாரணமா சொல்றான், அட இவன் அந்த பொன்னுக்கு தகுதியான ஆளா இருந்தாக் கூட பரவாயில்லயே, மனசு அமைதியாகிடும்,இவனுக்கு எப்டி, அதுவும் ஆறு வருஷ காதலாமே, இப்படியெல்லாமா கூட நடக்கும்.உள்ளுக்குள் இவ்வளவு புகைச்சலை கிளப்பிவிட்டு எந்த சலனமுமின்றி வாங்கிக் கொடுத்த சரக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் குமார்.சின்ன வயசு  நண்பன். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம்.அதற்க்குப் பின் கூட சிறிது காலம் தொடர்பில் இருந்தோம்.

அன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைன்றதால நமக்கும் வேறு வேலை இல்லை இதற்க்கு முன் கூட இருந்ததில்லைதான்,நண்பனும் அவவாறேனு பார்க்கும் போதே தெரிந்தது அப்பவே மிதமான மப்புல இருந்தாப்டி.

எப்டி சொல்றதுனு தெரியல அப்போ என் கூட பள்ளி முடித்து கடைசி வரை சென்று வேலையில் உள்ளது சிலர்தான்.மற்ற அனைவருக்குமே பிடி இல்லை. அவர்களுக்கான ஏதோ ஒரு தருணத்தில் வழி தவறி போயிட்டாங்கனு தான் சொல்லனும்.அதுவும் குமார் நிறையவும் கெட்டுப் போயிருந்தான்.

கொஞ்ச நேரம் பழசுகளை சிலாகிச்சி பேசிட்டிருந்தோம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்த்து அது தொடர்புடையவர்களோடு  பகிர்ந்து கொள்வது நன்றாகத்தானிருக்கும், ஆனா சந்தோஷம்ன்றது அரிதாகிப் போன நாட்களில்,நனவில் நிறைவேறாத சில ஆசைகள் எப்பயாவது அபூர்வமாக கனவில் நடப்பது போலக் காண நேர்ந்து பின் திடீர்னு விழிப்பு வந்து அடையும் ஏமாற்றம் மாதிரி நெஞ்சடைக்கும் இதுவும்,முடிந்து போன விஷயம் என்ற பிரக்க்ஞை திரும்பும்போது.

அன்னைக்குதான் அந்த ஜீரணிக்கவே முடியாத விஷயத்தை சொன்னான்.

'ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம்,ட்ரீட் உண்டா மச்சி'-குமார்

இல்லைனும் சொல்ல முடியாது, பேன்ட் பாக்கெட்ல பர்ஸ் பொடப்பா இருக்கறத பார்த்திருப்பான்.ஒரு காலத்துல ரொம்ப க்ளோஸ்,அந்த் நினைப்பு இப்பவும்கூட இருவருக்குமே மங்காமல் இருந்ததால்,பக்கத்து டாஸ்மாக்கில வாங்கி வாட்டர் மிக்ஸ் செய்து அங்கேயே ஊத்திக்கிட்டான்.இடையில் மொபைலில் யாரோ அழைக்க சற்று தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தான்.

திரும்பி வந்து 'நம்ம லவ்வர்  மச்சி' நான் கேட்க்காமலே அவனே சொல்ல ஆரம்பித்து,MBBS முடிச்சிருக்கறதாகவும்,+2 முதலே லவ்வுனும் சற்று சுருக்கமாக ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டி முடித்தான்.

ஆள் பார்க்கறதுக்கு குடியும் சிகரெட்டுமாக இருந்தாலும் பொதுவாக காதலிக்கிற ஆண்களின் பாவனைகள் குமாரிடமும் இருந்தாலும் கூட 'இவனுக்குலாம் எப்டி செட்டாகும்' என்ற தவறான தீர்க்க தரிசனம் இருந்து வந்ததும் மேலும் அப்டி ஒன்னும் பய பெர்ஸ்னாலிட்டிலாம் இல்லை என்பதாலும் ஒரு சமயத்தில் அதையும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை,

'எப்டி மச்சி இந்த விபரீதம் நடந்தது,நீ வேற சும்மா வெட்டியா இருக்க,அப்டியே இருந்தாலும் அந்த பொன்னு வீட்ல ஒத்துப்பாங்களா?'

