Monday 27 August 2012

ஒரு சன்டேவும் சில குறிப்புகளும்

ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்ற எதிர்நோக்கிய நாட்களெல்லாம் உண்டு,இப்போது இல்லை ,காலையில் விடுமுறை நாளென்பதால் பொறுமையோடு தின்ற ஐந்து தோசை,தோசை என்று சொல்ல முடியாது, வேண்டுமானால் அப்பம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் இது அதிலும் சேர்த்தியில்லை என்றுதான் தோன்றுகிறது,இரண்டு அப்பத்தை சேர்த்து வைத்தார்போல் தடிமம்,நான்கு சென்டிமீட்டர் ஆரத்துடன்,சில சமயம் இரண்டு ஆட்களுக்கு சேர்த்து சுட நேரும்போது ஆரம் ஆறு சென்டு மீட்டர் வரை நீளும்,சாப்பிட்டு உட்க்கார்ந்தால் எழுந்திருக்க தோணாது,வயிறு மந்தமாகி, சீரணமாகாமல்,வேலை நாட்களானால் அலுவகத்தில் குனிந்து நிமிரும்போது செரிமானமாக வாய்ப்புண்டு,மதிய சோறும் திங்கமுடியாமல் ஒருவாறு உருண்டு புரண்டு கணினி முன் தவம் கிடந்து,அதுவும் இல்லையென்றால் சில சமயம் தடித்த புத்தககங்களை கையில் எடுத்துக் கொண்டோ இல்லை
தலையில் வைத்துக் கொண்டோ,பெரும்பாலும்"போரும் அமைதியும்" அதே பத்தாவது பக்கம், தூக்கம் சொக்கிக்கொண்டு வரும்.இந்த புத்தகத்தை முடித்துவிட்டால் வாழ்நாள் சாதனைதான். முகப்புத்தகத்தில் சிறிது நேரம்.

 மணி நான்கு,செல்பேசி சிணுங்கியது,நண்பர்தான்,திரையரங்கில் ஆறுமணி
 காட்சி,என்ன படம் என்பதெல்லாம் இல்லை,மொழிபேதம் கிடையாது ஹிந்தியானாலும் சரி இரண்டரை மணி நேரம் கடக்க வேண்டும் அவ்வளவுதான்.எழுந்து குளித்துவிட்டு உடைமாற்றி கிளம்பலானான். ஒப்பனை செய்வதெல்லாம் அலுத்துவிட்டது,செய்துதான் என்ன?மங்கை, மடந்தை,அரிவை ,தெரிவைகள்  காமுறும் வகையொன்றும் இல்லை.
சைக்கிளை வெளியில் எடுத்து மிதித்தான்.

விடுமுறை நாளென்பதால் அவ்வளவாக சாலையில் வாகன நெரிசல் இல்லை, சில பல கனரக வாகனங்கள்,ஆண்கள்,பெண்கள்,சில ஆப்ரிக்க இளைஞர்கள் கூடவே பெண்களும், இருக்கமாக அரைக்கால் ட்ரௌசரும், மேலாடை கீழிறக்கப்பட்டு ,குலுங்க,நன்றாகத்தான் இருக்கிறது,வட மாநிலத்தவர் எண்ணிக்கயும் அதிகமாகத்தான் இருக்கிறது,  பத்து வருடம் முன்பு கூட மாநிறத்தைதான் வெள்ளையென்று நினைத்து அலைந்த காலமெல்லாம் உண்டு, இப்போதும் ஒன்றும் ஆகிவிட வில்லை,முயற்சி செய்யலாம்,அனால் நம்க்கோ,
"கோன் ப்னேகா குரோர்பதி",

"எத்தன மணிக்கு லவுட்டேங்கா",

"தீன் பஜேங்கா,துமாரா பேரு என்ன?",

"மேரா பேரு உஸ்தாத் அலிகான்.."

அவ்வளவுதான்.ஆங்கிலமும் குளறுபடிதான்,

"என்னப்பா வயசு ஆகிட்டே போகுது,பொன்னு பாத்திடலாமா"

"ஏதொ உங்க இஷ்டம்,உங்களுக்கு பிடிச்சிருந்தா சரி"

பொதுவான இந்த பதிலின் அந்தரங்கமான அர்த்தம் இப்போதுதான் புரியத் தொடங்குகிறது.