'அதுலாம் ஒன்னும் மேட்டர் இல்ல,ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சு'ஆர்வத்துடன் அவனோட மொபைல் கேமராவில் ஜோடியாக எடுத்த அந்த பொன்னோட புகைப்படத்தைக் காட்டி'இவதான்டா மச்சி, உங்கிட்ட காட்டாம யாருகிட்ட காட்டப்போறேன்'.கேட்ட கேள்வி சுருக்குனு பட்டிருக்கும் போல 'எப்டி பொன்னு,மடக்கிட்டேன் பாத்தியா' என்பது போல தோரணை இருந்தது.

'ம்ம் வாழ்த்துகள் மச்சி'

கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமானு குழம்பி ஒரு வழியா சரி பாருங்கனு வீட்ல ஒப்புதல் கொடுத்து பெண் பார்க்கும் படலம் தொடங்கி காட்டும் அத்தனைப் பெண்களின் புகைப்படங்களை விட பன்மடங்கு நன்றாகத் தானிருந்தது. 'காலக் கொடும, இவனுக்கா இப்டி'.

புகைச்சல் என்றும் சொல்ல முடியாது ஆனால் அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியாது.சில கசப்பான உண்மைகள் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சி.இவனோட காதல் எவ்வளவுதூரம் போகும்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பெண் வீட்டுக்கு தெரியாம ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறதும்,அந்த அளவு இவனை நம்பறதும்,அப்படி இவன்கிட்ட என்ன இருந்தது,என்ன கண்டுகிட்டா இவங்கிட்ட.

ஒரு பெண்ணால காதலிக்கப் படுறது எல்லா ஆமபளைக்குமே அது அவன் பிறந்ததுக்கான முதலான அர்த்தம்ன்ற உண்மையோ பொய்யோ,அதுவரை பெற்று வந்த அகஉலக அறிவு அதுமாதிரி தெளிவில்லாமல் உணர்த்தி இருந்ததாலும் நண்பனுக்கு அது இயல்பாக ஈடேறிவிட்டதாலும் அதனால் உண்டான கருகல் என் புற உலக அறிவின்மையைத்தான் தெள்ளத் தெளிவாக காட்டியது.

உண்மையில் இதை எப்படி புரிந்து கொள்ளனும்னு தெரியல.இல்ல இதுல புரியமுடியாத அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.ஆனா ஒன்னுமே இல்லைனு கண்டிப்பாக போக முடியாது என்றுதான் தோன்றுகிறது.

அதுவும் மருத்துவச்சி,தாங்கிக் கொள்ள முடியாதுதான். வெட்டிப்பய,குடி, சிகரெட்,ஹான்ஸ் எல்லாம் பழக்கமும் இருக்கு அவனுக்கு எப்டி இந்த பொன்னு?சிரிப்பாகவும் இருந்தது.அடப்பாவி அவன் உன்னோட நண்பன்டா, இப்டியா வயிறி எரிஞ்சி புலம்புவ.அதுதான் பிரச்சணை அவனும் என்னப் போலத்தான நா சுமார் மூஞ்சினா அவன் ரொம்ப சுமார் மூஞ்சி,மயக்குற அளவுக்கு ஆணழகன் கூட இல்லையே.இந்த சூட்சமம்லாம் புரிஞ்சிருந்தா நாமளும் பல ரவுன்ட் வந்திருக்கலாமோ அல்லது அது மாதிரி சூட்சமம்லாம் எதுவுமே அதில் இல்லையோ என்னவோ?