"தாயளி லெஃப்ட் சிக்னல் போட்டு ரைட்ல போறான் பாரு".

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஒரு வட இந்திய இளைஞனை வட்டார வழக்கில் வசைமாறி பொழிந்து கொண்டிருந்தார்.

                                                   ********************

திரையரங்கில் கூட்டம் இருந்தது முதல் வாரம் போல,நண்பர் சொன்னவுடன்தான் தெரிய வந்தது,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமென்று

"இந்த டைரக்டர் எடுத்த மூனு படமும் ஹிட்"

"அப்டியா.."

"ஹீரொயின் ஹிந்தில ஃபேமஸ்..ஆறுகோடி சம்பளமாம்.."

"ஓஹோ."

போஸ்டரில் ஹீரோயின் அழகாகத்தான் இருந்தாள்,வயசுப்பையன்கள் என்றில்லாமல் ஆண்கள் அனைவரும் காமறும் அதிரூப சுந்தரிதான், ஹீரொவுக்கு சற்று கிழடு தட்டியிருந்தது,அதை மறைக்க ரோஸ் நிற சுண்ணாம்பு,சிகரெட் குடித்து கருப்பேறிய உதட்டை மறைக்க சிகப்பு சாயம்,போஸ்டரில் கதாநாயகியை இறுக்கமாக  அணைத்து மார்பில் முகம் புதைத்து கொண்டிருந்தார்,நாயகி முகத்தில் உண்ர்ச்சி கொப்பளிக்க அவன் தலையை கைவைத்து அழுத்திக்கொண்டிருந்தாள்,

ஹம்ம்..கொடுத்துவைத்தவன்தான்,சும்மாவா ஆறுகோடியில்ல...

மேட்னி ஷோ முடிந்து,டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார்கள்..

கண்மூடி திறப்பதற்க்குள் மக்கள் கூட்டம் டிக்கெட் கவுன்டரை சூழ்ந்து கொண்டது,டிக்கெட் கொடுப்பவருக்கு நான்கு திசைகளிலும் கைகள் நீள அவரும் அலுக்காமல் கிழித்து கொண்டிருந்தார், அனைவருக்கும் டிக்கெட் உண்டு என்றாலும் விட்டுவிடுவார்களா..மக்களின் பாரம்பர்யம் என்னாவது, தமிழா தேசியமல்லவா..

"டிக்கெட் எவ்வளவுடா"

"கீழ நூறு..பால்கனி நூத்தியம்பது.."

சரி பார்க்கலாம் ஹீரோயினுக்காக,ஆறு கோடி சம்பளம், நூறு ரூபாய்க்கு மலிவா காட்டுறான்,பார்த்துவிட்டு போகலாம் ஒன்னும் குறையில்லை என்று
 தோன்றியது.

பெரும்பாலும் கல்லூரி இளைஞர்கள்,ஆண், பெண்,ஒரு ஆண் பல பெண்கள்,பல ஆண்கள் ஒரு பெண் என்ற விகித அடிப்படையில் அங்கங்கு சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள்,

"மச்சி ஒரு வாரத்துல அம்பது கோடி வசூலாம்..போன படத்தை பீட் பண்ணும்னு  பேப்பர்ல படிச்சேன்.."

"ஹீரோயின் அடுத்த படமும் தமிழ்லதானாம்..சம்பளம் எட்டு கோடியாம்..வெப்சைட்ல பார்த்தேன்.."

தங்கள் பொதுஅறிவை எடுத்து விட்டுக்கொண்டிருந்தனர் சிலர்,வெட்கமாகத்தான் இருந்தது இந்த செய்தியை படிக்காமல் விட்டோமென்று.

நண்பர் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார்.

உள்நுழையும்போதும் அதே அடிதடி..

எப்படியோ உள்ளே நுழைந்தாயிற்று..