நமக்கும் தானே நடந்தது அது,கலைவாணி கூட நம்மகிட்ட நெருங்கிதானே வர முயற்சி செஞ்சா.நாமதான் அது ஏதோ பெரிய தப்புனு விலகி போயிட்டோம்.அப்போ இருந்த புரிதல அப்படி.ஆனாலும் ஆசை விடலயே நானும்தானே சைட் அடிச்சேன்.என்ன செய்யறது.ரெண்டு வருஷம் அப்டியே பார்த்துகிட்டே இருந்தோம்,அவளும் என்னென்னமோ செஞ்சா,நமக்கு தான் அது என்னனு புரியவே இல்ல,மக்கு,கடைசில 'போடா பொட்டை'னு சொல்லிட்டு போயிட்டா.எதுக்கு அப்படி சொன்னா நாம என்ன செய்யாம இருந்தோம்,பார்த்து சிரிச்சேன்,சிரிச்சேன்,வெறிக்க வெறிக்க பார்த்தேன், எங்க்கிட்ட முன்னாடி வந்து வேணும்னே குனியும்போது வச்ச கண் விலகாமலே பார்த்தேன் வேற என்ன செய்யனும்.

அவ என்ன நினைக்கிறானு எனக்கு எப்படி தெரியும்.சொன்னாத்தானே தெரியும்.ஆமா நானாவது சொல்லிருக்கலாம்.நான் எப்டி சொல்லுவேன் நான்தான் அது சரியா தவறானு புரிஞ்சிக்க முயற்சி செய்தே காலம் போயிடுச்சி.அட அவளாவது சொல்லிருக்கலாம் 'உன் கூட ஒரு நாள் படுக்கனும்'னு, சொல்லிருந்தா எப்படியாவது முடிச்சிருப்பேன்.ஆனா அந்த பொன்னு என்ன நினைச்சிருக்குமோ ஒரு வேளை என்னிடம் வேற எதாவது பரிவு,கணிவு இல்லை நவரச பாவணைகள் எதாவது எதிர்பார்த்திருக்குமோ என்னவோ? எப்டியோ அதை புரிந்து கொள்வதற்க்குள் கைமீறிப் போயிடுச்சி.

காதல்னு வேறு சொல்லுறான்.எப்படி காதல் வந்தது அந்த பொன்னுக்கு இவன பார்த்து.ஐய்யோ மண்டையே வெடிக்கிற போல இருக்கு.நானும் தான் காதலிச்சேன்.ஆனா எப்டி அந்த ஈர்ப்பு வந்தது.சொல்லவே அசிங்கமாத்தான் இருக்கு.அப்பவே எப்படி நாட்டுக்கட்டை மாதிரி இருந்தா அவ.அதை பார்த்துதான சொக்கிட்டேன்.எப்படியோ காதல் வந்து தொலைஞ்சிடுச்சி. அதைக் கூட க்ரிமினல் கேஸ் ஒன்னுல போஸ்ட் மார்டம் ரிப்போர்டுக்காக மாட்டிகிற பொனத்த அறுக்குற மாதிரி அந்தக் காதலை அறுத்துக் குழப்பி, புதைத்துப் பின் எழுப்பி ஒருவழியா அது காதல்தான்னு தெளியுற சமயத்துல எல்லாம் போச்சு.

வேற!!!!நினைத்து பார்த்தா நிறையவேதான் இருக்கு இதுபோல சம்பவங்கள்.குமார் அது மாதிரி ஒரு சம்பவத்த புரிந்துகொண்டு இல்லை அதில் அவ்வாறு சிந்தையை கசக்கி பிழியும் அளவில் ஒன்றுமே இல்லையென்ற மனோபாவம் இயற்கையாகவே இருந்ததால் அந்தப் பெண் அவனை விரும்பியிருப்பாளோ?

உலகத்தை சுத்தி வந்து ஞானப்பழத்தை பெறமுடியாது போன முருகனுக்கு என்ன மாதிரி வெறுத்துப் போயிருப்பாரோ அப்படித்தான் இருந்தது.அவனுக்கு மட்டும் அந்தப் பழம் கிடைத்தது எப்டி,அங்கிள் வயசு ஆகிப்போன சமயத்துல இந்த மாதிரி ஏமாந்து போனதாக வரும் எண்ணம் நல்லதுக்கில்லைதான்.அப்டி ஒன்னும் வயசு ஆகிடல பார்க்கலாம்.

பார்க்கவே ரவுடி மாதிரி இருக்கான்,நல்லா ஜாலியா வாழ்க்கையை கடத்துறான்.இதுலாம் தப்புனு ஒதுங்கி வீட்ல சொல்லிக்கொடுத்ததை அறம்னு நம்பி வளர்ந்து ஏமாந்து  புலம்பல் தான் மிச்சம்.நானாவது தேவலாம்,அந்த கேஸ் கம்பெனி ஓனர் பையன் ஒருத்தன் இருக்கானே,ஐயோ உலகமே தெரியாம இல்ல வளர்ந்திருக்கான் முப்பது வருஷமா,அம்பி மாதிரி, நாமளாவது இப்ப யோசிக்கிறோம், அவனுக்கு,சொன்னாலும் ஏதோ 'அபிஸ்டு,அபச்சாரம்'னு சொல்லிட்டு போவான்.அதுவும் நல்லதுதான் ஒருவகையில்.

இது நன்மை இது தவறுனு முன்கூட்டியே பழுக காய்ச்சி அடித்து அடித்து இறுக வைத்து விட்ட சூழ்நிலை நம்மளோடது.அப்டியே இருந்துட்டா பரவாயில்ல, உண்மைனு எதையோ இந்த மாதிரி தெரிஞ்சிக்கும்போதுதான் கடைசில என்ன இழந்தோம்ன்றது தெரிய வருது.தெரிஞ்சும் ஒன்னும் பலனில்லை,செக்கு மாட வெளிய அவுத்துவிட்டா சுத்தி சுத்திதான் வரும்.

குமாருக்கு இந்த கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கலாம்,அதனால பிள்ளையார் கணக்கா ஞானப்பழத்தை எடுத்துகிட்டான்.

*****

சரக்கு முழுவதையும் குடித்துவிட்டும் நிதானமாகத்தான் இருந்தான் குமார்.

பாக்கெட்ல இருந்த சிகரெட் ஒன்ன எடுத்த பற்றவைத்து இழுத்தான்.

'நிறைய கெட்டுபோயிருக்க போல'அந்த கணத்தில் நினைத்து கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது,ஹான்ஸ்,சரக்கு பழகவில்லை என்பதான அற்ப காரணங்களால்.

'எப்டி ரவுடி மாதிரி தெரியுதா'

'கிட்டத்தட்ட'

'இல்ல மச்சி நிறைய பிரச்சணை'

'உனக்கு என்னடா பிரச்சணை,ஜாலியா இருக்க'

'உனக்கு தெரியாதுடா,வேல ஒன்னு வாங்கி தர்றேன்னு சொல்லி ஒருத்தன் ரெண்டு லட்சம் ஏமாத்திட்டான்,வீட்ல வேணாம்னு தான் சொன்னாங்க நாந்தான் சண்டை போட்டு கடன் வாங்கி...இந்தப் பிரச்சணை போதாதுனு போன மாசம் போதைல தெருல  மூஞ்சிய பேத்துட்டேன்,எப்படான்னு இருக்கானுங்க, 'கவலை தொணிக்கும் தோரணையில் பேசியது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.

நீ ஒன்னும் இதுக்குலாம் கலங்குற ஆளில்லயே மச்சி' செஞ்சதுக்கு வருந்தி பின்னாடி நினைத்து பார்க்காத எதுவும் தவறு இல்லைதான்.