தோதாக ஒரு இடம் தேடி அமர்ந்து சற்று மேல பட்டனை கழற்றி விட்டு ஆசுவாச படுத்திக்கொண்டான்.எதிர்புறம் சிலர் ஏற்கனவே படத்தை பார்த்திருப்பார்கள் போல,முன் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.கதை என்று இல்லாவிடிலும் அந்த சின்ன சந்தோசம் கெட்டுவிடக் கூடாதென்று காதை பொத்திக்கொண்டான்.

நாயகனைவிட கதாநாயகியை பற்றித்தான் பேச்சு அதிகமாக இருந்தது.ஆவலாகத்தான் இருந்தது,என்னதான் இருக்குமென்று பார்த்துவிடலாம்,

விளக்குகள் அணைந்தது,ரீல் ஓடியது,பெயர் போட்டார்கள்,கதாநாயகனின் பெயர் ஒவ்வொரு எழுத்தாக கீழிருந்து மேல் சென்றது,பின்னே அதிரும் மின்னணு வாத்தியங்கள் முழங்க. அரங்கமே அதிர்ந்தது விசில் சப்தத்தால்.சில இளைஞர்கள் பூ தூவினார்கள்,இருக்கையின் மீதேறி சட்டையை அவிழ்த்துப் போட்டு ஆடினார்கள்.ஹீரோ அறிமுக பாடல் முடிந்தவுடன் ஹீரோயின் முறை,கதாநாயகி அருவியில் குளிப்பது போன்ற பாட்டு,முழுக்க நனைந்து ஈரம் அப்பிய தாவணியுடன் தரையில் புரண்டு குதித்து, அவிழ்த்து, ஆட்டி, விரித்து,முங்கி கிரங்க வைப்பதுதான்,பாட்டு முடிந்தவுடன்தான் சற்று சூடு தணிந்தது போல் இருந்தது.நண்பரை திரும்பி பார்த்துக்கொண்டான். நண்பருடன் அரங்கில் வந்து அமர்ந்தால் பின் பேச்சே இருக்காது,ஒரே ஏரில் பூட்ட வேண்டியவை.கலா ரசனை கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்.

காட்சிகள் நகர்ந்தன,நாயகன் வழக்கமாக பயம், வீரம், இழிப்பு, அற்புதம், 
இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை போன்ற நவரச உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்,அதற்க்கேற்ப கதாநாயகியும் மறற 
கதாப்பாத்திரங்களும் எதிர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.அவ்வபோது அலுக்கும்போது கதாநாயகி பருவ உடல் காட்டி நடனமாடி...

படத்தில் ஹீரே ஹீரோயினை ரேப் செய்வதுபோல் ஒரு காட்சி,துரத்திக்கொண்டு ஓடுகிறார் அத்துவானக் காட்டில்,தாவணி கிழிந்தாயிற்று, ஓடுகிறாள்,காட்சிகள் ஸ்லோ மோசனில் ஓட,ஹீரோயின் குலுங்கி ஓடுகிறாள்,தோதாக மழையும் பெய்கிறது,அட்ரா சக்கை. மாட்டிக்கொண்டாள், தரையில் புரளுகிறார்கள்,நாயகனின் கைகள் படர்கிறது, அணைக்கிறது, இறுக்குகிறது,அரங்கமே மயான அமைதியுடன் இருக்கையில் கேமரா வானை நோக்கி மேலெழுகிறது,எல்லாம் முடிந்தது,மூலையில் உட்க்கார்ந்து விசும்புகிறாள்.உதறிவிட்டு கிளம்பிய கதாநாயகனை கைப்பிடித்து இழுத்து..

போதுமா..இதுக்குத்தானா...

என்று ஆரம்பித்து இரண்டு பக்க வசனம் தமிழ் உச்சரிப்பு உதட்டசைவோடு ஒட்டாமல் பேசி முடித்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த கதாநாயகனை கேமரா நூறு சத்விகிதம் சூம் செய்கிறது,முகம் கோணலாக மாற,மூக்கு புடைக்க,கண்களிலிருந்து கண்ணீர் துளி விழுந்து நாயகியின் கைகளை நணைக்கிறது...இப்போது நாயகனிடமிருந்து வசனம்..

இவ்வளவு நாளா ஒரு மிருகமா வாழ்ந்துட்டேன்,தெரியல்,தப்புனு தெரியல என்று மறுபடியும் நான்கு பக்கம்.கதாநாயகன் திருந்திவிட்டதை உண்ர்த்தும் வகையில் நாயகி தாவணியில்லாமல் கிழிந்த ஜாக்கெட்டுடன் 
பாதிபகுதிகள் தெரியவே ,கதாநாயகனை மார்போடு அணைத்துக்கொள்கிறாள்.

வழக்கமாக வில்லன் நடிகர்தான் ரேப் செய்வதெல்லாம், இது புதிதுதான் ஒருவேளை ஆறு கோடி சம்பளம் காரணமாக இருக்கலாம்

இடைவேளை போட்டார்கள்..

பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்,

"ஹூரோ திருந்திட்டான்,இனிமே வில்லன பழிவாங்குவான்"

வேறென்ன,

டாய்லட் போகலாம்,அங்கும் கூட்டம் முந்திக்கொண்டது,சுவற்றில் தமிழனின் ஓவியத்திறமைகள்,மனித உடலின் அனாட்டமி,இலக்கியங்கள்,சில் இடங்களில் மொபைல் நம்பர்கள் எழுதி  நூறு ரூபாய் என்றிருந்தது, செய்தித்தாளில் காய்கறி விலைப் பட்டியல்  ஞாபகம் வந்தது.என்ன கட்டுப்படியாகும்.அரசு குறுக்கிட்டு இதற்க்கும் அடிப்படை விலை நிர்னயம் செய்ய வேண்டும்.

பாப்கான் வாங்கி கொறித்து கொண்டு வந்து மீதிப்படத்தை ரசிக்கலாம்,வெளியில் விற்பதைவிட இரண்டு மடங்கு விலை,இருந்தாலும் வியாபாரம் நடந்துக்கொண்டிருந்தது,நாம் ரௌத்திரம் பழகுவது காய்கறி சந்தையில்தான்.இரண்டு பெப்சி வாங்கி குடித்துவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாயிற்று.

மீதி படம் ஓடிக்கொண்டிருந்தது,கதாநாயகன் பறந்து பறந்து பௌதிக விதிகளுக்கு கட்டுப்படாமல் சண்டையிட்டு கொண்டிருந்தார்.வசனங்கள் தெறித்தன,வாசகர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட வசனங்களாம்,பரிசும் உண்டு,நாயகன் உக்கிரம் அடங்கும்போதெல்லாம் நாயகியை முகர்ந்து தணிகிறார்.நம்மையும் த்ணிய வைக்கிறார்.இறுதியில் வில்லன் நாயகியை ரேப் செய்வதுபோல் காட்சி,ஆனால் இந்தமுறை ஓடுவதோடு சரி, வில்லனுக்கு அந்த அனுகூலம் இல்லை.இறுதியில் வில்லனும் நாயகன்
பேசும் வசனத்தால் திருந்திவிடுகிறார்.

படத்தில் எல்லாரும் திருந்திவிடுகிறார்கள்,பார்ப்பவர்கள் தவிர,படம் முடிந்து செல்லும் போது பேசிக்கொண்டார்கள்,ஹீரோயினுக்காக பாக்கலாம்,சரியான் சீன்றா மச்சி.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் முடிவெடுத்தாயிற்று இனி சினிமா பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்வதென.

செய்தித்தாளில் அசாம் கலவரம்,விலைவாசி உயர்வு,ஊழலுக்கெதிரான போராட்டம் ஆகியவற்றை பைப்பாஸ் செய்து சினிமா பக்கம், நேற்றைய படத்தை பற்றி போட்டிருந்தார்கள்,அதில் டைரக்டர் பேட்டி,

கீழே ஒரு துணுக்கு செய்தி,நடிகையின் கவர்ச்சி படத்துடன்

"நகைக்கடை திறப்பு விழாவில் மும்பை நடிகை இடுப்பை கிள்ளிய ரசிகருக்கு அடி,உதை"

போடு... சிரிக்கி பய புள்ள,ஆசைய பாரு,அவனவன் ஆறுகோடி குடுத்து கூட்டியாரானுவ,இவுருக்கு ஓசில கேக்குதா"







No comments:

Post a Comment