'இல்ல மச்சி,வீட்டு பக்கம் போயே ரொம்ப நாளாச்சி,வீட்லயும் உள்ள விட மாட்றாங்க,+2 பாஸ் பண்ணவே நாலு வருஷம் ஆயிடுச்சி,அப்றம் இன்ஜினியரிங் சேர்ந்து, அதுக்குள்ள நா பார்த்த சின்ன பசங்கெல்லாம் வேலைக்கு வந்துட்டானுங்க, அப்போ எதுவும் தெரியல, படிக்கலனாக்கூட எதாவது தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பேன, எவன் மூஞ்சிலயும் முழிக்க முடியல' போதையேறிய கண்களோடு தன் வலிகளை சொல்லி, சிகரெட் புகையை வெளியே ஊதி,அவனுள்ளும் நானறிய வாய்ப்பில்லாத அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யாத துக்கத்தையும் சற்று ஊதி இலைபாற நினைத்தவன் போல மேலும் தொடர்ந்தான்.

'வீட்லயும் முன்ன மாதிரி இல்ல,எத்தனி நாளைக்குதான் அவங்களும் பொறுத்து போவாங்க, இந்த கஷ்டத்த மறக்க சரக்கு, அடிக்கலனா துக்கமே வரமாட்டேங்குது,ஒன்னு தெரியுமா? நா வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது, அக்கா வீட்ல காசு வாங்கி திண்ணுட்டு, குடிச்சிட்டு திரியுறேன்,எவனாவது மாட்டுவான்,நாள் ஃபுல்லா சரக்குதான்,போதை இறங்கனதுமே என்னோட நிலைமைய நினைச்சி பார்த்தா நெஞ்ச அடைக்குது,எப்படி உயிரோட இருக்குறேன்னே தெரியல மச்சி,நரக வேதனையா இருக்கு,இதுல வேற அந்த பொன்னு,என்ன செய்யுறதுனே தெரியல,நானே என்னோட லைஃப கெடுத்துகிட்டேன்னு தான் நினைக்கிறேன்' அவனோட வேதனைகளை சொல்லி என்னோட அர்த்தமே இல்லாத புலம்பல்களை இன்னும் அர்த்தமில்லாததாக்கினான். .

'அந்த பொன்னுக்கு இதுலாம் தெரியுமா டா'

'வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்'

கொடும கொடுமனு இங்க வந்தா இங்க ஒன்னு தலைய விரிச்சி போட்டுக்கிட்டு டிங்கு டிங்குனு ஆடிச்சாம் அந்த மாதிரித்தான் இருக்கு.

'ம்ம் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சணை'

'சரி விடு அது என்னோட கஷடம்,அப்றம் உனக்கு கல்யாணம் எப்போ? முடிச்சிட வேண்டியதுதான'

'கல்யாணம் போயிட்டிருக்கு மச்சி,பாக்கலாம்'

'ஒன்னும் யோசிக்காத ,வீட்ல பார்க்குற பொன்ன பண்ணாத்தான் நல்லது,எந்த பிரச்சணையும் இல்ல,பின்னாடி எதாவது கஷட்ம்னாலும் கூட நிப்பாங்க' அவனடைந்த வாழ்க்கைப் பற்றிய புரிதல் அறிவுறையாக வந்தது.

'ஆனா நீ பரவால்ல மச்சி, ஞாபகம் இருக்கா அப்போ சின்ன வயசுல வீட்டுக்கு வருவ,பட்டை போட்டுக்கிட்டு,பொட்டு வச்சிக்கிட்டு,எங்க அம்மா உன்ன சொல்லித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க,அப்போ இதை உங்கிட்ட சொன்னது இல்ல,சொல்ல முடியல பொறாமையாவும் இருக்கும்,இப்பக் கூட உன்ன வீட்ல கேட்பாங்க,நானும் உன்ன மாதிரி அப்பலாம் செஞ்சி பார்த்திருகேன்,சாமி கும்பிடுவேன்,காலைல எழுந்து புத்தகத்தை எடுத்து வச்சிக்கிட்டு படிக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கேன் ஆனா என்னோட ஆர்வமெல்லாம் வேறயா இருந்துச்சி அதனால முழுசா செய்யமுடியல'எதோ ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லி முடித்தான்.

இவன் என்னடா இப்டி புலம்புறான்.அதையெல்லாம் நினைச்சி வெட்க்கபட்ட நாளெல்லாம் இருக்கு.

இவன மாதிரியே நம்மளால சொல்ல முடியுமா,"எப்டி மச்சி அந்த பொன்ன உஷார் பண்ண,சூப்பர்டா எங்கயோ மச்சம் இருக்கு மச்சி உனக்கு, நானும் ரெண்டு மூனு ட்ரை பண்ணேன் எல்லாம் மேட்டர் மச்சி,இப்ப சைட் அடிச்சா மொறைக்க பாக்குறாளுக டா,எல்லாம் காலம் கடந்து போச்சு"இப்டி சொல்ல முடிஞ்சா அது அவனோட புலம்பலுக்கு என்னோட சோடியா இருக்குமா தெரியாது.சொல்லலாம் தான்.ஊரு ஒத்துக்காது.

குமாரோட சூழ்நிலை வேறு கட்டுப்பாடு அதிகம் இல்லாத ஒன்று,காட்டு மிருகம் போல,நம்மளோடது மிருகக் காட்சி சாலை,ரெண்டு மிருகத்துக்கும் போராட்டம் இருக்கும்,காட்டுல அதோட இயற்கையான குணங்களோட ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராட வேண்டியிருக்கும்,கம்பிக்குள்ள இருக்குற மிருகத்துக்கு அந்த போராட்டம் இல்ல,ஆனா தன்னோட இணையை கண்ணுல காட்டாம ஊசி போட்டு கர்ப்பம் தெரிக்க வைக்கிற கொடுமை உண்டு,இந்த உண்மை எதுவும் தெரியாதிருந்து,சட்டம் வகுத்து வாழும் மனித சமூகத்தில் குமாரை வைத்து பார்க்கும்போது நம்மளோட புலம்பல்கள் ஒன்னுமே இல்லைதான்.

இல்லை இப்படியாகவும் இருக்கலாம்,அவரவரின் புரிதலில் தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் வட்டம் அதில் அமையும் சூழ்நிலைகள் பொறுத்து. சோதனைகள் இருவருக்குமே இருக்கும்தான்.துக்கமோ சந்தோஷமோ அதன் வடிவம்தான் வேறாக இருக்கும்,வீரியம் என்னமோ ஒன்னுதான்.

என்னவோ இன்னமும் புதிராகத்தான் இருக்கு.

'சரி மச்சி நீ என்கூட வீட்டுக்கு வா,உன் கூட வந்தா வீட்ல விடுவாங்க,வீட்ல உன்ன பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாங்க' போதை அதிகமாகி நிலைகொள்ளாமல் தள்ளாடினான் குமார்.

'வேணாம் இன்னொரு நாளைக்கி வரேன்,நீ வேற தள்ளாட்ற,வண்டில ஏறு வீட்டு முனைல விட்டுடறேன்'

'மச்சி நீ எதும் சாப்பிடலயேடா,வா பெப்சி குடி,இருபது ரூபா இருந்தா தா' எங்கிட்டயே காசு வாங்கி கடையில் பெப்சி வாங்கினான்.பாதி குடித்துவிட்டு கொடுத்தேன்.அதையும் வாங்கிக் கொண்டான்.

'இன்னிக்கி ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா,பார்க்கலாம் மச்சி' கண்கள் சொருகி குரல் தடுமாறியது குமாருக்கு.

'பார்க்கலாம் மச்சி' அவன் சொன்னதை ஆமோதித்து திரும்ப சொல்ல தோணவில்லை,எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது,தெளியவாவது செய்ததா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.